Wednesday, 21 June 2017

தாளிப்பனை

தாளிப்பனை
(talipot palm-Corypha umbraculifera)



அதிசயம்....
ஆகா என்னவொரு அதிசயம்...
எது அதிசயம் ?...
என்கிற கேள்வியைப்போட்டேன் அங்கு கூவிய சிலரிடம்....
நூற்றியிருபது வருசம் கழித்து பூத்திருக்கும் இந்தப்பனம்பூ அதிசயம்தானே....
மிக தெய்வாம்சம் பொருந்தியது இந்தப் பனை மரம்....
அதோடு அங்கே சூடம் கொழுத்தி,
அகல்விளக்கு ஏற்றி,
ஊதுபத்தி காட்டி,
ஹோமகுண்டமே உருவாக்கி,
அந்த அடிப்பனைமரத்தையே கொழுத்தி,கருக்கிவிட்டார்கள்...
பரிதாபம்,அத்தப் பனையின் இறுதிக்காலத்தில் இப்படியொரு அவலநிலை....
இதைப்பார்த்த எமக்கோ.,
கால்கள் கருக்கிய "கரிகாலன்" போல தோன்றியது
நூற்றியிறுபது வருடமான அந்த மூதாய் மரத்தின் நிலையைப் பார்த்து....




எல்லாப் பனைமரமும் பூக்காது இப்படி தெய்வசக்தி மிகுந்த பனைமரம் மட்டுமே பூக்கும்.அதை வணங்கினால் மனிதர்கள் வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும்,என கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாய் பனைமர பக்தர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அங்கு.
நாங்கள் அங்கிருந்தது சிறிது நேரம் மட்டுமே அந்த நேரத்தில் கோவையிலிருந்து ஒரு குடும்பமும்,கோபியிலிருந்து இருவரும் சுற்றிச்சுற்றி வந்து வணங்கிவிட்டு சிறிது கருகிய திலையிலிருந்த பனையின் சாம்பலை நெற்றியில் பக்தியுடன் வைத்துக்கொண்டிருந்தார்கள்...
இவற்றைப் பார்த்தபோது,இவர்களின் அறியாமையை நினைத்து சிரிப்பதா ?
இல்லை அழுவதா ?
இவர்களோடு வாழ்வற்காக அவமானத்தில் கூனிக்குறுகுவதா,என எமக்குத்தெரியவில்லை,அந்தப் பகுதி நீண்ட நாட்களாக திடீர் சாமிகளுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட இடம்தான்....
ஆமாம் என்ன அதிசயம் ?
அவர்களிடமே கேட்டேன்,
பதிலில்லை...
முந்தைய காலத்தில்,எங்கும் நிறைந்திருந்தவற்றை முற்றிலும் மனிதர்களால் அழித்தொழித்தபின் எஞ்சியவை எங்காவதொன்று தென்பட்டால் அதுதானே அதிசயம்- இது நான்... 



அவர்களைப் பொறுத்தவரை இங்கு, எங்கும் காணப்படும் பனைகளிலேயே (Borassus-Palmyra palm) இந்தச் சிறப்புமிகுந்த தெய்வீகசக்தி கொண்டவை மட்டுமே பூக்கும்.,
மற்றவையெல்லாம் பூக்காது.
அய்யோ... :(
இருபத்தியொறு வகைகளுக்கு மேற்பட்ட பனைவகைகளில் இந்தவகை வாழ்வில் ஒருமுறைமட்டுமே பூக்கும்.அதோடு அது சிறிது காலத்தில் இறந்துவிடும்.நாம் காணும் சாதாரனபனை (Borassus-Palmyra palm) ஒவ்வொரு பருவத்திலும் பூக்கும் அதன் பெண்மரத்திலிருந்துதான் நமக்கு சுவையான நுங்கு கிடைக்கிறது...
ஆனால் இந்த தாளிப்பனை அதன் வாழ்வில் ஒரே முறைமட்டுமே மிகப்பெரிய பூங்கொத்தை பூக்கிறது.அதில் லட்சக்கணக்கான மலர்களுண்டு.ஒரே மரத்திலேயே ஆண்,மற்றும் பெண் தன்மைகளைக் கொண்டிருக்கும்.காய்கள் காய்த்தபின் பனை வறண்டுவிடுகிறது.சுமாராக என்பதடிக்கு மேலான உயரமும்,நல்ல பருமனும்,பதினாறடி விட்ட அளவுள்ள ஒலைகளையும் கொண்டிருக்கிறது.மற்ற பனைக்கும் இதற்குமுள்ள அளவு வேறுபாடுகளைக்காண வீடியோ இணைத்திருக்கிறேன்....
"தாளிப்பனை"
-இதன் பெயரில் பலரிற்கும் பல குழப்பம். இதை,
தாழிப்பனை என்றும் எழுதுகிறார்கள்."தாளிப்பனை" என பழைய பாடல்களிலும் குழந்தைப்பாடல்களிலும் வருகிறது அது.,
“வேர்! வேர்! என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
பனை வெட்டி
என்ன பனை?
தாளிப்பனை
என்ன தாளி?
விருந்தாளி
என்ன விருந்து?
மணவிருந்து
என்ன மணம்?
தேன் மணம்
என்ன தேன்?
பூந்தேன்
என்ன பூ?
மாம்பூ
என்ன மா?
சும்மா”... இப்படிப்போகிறது.
“பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று
எண்ணிய நாமம் பனையின் பெயரே”
 - (திவாகர நிகண்டு: 700)
"தாலிப்பனை"
-முற்காலத்தில் இதன் ஒலைகளில் கணவனின் குலச்சின்னங்களை எழுதி சுருட்டி திருமணத்தின்போது பெண்களின் கழுத்தில் தாலியாக கட்டியிருக்கிறார்கள்.பனையோலைகளில் மட்டுமே அப்போது தாலி இருந்திருக்கிறது.அதனாலேயே இது தாலிப்பனை...

(ஈரோடு-கோபியிலிருந்து நம்பியூர் செல்லும் ரோட்டில் குருமந்தூரை அடுத்த,கீழ்பவானி பாசனக்கால்வாய்க்கு முன்பாக இந்த இளம் தாளிப்பனை உள்ளது.இது சிறியதாக இருக்கும்போதிருந்து பார்த்து வருகிறேன்)

"விசிறிப்பனை"
-மன்னர்கள் காலத்தில் இப்போதைய மின்விசிறிகள் இல்லையே! அப்போது இந்த தாலிப்பனையின் நீண்ட மென்மையான ஒலைகளைக்கொண்டு "பங்கா" எனப்படும் பெரிய விசிறிகளைச் செய்து, பயன்படுத்தியிருக்கிறார்கள்.அதனால் இதற்கு விசிறிப்பனை என்கிற பெயரும் உண்டு....
"குடைப்பனை"
-கேரளப் பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து கொண்டிருப்பதால், இதன் கனமற்ற நீண்ட ஒலைகளின் மூலம் குடையை போன்ற தொப்பிகள் செய்து விவசாயப்பணிகளின் போது  பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.அதனால் இதற்கு குடப்பன-குடைப்பனை என்கிற பெயரும் உண்டு...
"கூந்தப்பனை"
- அங்குள்ள ஒரு பெரியவரிடம் கேட்டேன் இதைக் கூந்தப்பனை என்கிறார்.பல பதிவுபளிலும் இந்தப் பெயரை(கூந்தல்பனை-கூந்தப்பனை)என்பதனையே தாலிப்பனையை குறிப்பிட்டிருப்பதை காணலாம்...
ஆனால்,கூந்தல்பனை(Caryota urens)பற்றி நான் பார்த்ததும் கேள்விப்பட்டதும்.குமரிப் பகுதியில் உலத்திமரம் என்றும் இலங்கயில் கித்தூள் எனப்படுவதுமான,திருமணம் போன்ற விழாக்களில் வாழையோடு கட்டப்பட்டிருக்கும் நீண்ட சௌரிபோன்ற  குழைகளைப் பார்த்திருக்கிறேன்.அதன் மயிர்பகுதிகளில் பட்டாணி போன்ற காய்களைக் காணலாம்.அதை சௌரிப்பனை என்றும் சொல்கிறார்கள்.ஆனால் தாலிப்பனைக்கு கூந்தப்பனை என்கிற பெயர்க்காரணத்தை தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.பூக்கும் காலத்தில் வெண்கூந்தல்போல் காணப்படுவதால்கூட இப்பெயர் இருக்குமோ!..
"காலிப்பனை"
-இதற்கு காலிப்பனை என்கிற பெரும் உள்ளது.இதற்கும் பெயர்க்காரணம் தெரியவில்லை.பூத்தவுடன் காலியாகிவிடுவதாலா!... :D
இதுமட்டுமில்லை,
தாளி, தாளம், சீதாளி, சீதாளம், தேர்ப்பனை, ஈரப்பனை, ஆதம் என்ற பெயர்களும் உண்டு.
சங்க காலத்தில் மாட்டு வண்டிகளுக்கு மேற்கூரையாகவும்,துறைமுகப் பகுதிகளில் இதன் ஓலைக்குடைகளின்கீழ் பலவிதமான கடைகளை நடத்தி வந்திருக்கிறார்கள்... :)
இங்கு விழுந்து,விழுந்து வணங்கிக்கொண்டிருக்க,இலங்கயில் இது பூக்கும் பகுதிக்கு கேடு என்கிற நம்பிக்கையும் இருந்து வந்திருக்கிறது. ஆக இரண்டு நம்பிக்கையும் களையப்படவேண்டியவையே...
தாலிப்பனையின் நீண்ட மெல்லிய வலுவான நான்கடி நீளமுள்ள ஓலைகளை பக்குவப்படுத்தியே பெரியபெரிய ஓலைச்சுவடிகளில் பெரும் காப்பியங்களையும்,காவியங்களையும் எழுதி வந்திருக்கிறார்கள். நன்கு பராமரித்தால் முன்னூறு நானூறு ஆண்டுகள் கூட பழுதில்லாமல் இந்தச் சுவடிகள் இருக்குமாம்...
பூத்தபின் பூக்குலையை வெட்டி அதில் பனங்கள்ளை துளிர்க்கவைத்திருக்கிறார்கள் நூறாண்டுகால சத்து அடர்ந்திருக்கும் என்கிற மருத்துவ நம்பிக்கையோடு.அனைத்து பாகங்களுமே மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்....
தென்னிந்தியாவையும்,இலங்கையையும் தாயகமாக கொண்ட தாளிப்பனை.கம்போடியா,மியான்மர்,தாய்லாந்து,அந்தமான் தீவுகள் எங்கும் அதிக அளவில், காணப்பட்டிருக்கிறது....

இந்தப்படங்களில் சிலவும்,வீடியோ காட்சிகளும் எமக்கு சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்,கோபி செங்கப்பள்ளி ரோட்டில் குன்னத்தூர் அருகில் நேற்று எடுக்கப்பட்டது.அப்போது அங்கிருந்த ஒரு சிறுமி தாத்தா நுங்குமரம்தான் இப்படிப் பூத்திருக்குதா எனக் கேட்டது எனக்குள் கவலையை உண்டாக்கியது.பனை மரத்தைக்கூட நுங்குமரம் எனச் சொல்லும் ஒரு வினோத தலைமுறையை உருவாக்கி வருகிறோம்.குறைந்தபட்சம் நம்மால் இதையாவது மாற்றினால்கூட இயற்கைச் சூழலிற்கு நாம் செய்யும் பெரும்பணியாக அது இருக்கும்...
இருப்பதைத் தொலைத்துவிட்டுத்தானே இல்லாதபோது அதை அரிதாக கண்டால்,
அதிசயம்...
தெய்வீகம்...
என வாய் பிளப்போம்.இதை மட்டுமல்ல இனி வரும் காலங்களில் அனைத்து இயற்கை வளங்களையும் காக்கக்கூட வேண்டாம் ஏனெனில் அதுவே தம்மை சரியாக்கி காத்துக்கொள்ளும். இடையூறாகவாவது செய்யாமல் இருப்போம்.இப்படி நீண்டகாலம் பலவிதமான பலன்களை கொடுக்கும் பாரம்பரிய மரங்களை ஒழித்துவிட்டு, குறைந்தகாலமே தாக்குப்பிடிக்கும் அயல்மரங்களை கொண்டுவந்து பிடுங்கி பிடுங்கி நடாமல், இந்த "மண்ணின் மரங்களைக் காப்போம்"...

சிதம்பரம் அருகில்

சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை மருத்துவக்கல்லூரிவழியாக பிச்சாவரம் செல்லும்போது உடையான்மேடு கிராமத்தில் தாலிப்பனை அதுவும் சிறியதும் பெரியதுமாக கீழ்பகுதி மிக நெருக்கமாக ஒட்டிய நிலையில் பார்த்ததும் நேராக பனைக்கருகில் சென்றுவிட்டோம். பெரிய பனை பூத்து பூக்கள் முழுவதுமே காயாகி எடை தாங்காமல் நீண்ட குலைகுலையாக சரிந்த நிலையில் கண்டோம் காய்கள் முற்றி உதிரத் தொடங்கியிருந்தது.பூத்தே ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும்....



அங்கிருந்த ஒரு வயதான பாட்டி," இந்தக் கூந்தப்பனையில் இத்தனை ஆயிரம் காய்கள் இருந்தாலும் ஒரே காய்தான் ஒரு பர்லாங் தூரம் வெடித்துச் சிதறிச் முளைக்கும்" - என்றது எனக்கு சற்று நெருடலாகவே இருந்தது. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே எமக்கும் தோன்றியது...

தாளிப்பனை பூக்க அறுபது எழுபது வருடங்கள் ஆகும் என்கிற நிலையில்,ஒரு பூத்தமரமும் அதற்கருகேயே ஒரு பத்து பதினைந்து வயது மரமும் எப்படி உருவானது என்பதும் புதிர்தான்...



இதன் கொட்டைகளை வெற்றிலை சீவலிற்கு பயன்படும் பாக்கு சீவலிற்கு மாற்றாக(கலப்படமாக!)பயன்படுத்துகிறார்கள் என்கிற கூடுதல் தகவல்களை மட்டும் தெரிந்துகொண்டேன்.அதற்குமேல் இதுபற்றி பெரிதாக அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. நல்ல வளமான மண்ணும் நீரும் அங்கே இருப்பதால், குன்னத்தூரில் இருக்கும் தாளிப் பனையைவிட மரம் சற்று நல்ல பருமானாக ஒரே சீராகவும்.ஓலைகள் நன்கு பெரிதாகவும் இருப்பதைக் காண முடிந்தது.அதற்கு சற்று தொலைவில் இதே போல காய்த்த நிலையில் ஒரு பனையைக் கண்டேன் என்பதடிக்கு மேலான உயரத்தில் இருப்பதால் தொலைவில் இருந்தால் கூட நன்கு காண முடிகிறது.....

"கற்றுக்கொள்வோம்-அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுப்போம்"
-என,
Ramamurthi Ram

மேலும் அதிக,
விபரங்கள் மற்றும்,
படங்கள்,
கருத்துப்பரிமாற்றங்களைக் காண...

No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...