Saturday, 12 August 2017

காடுகளின் நண்பன் நமக்கேன் நண்பனில்லை?




//மனிதர்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பயன்படுத்தும்  நிலப்பரப்பு வரைமுறையில்லாமல் அதிகரித்துக்கொண்டே சென்று சமவெளிக்காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக குறுக்கி மலைகளுக்கருகில் கொண்டு சென்று நிறுத்திவிட்டோம். சமவெளிக்காடுகளில் வாழ்ந்த யானைகளை மலைகளுக்கும் அதனையொட்டிய காடுகளுக்கும் விரட்டியடித்த வேலையைத்தான் பல நூற்றாண்டில் நிறைவு செய்து முடித்திருக்கிறோம்.

சமீபகாலத்தில் அங்கேயும் விட்டோமா?///

உலக யானைகள் தின சிறப்புக் கட்டுரை..

மேலும் படிக்க: https://goo.gl/rrsoxf

Wednesday, 9 August 2017

புத்தகங்கள்

தேடிச்சென்றவையும்  எதிரில் வந்தவையும்....



சில புத்தகங்களைத் தேடித்தேடிச் சென்றேன்.சில புத்தகங்கள் எதேச்சையாக கண்ணில் பட்டன.என்ன கொடுமையென்றால் சில சூழலியல் புத்தகங்களும் பயணக் கட்டுரைகளும் பதிப்பாகி பத்துப் பதுனைந்து வருடங்களுக்குப் பிறகும் விற்காமல் இருந்தவற்றை நான் வாங்கியியிருக்கிறேன்.புள்ளிவிவரப்படி புத்தகங்கள் விற்பனை அதிகரித்திருப்பதாக திருப்பூர் புத்தக கண்காட்சியில் அருமைமிகு  கோவை சதாசிவம் எம்மிடம் சொன்னார்.ஆனால் சூழலியல் குறித்த புத்தகங்கள் அந்த அளவிற்கு விற்கிறதா எனத் தெரியவில்லை.....

இதில் நக்கீரன் நக்கீரன் அவர்களின் காடோடி மட்டும் ஐந்தாவது முறையாக நான் வாங்கியிருக்கிறேன்.அதை நண்பர்களுக்கு பரிசளிப்பதற்காக.அதை ஏற்கனவே மூன்றுமுறை படித்துவிட்டேன்.எமக்குள் பல மாற்றங்களை உண்டாக்கிய புத்தகம்.ஏன் உங்களுக்கும் கூட அது நிகழலாம்...

ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு மூன்றுமுறை சென்றாகிவிட்டது.பல்லாயிரம் நல்ல புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றது.நூற்றுக்கணக்கான ஸ்டால்களில் எதில் சென்று பத்தகங்களை வாங்குவது என நீங்கள் எம்மிடம் கேட்டால்.அவசியமாக பூவுலகின் நண்பர்கள்(நண்பர் Yoga Raj இருக்கிறார்),காலச்சுவடு,பாரதி புத்தகாலயம் ஸ்டால்களுக்கு சென்று வாருங்கள்....

ஒரே வருத்தம் நண்பர் Satheesh Muthu Gopal அவர்களின் "யாருக்கானது பூமி" -(கணையாழி பதிப்பகம்)இங்கும் கிடைக்கவில்லை. இனி ஆன்லைனில்தான் முயற்சிக்கவேண்டும் அல்லது அவராவது இறக்கப்பட்டு எமக்கு அனுப்பினாலும் பரவாயில்லை....

படியுங்கள் நிறையப் படியுங்கள் புத்தகங்களே என்னை நூறுசதவிகிதம் மாற்றியிருக்கிறது.எமது படிப்பு பழக்கம் தினத்தந்தியின் கன்னித்தீவில் துவங்கி அன்றைய அம்புலிமாமா,கோகுலம்,முத்து காமிக்ஸ்,ராணிமுத்து,குங்குமச்சிமிழில் ஆரம்பித்து பிரபஞ்சன்,சாண்டில்யன்,பாலகுமாரன் ஆகியோரை கடந்து இன்று வேறு வேறு பரிணாமங்களில் கொண்டு சென்றிருக்கிறது....

அன்றைய ஓவியர்களான கோபுலு,மாருதி,ராமு,ம.செ,ஜெ... போன்றவர்களையும் மறக்கமுடியவில்லை....

மீண்டும் சொல்கிறேன் பாடத்திட்டங்களில் உள்ள பாடத்தைப் படித்து தேர்ச்சியடைந்தால் மட்டும் அறிவென்பது கிடைத்துவிடாது.எம்மைப்பொருத்தவரை மிக்சர் சுற்றிக்கொடுத்த பேப்பர்கள் கூட நமக்குள் மாற்றத்தை உண்டாக்கிவிடும்.மிக்சர்பொட்டலங்கள்கூட நமக்கு ஆசானால் ஆச்சரியமில்லை....

ஆகவே அறிவென்பது நமக்கு எங்கும் கிடைக்கலாம்.அது இந்த புத்தகத் திருவிழாவில்கூட கிட்டும்.முயற்சியுங்கள்...

என்றென்றும் தேடலுடன் உங்கள்,
Ramamurthi Ram

Thursday, 3 August 2017

ஆலமரம்

ஆலமரம்
Banyan tree (Ficus bengalensis)



"ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி..."
-இந்த வார்த்தைகளை கேட்காத தமிழ் தெரிந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்...
ஆலமரம் போல் எந்த சூழ்நிலையிலும் துளிர்விட்டுத்தழைக்கும் மரத்தைப் பார்க்க முடியாது.எங்கு விழுந்தாலும் முளைப்பதற்கு மயற்சிக்கும். குறிப்பாக பறவைகளின் எச்சங்கள் மூலம் முளைக்கும் செடிகளுக்கு அபாரமாக வளரும் தன்மையுண்டு.பராமரிப்பற்ற சுவர்கள்,பாறை இடுக்குகள்,மரங்களின் இடுக்குகள்.என முளைப்பதற்கு தோதான எந்த இடங்களையும் கடுகினைவிடச் சிறிய அளவுடைய ஆலம் விதைகள் விட்டு வைப்பதில்லை....



இந்த நாட்டோடும்,மண்னோடும்,மனிதர்களோடும் நீண்ட தொடர்புள்ளது ஆலமரம்.பாலுள்ள மரங்கள் மீது பற்றும்,மரியாதையும் வைத்திருந்த இந்த மண்ணின் மக்கள்,ஆலமரத்தோடு வைத்திருந்த உறவோ சாதாரணமில்லை....
ஆதிகாலம்  தொட்டே ஆலமரத்தடி திண்ணைகள் இருந்திருக்கின்றன.வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்லவும் கிராமக் கூட்டங்கள் நடக்குமிடமாகவும்,வியாபாரம் நடக்கும் இடமாகவும் இருந்திருக்கிறது.வணக்கத்திற்குரிய மரமாகவும் இருந்திருக்கிறது. பல சங்கப் பாடல்களிலும் இடம்பெற்று வெட்டினால் பாவம்-தீங்கு உண்டாகும் என்ற அளவில் நம்பிக்கை இருந்திருக்கிறது.இன்றைக்குப்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை.மக்கள் வாழும் பகுதிகளிலும்,விவசாய நிலங்களிலும் அதிக அளவில் இருந்திருக்கின்றன்.அக்காலத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளையும், உணவுத்தேவைக்கான சிறிய விவசாய நிலப்பகுதிகளைத் தவிர்த்து விட்டு பார்த்தால், அத்தனை நிலங்களுமே வனக்காடுகளாகத்தான் இருந்திருக்கிறது. அதில் ஆலமரங்கள் பெருத்த எண்ணிக்கையிலேயே இருந்திருக்கிறது....



ஒரு ஆலமரத்தில் சிறியதும் பெரியதுமான பலவகைப் பறவைகள்,பூச்சிகள்,பல்லிகள்,அணில்கள்,எறும்புகள் போன்ற பல்லுயிர்களும் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக சார்ந்திருப்பதைப் பார்க்கலாம்.பல பறவைகளுக்கு விருப்பமான உணவு ஆலம்பழம்...



அலெக்சாண்டர் தமது படைகளோடு இத்தியாவினுள் நுழைந்த போது வியந்து ஆச்சரியப்பட்டு பார்த்தது ஆலமரத்தைத்தான்.நான்காயிரம் முதல் ஏழாயிரம் படைவீரர்கள் ஆலமரத்தின் கீழே தங்கியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பரந்த மரங்கள் இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.இன்றைக்கும் நானூற்றி ஐம்பது வருட பழமையான அடையாறு ஆலமரம் பல கதைகளைச் சொல்லும் சாட்சியாக இருக்கிறது.அது மட்டுமில்லாமல்,
ஆந்திர கதிரி திம்மம்மா ஆல மரம்,
உலகப் புகழ்பெற்ற கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள மாபெரும் ஆலமரம், பெங்களுருக்கு அருகிலுள்ள மரம்,
குஜராத்தில் இருக்கும் கபீர் வட், அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பஞ்சாப் பதேகார் மாவட்ட ஆல மரம்– நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன.பாண்டிச்சேரியிலுள்ள ஆரோவில் ஆலமரம் கூட ஆச்சரியமான அளவுதான். ஆயிரக் கணக்கான விழுதுகளுடன் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரே சமயத்தில் மூன்றாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை இந்தமரங்களின் கீழ்உள்ள நிழலில் தங்கலாம்....



ஆலம் விழுதுகள் பல மருத்துவ குணம் கொண்டது அதன் துவர்ப்புச் சுவையே பல்,ஈறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்பவையாக இருக்கிறது.
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி,
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"-இது காலகாலமாக தமிழ்பேசும் மக்களிடையே புழங்கிக் கொண்டிருக்கும் வெகு சாதாரண பழமொழி.ஆலமரம் முழுவதுமே மிகுந்த மருத்துவ பயனுடையது என்பதை மறுப்பதற்கில்லை.அதிலும் குறிப்பாக ஆலம் விழுதின் தண்டில் பல் துலக்கினால்,பல் மற்றும் ஈறுகள் தொடர்பான அத்தனை பிரச்சனைகளும. எளிதில் தீரும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை என்பதைவிட,அதுதான் உண்மை என அடித்துச் சொல்லலாம்.நான் நீண்ட நாட்கள் ஆலம் விழுதிலும்,கருவேலங்குச்சியிலும் பல் துலக்கியவன்....



ஒரு மொழியில் ஒரு பெருளிற்கு பல பெயர்கள் இருத்தல் என்பது,அது அந்த மொழிபேசும் மக்களோடு நீண்ட நெடுங்கால பிணைப்பில் உள்ளது என்பதை எளிதில் அறியலாம் அந்த வகையில் இந்த மரத்திற்கு,
இயக்கு,
ரோதம்,
காமரம்,
சோளி,
தோல்மரம்,
பாமரம்,
பூதம்,
வடம்,
பானோக்கி....
இன்னும் எத்தனை பெயர்களோ?!!!...
இப்படி பல பெயர்களில் அழைத்தாலும் ஆலமரம் எனப் பெயர் வந்ததற்கு காரணம் மிக அகலமான பரப்பளவில் வளருவதால் இதற்கு "அகல்மரம்"-என்ற பெயரே நீண்ட காலம் இருந்தது.பின்னர் காலப்போக்கில் இப்பெயரே மருவி ஆலமரம் என்கிற பெயர் நிலைத்துவிட்டது....



ஆலமரங்கள் நீண்டகாலம் நிலைத்துநிற்க விழுதுகள் முக்கிய காரணம்.கிளைகளிலிருந்து கீழே இறங்கும் விழுதுகள் விலங்குகளினாலோ அல்லது மனிதர்களாலோ இடையூறு இல்லாமல் இருந்தால் மண்ணில் ஊன்றி உறுதியாகி கிளைகளைத் தாங்கி,தாய்மரத்தின் சுமையைக்குறைப்பதோடு மரம் பரந்து விரிவடையவும் உதவுகிறது.நான் பார்த்த மரங்களில் குறிப்பாக கர்நாடகாவில் சில ஆலமரங்கள் விழுதுகள் இல்லாமலேயே இருந்தன (அதற்கான காரணத்தை அனுபவசாலிகள் யாராவது விவரித்தால் உதவியாக இருக்கும்)அதே சமயத்தில் நம்மூரைவிட மிகப் பருத்த மரங்களையும் பார்க்க முடிந்தது.ஆலமரகுடும்பத்தின் வேறு இனங்களாகவும் இருக்கலாம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் அங்கும் அந்த அழகான மரங்கள் சிதைந்து நின்ற காட்சிகள் மனதை இன்னும் வருத்திக்கொண்டே இருக்கிறது....



கரூர் பக்கத்தில் உள்ள நெரூரில் கோட்டைமேடு என்ற இடத்தில் ஒரு பெரிய ஆலமரம் அதில் எக்கச்சக்க பாலித்தீன் பைகளும் சில வைக்கோளில் செய்த குடுவைகளையும் கட்டப்பட்டிருந்தன்.அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது அதனுள் மாடுகள் கன்றை ஈன்றபின் வெளித்தள்ளும் நஞ்சுக்கொடியை கொண்டுவந்து ஆலமரம் போன்ற பால்மரங்களில் கட்டிவிடுவார்களாம்.அப்படிக் கட்டினால் அதிகளவில் பால்சுரக்கும் என்கிற நம்பிக்கையாம்.நம்பிக்கை இருக்கட்டும் அதற்காக பாலிதீன் பைகளிலா கட்டுவதா ? அது காய்ந்துவிடாமல் நாற்றமெடுத்து,ஈக்கள் மொய்த்து சுகாதாரகேடும்,சூழல் கேடுமல்லவா நடக்கிறது. வைக்கோலை பயன்படுத்தினால் பிரச்சனை வராதே.....



ஆலமர அனுபவங்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வளவு தகவல்கள் இருக்கிறது. இங்கு இப்போதைக்கு இது போதும்.அதிக வெப்பம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் ஆலமரம் போன்ற அதிக நிழல்தந்துஅதிக ஆக்ஸிஜன் தரும் மரங்களே இன்றைக்கு தேவை என்பதை உணர்ந்து பாதுகாப்போம்.பயன்பெறுவோம்...
சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
படங்கள்,
Divya Barathi Ramamurthi
விரிவான தகவல்களுக்கு,
https://m.facebook.com/story.php?story_fbid=1363912550391443&id=100003181323647

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...