Monday, 6 November 2017

சத்தியமங்கலம் காடுகளில் வனச்சுற்றுலா

மகிழ்ச்சி மிக மகிழ்ச்சி...
(கொஞ்சம் வருத்தம்)


அறிவிப்பு வந்தவுடனேயே மிக சந்தோசமாக இருந்தது. அறிவிப்பு வந்துகூட கொஞ்ச நாட்களாக அதை நடைமுறைப் படுத்தும் காலம் நீண்டு கொண்டே இருந்தது. அதை நம்புவதா இல்லை வேண்டாமா ? என்றுகூட மனதிற்குள்ளே ஒரு கேள்வி விடாமல் ஓடிக்கொண்டே வந்தது. இதன்மூலம் தான் அது நடக்கிறது என வாட்ஸாப்பில் இரண்டைக் காட்டினார்கள்.அப்போதுகூட கொஞ்சம் அவநம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் நேற்றைய முன்தினம் பத்திரிக்கைகளில் செய்தியை அச்சில் பார்க்கும்போது இறுதியாக,உறுதியாக நம்ப வேண்டியதாகிவிட்டது.....

அந்த இரண்டும் அருமையான safari van தாங்க...
அப்புறமாக வேறொன்றும் இல்லீங்க நம்ம சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட wildlife safari தாங்க அளவற்ற மகிழ்ச்சிக்கு காரணம்...

இப்போதைக்கு இது முன்னோட்டமாக பரீட்சார்த்த முறையில் அதுவும் கிட்டத்தட்ட ஏழு இடத்தில்!!!!...
நடைபெறுவதாக சொன்ன அறிவிப்பு கொஞ்சம் குழப்பினாலும் போய்பார்த்தே தீரவேண்டும் என்கிற ஆவலில் நேற்றைய இரவு முழுவதும் தூங்கவே இல்லை.போவதா இல்லை வேண்டாமா என்கிற மன நிலையிலேயே இருந்தோம் இரவு பதினொன்றை மணிக்கு போவதாக முடிவெடுத்ததால் பல ஆர்வலர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லவே முடியவில்லை :D

இன்று காலை ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி,இடையில் ஒரு  டீயும் ஒரு காபியும் குடித்து சத்தி வன அலுவலகத்தை 6.35 சென்றடைந்தோம்.அதற்கு முன்னரே திருப்பூர் இயற்கை கழகத்தைச் சேர்ந்த நமது அறிவார்ந்த,அன்பான நமக்குப் பிடித்தமான 12 பேர் தயாராக திருப்பூரிலிருந்து வந்தது ஆச்சரியமில்லை.அவர்கள் வந்த நேரமும் வேகமும்  அவர்களின் வழக்கமான அர்ப்பணிப்பை உணர்த்தியது...

ஒரு வழியாக 7 மணியளவில் கிளம்பி சத்தியமங்கலம் வனப்பகுதியை நோக்கி தீவிர ஆவலுடன் சென்றோம் இன்றைக்கு முதல் நாள் என்பதால் எங்களுடன் Ranger மற்றும் Forester ம் இரண்டு Gaurd களும் APW களும் வந்தனர்.மிக மிக அக்கறையோடு சிறப்பாக கவனித்துக்கொண்டனர்.முதல் நாள் இதுவும் முதல் Trip என்பதால் நாங்கள் அனைவருமே சிறப்பு விருந்தினர்கள் பட்டியலில் இருப்பதை உணர்ந்தோம்....

ஆனாலும் சில தீவிர பிரச்சனைகளை சொல்லாவிட்டால் நான் பொறுப்பற்றவனாவேன்.முதலாவது நாங்கள் சென்ற வாகனம் நாம் எதிர்பார்த்த அந்த புதிய காட்டுலா வாகனங்களில்  இரண்டில் ஒன்றுகூட இது இல்லை!!!...

நாங்கள் சென்றது திருப்பூரிற்கு தொழிலாளர்களை அழத்துச்செல்லும்  ஒரு சாதாரண வாகனம். இரண்டாவது திட்டமிட்ட அளவிற்கு பெரிய முன்னேற்பாடுகள் இல்லை இதில் முக்கியமானது பாதை.நேற்றுப் பெய்த மழையில் ஒரே சகதியும் சேறும்.பல மாநிலங்களில் வன உலா சென்ற நமக்கு,நமது சொந்த மண்ணில் நடக்கும் நிகழ்வை பெரிய எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தது குறைவில்லாத ஏமாற்றத்தையே கொடுத்தது ...

இதில் வன ஊழியர்களையோ அல்லது வனத்துறையினையோ அதுகாரிகளையோ குறை சொல்ல ஒன்றுமில்லை. கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது நமது வனத்துறை இதற்கு நமது பெருமைமிகு அரசே காரணம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல ?...

பல இடங்களைக் கடக்க வெகு தாமதமானது. எல்லாமே கிட்டத்தட்ட ஒரு சடங்கு நிகழ்வாகவே நடந்தேறியது.ஆனாலும் ஏற்கனவே நானும் எமதுமகளும் கடந்த மே மாதத்தில் யானைகள் கணக்கெடுப்பில் மூன்றுநாட்கள் சுற்றித்திரிந்தது இதே பகுதிதான்(ஆனால் அன்றைக்கு  இங்கே ஒருசிறு பல்லியைக்கூட பார்க்கவில்லை என்பதை வெளியில் எப்படிச்சொல்வது?...)

இன்றைக்கு இறுதியாக ஒரு நன்கு திடகாத்திரமாக வளர்ந்த ஒரு ஆண் கடமாவை(Indian Gaur) பார்த்து வியந்தோம்....

உண்மையாக சொல்லப்போனால் இந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகமென்பது மிகப் பெரியது.நீங்கள் இதை முது மலையுடனோ அல்லது பந்திப்பூருடனோ ஒப்பிட்டே பார்க்க முடியாது இதன் பரப்பளவு 1411 சதுர கிலோமீட்டர். இது 2013ல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு.தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கடந்த நான்கு வருடங்களாக நடந்த ஆய்வின்படியே இந்த வனச்சுற்றுலாவை நடத்த முடிவெடுத்து இருக்கிறார்கள்....

ஆனாலும் சிறப்பொன்றும் இல்லை என்பது ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும், எங்கோயோ வெகு தொலைவில் நடந்த இது மாதிரி வனச்சுற்றுலா நிகழ்வுகள் எமது சொந்த மண்ணில் நடப்பது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் என்பதில் அடங்காத உவகை.சற்று ஆறுதல் என்னவென்றால் இது Trial தான் விரைவில் ஒரு சரியான உருவத்திற்கு வரும்.இது பெரிய வனப்பகுதிதான் ஆனாலும் ஏழு இடங்களில் நடத்த வேண்டியதில்லை.இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டும் சிறப்பாக செய்தால்போதும்.மாற்றிக்கொள்ளாவிட்டால் பெரிய வெற்றி என்பது இருக்காது....

இது தொடர்பாக கேள்விகள் இருந்தால் கேளுங்கள் எமக்கு தெரிந்தது எதுவோ அதைச் சொல்கிறேன்.இது வீரப்பன் காடு.பல கற்பனை மற்றும் நிஜக் கதைகள் அடங்கிய மாபெரும் பொக்கிசம்...

*********************************
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ரசிக்கலாம் வாங்க! 'வண்ணப்பூரணி' வனச்சுற்றுலா திட்டம் தொடக்கம் -
https://goo.gl/EeE6d2 

No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...