Friday, 10 March 2017

காட்டுப் பன்றி வனத்தின் உழவன்...

காட்டுப் பன்றி(Wild boar)

எறுழி,ஏனம் என்கிற பெயர்கள் பழந்தமிழில் காட்டுப்பன்றிக்கு வழங்கிய பெயர்கள்...
பருவத்தில் பன்றிகூட அழகு என்பார்கள் பருவத்தில் மட்டுமல்ல என்றுமே அவை அழகுதான் நாம் கவனிக்கும் விதத்தில்தான் இருக்கிறது.

"ஆனாலும்கூட யாராலும் கவனிக்கப்படாமலேயே இந்தப்பன்றிகள் உள்ளன.வன உயிரின ஆர்வலர்கள் கூட இவற்றை பெரிய அளவில் கண்டுகொள்ளாதது ஏன் எனப் புரியவில்லை"
-அதற்கு ஸ்டார் அந்தஸ்து கிடைக்காததற்கு அதன்உருவமைப்பு காரணமா அல்லது அவற்றின் செயலா ?...



காட்டுப்பன்றியானது வளர்ப்புப்பன்றிகளின் முன்னோடியாகும் ஆனாலும் உருவ அமைப்பில் இரண்டிற்கும் வேறுபாடுகளுண்டு,காட்டுப்பன்றியின் தலை பெரியதாகவும் உடலும் கால்களும் சிறிதாகவும் இருக்கும்.
வளர்ந்த ஆண்பன்றியின் மேல்தாடையின் கோரைப்பல்லானது பனிரெண்டு செ.மீ வரை காணப்பட்டாலும் அதன் வாழ்வின் இறுதிக்காலம் வரை வளர்ந்துகொண்டே இருக்கும்.மொத்த பன்றிகூட்டத்தையும் மூத்த பெண்பன்றியே வழிநடத்தும்...

இவை ஓர் அனைத்துண்ணி பொதுவாக நிலத்தைக்கிளறி கிழங்குவகைகளைத் தேடி உண்ணும் அதனால் கானகத்தின் உழவன் என்றும் இதைச்சொல்வார்கள்...
சுமார் பத்து செ.மீ வரை ஆழமாகவும்,நிலத்திலுள்ள ஐம்பது கிலோ எடைவரையியிலான கற்களை மேலே புரட்டிப்போடும் அளவிற்கு வலிமையுடையது,இப்படி நிலத்தை உழுவதால் மழைநீர் நிலத்தினுள் செல்லவும் பறவைகளின் எச்சம் மூலம் கீழே கிடக்கும் விதைகள் முளைக்கவும் செய்து காடுவளர்ப்பில் பன்றிகள் பேருதவி செய்கின்றன...



மற்ற விலங்குகள் அடித்துத் தின்ற மாமிச மிச்சங்களையும் தின்று காட்டை சுத்தப்படுத்துவதில் கழுகளுக்கு இணையாக காட்டும் பன்றிகளும் பணிசெய்கிறது...

ஆண்டிற்கு இருபது குட்டிகள் வரை போடும் பன்றிகள் காட்டிலுள்ள மாமிச உண்ணிகளான புலி,சிறுத்தை மற்றும் செந்நாய்களுக்கு உணவாகிறது.புலியே மிகுந்த எச்சரிக்கையுடன் தான் வேட்டையாடும் ஏனெனில் அவ்வளவுவலிமையும் திருப்பித்தாக்கும் வேகமான குணமும் உடையது...

அடிக்கடி மனித காட்டுப்பன்றி மோதல்கள்கூட நடந்துகொண்டுதான் இருக்கிறது.அவை நம்வாழிடத்திற்கு வரவில்லை நாம்தான் கொஞ்சம் கொஞ்சமாக அவைகளின் இடத்தில் வீடு,தொழிற்சாலை விவசாயத்திற்காக நிலத்தை விரிவாக்கி பயன்படுத்தியதால் அவற்றின் வாழிட எல்லை சுருங்கிவிட்டது...

அதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கும் குடியிருப்பு பகுதிக்குள்ளும் காட்டுப்பன்றிக்கள் வந்துவிடுவாதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன.அவற்றிற்கு விவசாயநிலத்தையும் வனப்பகுதியையும் பிரித்து அறியத் தெரியாது. ஊரிற்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன என்கிற பலி வேறு உண்மையில் அவற்றின் இடத்தை தவணைமுறையில் ஆக்கரமித்து நாம்தான் அட்டகாசம் செய்துவிட்டோம்...

அதன் தொடர்ச்சியாக வன எல்லைப் பகுதிகளில் விவசாய நிலத்தைப் பாதுகாக்கவும் உணவுவேட்டைக்காகவும் அதிக அளவில் வனப்பன்றிகள் கொல்லப்படுகின்றன...



பன்றிகள் கொல்லப்படுவதில் பலமுறைகளைக் கையாள்கிறார்கள் கள்ளத்துப்பாக்கி கொண்டும் சுருக்கு கம்பிகளில் சுருக்குவைத்தும் கொல்லுகிறார்கள், சில இடங்களில் வித்தியாசமாக ஆட்டுக்குடல்களை சிறிய துண்டுகளாக வெட்டி அதற்குள் வெடிமருந்தை வைத்து முடிச்சுபோட்டு பன்றிவரும் இடங்களில் போட்டுவிடுவார்கள் நமது பன்றியார் ஆர்வம் மிகுதியால் வாயில் கடித்தவுடன் வெடித்து வாய் பிளந்து செத்துவிடுவார் என்ன கொடுமைசார் இது?...

இப்படியே போனால் பன்றிகள் குறையும்,பன்றிகளால் காடுவளர்ப்பின் பங்கு குறைவதோடு அவற்றை உண்டுவாழும் ஊணுண்ணிகளும் ஏற்கனவே குறுகியகாட்டைவிட்டு குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் அது அவற்றிற்கும் நல்லதல்ல நமக்கும் நல்லதல்ல...

இனியாவது பன்றி என்றால் ஏளனமாகப் பார்க்கும் மனநிலையிலிருந்து விடுபடுவோம்...

என்ன செய்யலாம் சொல்லுங்கள்?
படிப்பவர்கள் கண்டிப்பாக பதிவிடுங்கள்...

சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

படங்கள்,
Divya Barathi Ramamurthi.

No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...