Tuesday, 30 May 2017

இது காட்டுப்பூனை....

அன்று பூனைகள் இருந்தன...


பூனைகள் பற்றி நமக்குத் தெரியும்,
காட்டில் வாழக்கூடிய பூனைகள் பற்றி எவ்வளவு தெரியுமா ?

வனக்காடுகளிலும் ஊரையொட்டிய புதர்க்காடுகள் மற்றும் பாலைநிலங்களிலும் தன்னிச்சையாக வாழக்கூடிய பூனையினங்களில் பல வகைகள் இருந்தாலும் நாம் இன்று பார்க்கக் கூடிய பூனை, இந்தியாமுழுவதும்ஒருகாலத்தில் எங்கும் நிறைந்திருந்த பல பகுதிகளில் வெருவு என சொல்லக்கூடிய இந்தியக் காட்டுப்பூனை(jungle cat)....,
இன்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மட்டுமே வெகு அரிதாகக் காண முடிகிறது...



இன்றை வேகமாக உலகில் பல உயிரினங்கள் முற்றிலும் அழிக்கபடுவதை (அழிக்கப்பட்டதை) உணராமலேயே கடந்துகொண்டிருக்கிறோம்.பல பெரிய உயிரினங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவுகூட இதுபோன்ற சிற்றுயிர்களுக்கு கொடுக்கப்படாதது கொஞ்சம் வேதனைதான்.அதுவும் பல வன உயிரின ஆர்வலர்களின் கவனத்தில் வரதாததுகூட கவனிக்கப்படவேண்டிய ஒன்று...

ஒவ்வொரு உயிரினமும் அதனதன் பங்கிற்கு சூழலியல் செயல்பாட்டை நடத்திக்கொண்டிருக்கிறது.அதில் இதுபோன்ற  சிறு வேட்டையாடிகளின் பங்கு மிக மிக அவசியமானது...

எப்படியென்றால்,உணவுச்சங்கிலி சிதைக்கப்பட்டால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் என்பதற்கு உதாரணமாக மயில்களின் இயற்கை எதிரிகளான பூனைவகைகளும் நரியினமும் மிக மிக அருகிவிட்டதால்  இங்கு மயில்களின் எண்ணிக்கை அதிகமாக பெருகிவிட்டது.இப்போது எமது பகுதி விவசாயிகளுக்கு மயில்களே பெரும் பிரச்சனை...

இந்தப் பூனைகள் கோழிகளை பிடிக்கிறது என்பதற்காகவும்,தவறான மருத்துவ மூடத்தனத்தாலும் பூனைகள் வெகுவாக கொல்லப்பட்டன.அவைசெய்துவந்த  இயற்கைச்சமநிலையாக்கும் வேலையை இனிச் செய்வது யார்?...

கடந்தவருடம் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் பந்திப்பூர் காட்டிற்குள் 🐯புலியைத் தேடி சென்றபோது எதிர்பாராத விதமாக பூனையை கண்டோம்...
அது காட்டுப்பூனை...

காட்டில் இருக்கிறதினால் அது காட்டுப்பூனையா?

இல்லை காட்டுப்பூனைக்கும் வீட்டுப்பூனைக்கும் வேறுபாடுகள் உண்டு...

வீட்டுப்பூனை தயிர்சாதம்,வடையெல்லாம் சாப்பிடும் மனிதனோடு சேர்ந்ததினால் மனிதன் சாப்பிட்டறதை எல்லாம் சாப்பிட்டு  சில வசதியான பூனைகள்😸 மனுசனைப்போலவே தொப்பையோடு காணலாம்.
சர்க்கரை வியாதிகூட💉 இருக்கும்!...

ஆனா நம்மகாட்டுப்பூனை "சுத்த அசைவம்"
-அது கொரியுண்ணிகளான
🐇முயல்
🐀எலி மற்றும் அணில்,
🐦பறவைகள்,
🐍பாம்பு,
🐸தவளை...
இப்படி கிடைத்ததை எல்லாம் சடச்சுட சாப்பிடும். அதன் எடை மற்றும் உருவத்தைவிட சற்று பெரிதானவற்றையும் அடித்து உண்ணும் வேட்டைத் திறன் உடையவை. எளிதில் விரைந்து மரம் ஏறக்கூடிய திறன்💪 வாய்ந்தவை....

மேலே சொன்னதுபோல காட்டுப்பூனையிலும் பல இனங்கள் உண்டு நாங்கள் கண்டது 🐈இந்திக் காட்டுப்பூனை(jungle cat),
அதுவும் நாங்கள் பார்த்த அந்த நேரம் மயிர்சிலிர்க்க வைத்த தருணம்- எங்களுக்கல்ல பூனைக்கு....

பூனையின் எதிரே ஒரு கீரி வந்தது இரண்டும் சண்டையிடத் தயார் ஆவதுபோல் சூழ்நிலை.பூனை தன்உடம்பை சிலிர்த்து மயிர்கள்ளை விரைப்பாகியது பிறகு என்ன நினைத்ததோ அல்லது ஏதாவது உடன்பாடு ஆகிவிட்டதோ! இரண்டும்வேறு வேறு திசைகளில் சென்றுவிட்டன...

காட்டுப்பூனைகள்🐱 மூன்றிலிருந்து பனிரெண்டு கிலோ வரையான எடையுடன் இருக்கும்.மிதக்கும் தன்மையுள்ள விலா எலும்புகளில் முன்னங்கால்கள் இணைந்திருப்பதால் தலை நுழையக்கூடிய எந்த சந்திலும் நம்ம பூனையார் நுழைந்து விடுவார்...

தமது வாழ்நாளில் நூற்றிஐம்பது குட்டிகள்வரை போடும்.இரண்டுமாத காலம் வரை குட்டிகள் தாயின் வயிற்றிலிருக்கும்...

ஒவ்வொரு உயிரினத்தையும் இந்த பூமியில் நிலைநிறுத்த  இயற்கை மிகப்பெரும் கருணைகாட்டி சில சிறப்புத் தன்மைகளை ஒவ்வொன்றிற்கும் வழங்கியிருப்பது ஆச்சரியம்தானே அவ்வகையில் இதன்கால்களில் நடக்கும்போது எவ்வித அதிர்வையும் உண்டாக்காத தன்மையுடைய மெத்தென்ற மென்மையான அடிப்பரப்புள்ள வலிமையான கால்கள்!.😜

இன்றைய காலகட்டத்தில் மிகுந்த கவலையடையக் கூடிய நிலையில்😿 இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
காரணம் வனப்பரப்பு குறைந்துகொண்டே வருவதோடு மட்டும் இல்லாமல் நகர்பெருக்கம் மற்றும்  பேராசையின் காரணமாக மனிதன் வாழும்பகுதிக்கு அருகிலுள்ள புதர்காடுகளை அழித்ததினால் அவற்றை வாழிடமாக கொண்டிருந்த இதுபோன்ற சிறிய வகை ஊணுண்ணிகள் வாழிடமில்லாமல் எஞ்சியவை காப்புக் காடுகளை நோக்கி நகர்ந்துவிட்டன.
அங்கும் வாழ்க்கைப் போட்டியினால் மிகுந்த சவால்களுடனேயே இருக்கிறது...😢.இப்படியே போனால் இவற்றைக் காணும் கடைசித் தலைமுறை நாமாகத்தான் இருப்போம்!...
இதற்குக் காரணம் நாம்தான்.
😈
சூழலியல் ஆர்வத்துடன்,
Ramamurthi Ram
https://www.facebook.com/ramamurthi.ram.52

Sunday, 21 May 2017

உலகப் பல்லுயிர் பரவல் தினம்

மே 22 உலகப் பல்லுயிர் பரவல் தினம்
(World Biodiversity Day)

இன்றைய நாட்களில் மனிதர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியிருப்பது இயற்கை சார்ந்த வனச்சுற்றுலா என்பதில் சந்தேகமில்லை.வனச்சுற்றுலா நடக்கும் முதுமலை,பந்திப்பூர் போன்ற இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் நிற்பதே அதற்கு சாட்சி...

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையப்படுத்துவார்கள்.இந்த வருட உலக பல்லுயிர் தினத்தின் கருவாக சுற்றுலா வளர்ப்பும்-பல்லுயிர்சூழல் பெருக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். அதாவது சுற்றுலாவை வளர்ப்பதன் மூலம் வருவாய் பெருகுகிறது.அதன் மூலம் வன உயிர்களை காக்கலாம் என்பதே....



இருந்தாலும் சிலவற்றை எப்போதும் சொல்வதைப்போல, மீண்டும் அசைபோடுவோம்.
இந்த மாதிரியான தினங்கள் எதற்காக அனுசரிக்கப் படுகிறது என நாம் முதலில் புரிந்து கொண்டால் மட்டுமே அதைப்பின்பற்றி நடக்க ஆரம்பிப்போம்...

முதலில் இந்த தினம் கொண்டாட்ட தினங்களில் ஒன்றல்ல அதாவது, நரகாசூரனை அழித்த தினம் தீபாவளி தினம் தீமை ஒழிந்தநாளாக கருதப்படுவதால் அது கொண்டாட்டத்திற்குரிய நாளாக பார்க்கப்படுகிறது...

இப்படி வருடம் முழுவதுமே பல நாட்களை கொண்டாட்ட நாட்களாக பழக்கப்படுத்திவிட்ட சமூகத்தில் வாழ்வதால் நமக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்டநாளை யாராவது சில அக்கறையுள்ளவர்கள் சில தினங்களை சில காரணங்களுக்காக வலியுறுத்தல் நாளாக அனுசரிக்கச்சொல்வதால் அது கொண்டாட்டப் புத்தியிலேயே பார்க்க வைக்கிறது...



உண்மையில் இவ்வாறான நாட்கள் நம்மை எச்சரிப்பதற்காக...
நினைவூட்டுவதற்காக,
சாலையில் வைத்திருக்கும் எச்சரிக்கைப் பலகைகளைப் போன்றவையே இந்த நாட்கள்...

சரி உலகப் பல்லுயிர்ப் பரவல் நாள் எதற்கு ?

இதுவும் நம்மை எச்சரிக்கவே என்னை கடந்த எதுவுமில்லை என்கிற மனிதனின் இறுமாப்பிற்கு எச்சரிக்கை விடும் நாட்களில் இதுவும் ஒன்று.
மரம் தானே என மரத்தை வெட்டியும்,இன்னும்பிற பேராசைச் செயல்களாலும் பலகோடி ஆண்டுகளாக உருவான புவிச்சூழலையே சிதைத்துவரும் மனிதானால், மீண்டும் பழைய நிலைக்கு பூமியை மாற்றுவதென்பது ஒரேநாளில் செய்யமுடியாத காரியம். இதை புரிந்து கொண்டால் மனிதர்களால்தான் இந்த உலகில் எதையும் செய்ய முடியும் என்கிற புத்தி காணாது போய்விடும்...

இந்த மாதிரியான ஆதிக்கபுத்தியை கழட்டிவைக்கச்சொல்லும் நாட்களில் இதுவும் ஒன்று மற்ற உயிரினங்களை விட மிக மிக தாமதமாகவே இந்தப்பூமியில் பிறந்த பூமிக்குடும்பத்தின் கடைக்குட்டிதான் மனிதன்...

இந்தவகையில் பார்த்தால் முதல் உரிமை மற்ற உயிர்களுக்கே...
இதை உணர்ந்தால் அத்துமீறி அழிக்கும் புத்தி மனிதனுக்கு எப்படி வரும்?..

இந்த பூமியில் வாழ்கிற அத்தனை உயிர்களுமே மிக மிக அவசியமானவை அதில் முக்கியமானவை எது ?...
எது நமக்கு நன்மை செய்கிறதோ...
அதாவது, "நமக்கு உணவாகவோ அல்லது பணமாகவோ மாற்றக்கூடியவையான உயிரினங்கள் நன்மை செய்யும் உயிரினங்களாக பார்க்கப்படுகிறது"....
மற்றவை தீமை செய்பவையா ?

உண்மை என்னவென்றால் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கு மனிதன்தான்...
"தீமை செய்யும் உயிரினம் "

மரங்களை அழித்தோம்...
அதன் விளைவு

பல பறவைகள் அழிந்தது ,
காலநிலை மாற்றம்,
புவிச்சூடு,
காற்று சீர்கெட்டு அபாய நிலையை நோக்கி பூமி...

இனி நீர் வணிகம் போல காற்றுவணிகச் சூழலையும்  உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்...

இங்கு மற்ற உயிர்கள் எதற்கு இருக்கின்றன என்கிற காரணம் வேண்டுமானால் நமக்குத்தெரியாமல் இருக்கலாம் ஆனால் இயற்கை எதையும் காரணமின்றி உருவாக்கவில்லை என்பதை உணர்ந்து பல்லுயிர்ச்சூழல் தழைக்க பங்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவற்றை சிதைக்கின்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்போம்...

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை தவிர்ப்போம்...
பொதுப்போக்குவரத்தைப் பயன் படுத்துவோம்,
சைக்கிளை தூசிதட்டி ஓட்டிப் பழகுவோம்,
மின் பயன்பாட்டைக் குறைத்து
ஆடம்பரத்தைக் குறைப்போம் எளிமையை கடைபிடிப்போம்...
அழகிற்காகவும்,மூடநம்பிக்கையாலும்,
உயிரினங்களின் இறகுகள்,
சிறகுகள்,
தோல்,
கொம்பு,
பல்,
மயிர்கள்,
நகங்களின் பயன்பாட்டைத் தவிர்ப்போம்...



அதனதன் வாழிடச்சூழலை மேலும் அழிக்காமல் இருப்போம் இல்லையெனில் மனிதன் வாழும் சூழலே அற்றுவிடும் பிற உயிர்களற்ற சூழலில் மனிதன் அனாதையாகி விட மாட்டான் அழிந்தே விடுவான்...

இருப்பதைக்கொண்டு இன்பமாக அனைத்து உயிர்களையும் மதித்து வாழ்வோம்...

சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

Facebook:
https://m.facebook.com/story.php?story_fbid=1291011304348235&id=100003181323647

Tuesday, 16 May 2017

காற்றே என்ன விலை ?



மனிதர்கள் வாழ்வு உணர்ச்சிகளின் அடிப்படையிலானது இந்த மரங்களை  மாற்றிடங்களில் நடுவதுகூட உளவியல் தொடர்பானதுதான்...
தலைவர்களுக்காக தற்கொலை செய்வதும் பிடித்த நடிகரிற்காக அலகு குத்துவதும் கூட இது மாதிரி உணர்ச்சிகளின் அடிப்படையில்தான்...
காடுவழியே போகும் ரோட்டில் பயணிக்கும் போது வண்டியை நிறுத்தி வழியில் காணும் குரங்கிற்கும்,மான்களுக்கும்., சமோசாவும்,மெதுவடையும் கொடுக்கும் நபரிடம் கேட்டால் பாவம் அதுகள்...
உணவிற்கு என்ன செய்யும் ?...
இவர்களுக்கும் மரம்பிடுங்கி மாற்றிடத்தில் நடுகிற மனிதர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...
கருணை என்கிற உணர்ச்சியின் காரணமாகவே இந்த செயல் நடக்கிறது....

ஆனால் இன்றைய நாளில், சீறும் கடலில் சிக்கிக் கொண்டிக்கும் நம்மைக் காப்பாற்ற ஓட்டைப் படகுகளால் ஒன்றும் செய்ய இயலாது.தொழில் புரட்சிங்கற பேர்ல தன்னைத்தானே தின்ன ஆரம்பிச்சிட்டோம்.இந்த நாகரீக கோமாளிகளின் தயவால் இந்த கிறுக்குப் புரட்சிக்கு அப்புறம் காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு நாற்பத்தி நான்கு மடங்கு  அதிகரித்திருக்கிறது.அதுவும் கடந்த பத்தாண்டுகளில் இதன் வேகம் ராக்கெட் வேகம்...
இதே வேகத்தில் போனால் இன்னும் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஊரைவிட்டே அல்ல இந்த தகிக்கும் உலகைவிட்டே ஓடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்....
அதன் தீவிரதன்மையின் வெளிப்பாடுதான் அதிவெப்பம்,காலநிலைமாற்றம்.
மழையே பெய்வதில்லை...
அல்லது மிகுமழை...
பருவ மழையோடு அடைமழையை காணோம்...
காற்றெல்லாம் கரி....
இதையெல்லாம் சுத்தம் செய்வதுயார் ?

பூமிக்கு மரங்களே நுரையீரல்.அதுவே காற்றை சுத்தப் படுத்துகிறது. இந்த வேலையை எந்த தொழிற்சாலையிலும் செய்ய முடியாது....
33%காடுகள் கட்டாய அளவு ஆனால் இன்றைய நிலை 15%கீழாக போய்விட்டது...
நாம் செய்யும் தவறுகளால் அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பு...

மரங்களை நடுவதுதான் அத்தனை மனிதர்களுக்கும் முழுநேர வேலையாக கட்டாயமாக்கவேண்டிய அவசர காலத்தில் இருக்கிறோம்...
இந்த எமர்ஜென்ஸி நேரத்தில் ஊரெல்லாம் சேர்ந்து ஒற்றை மரத்தை ஊனமாக்கி புகை கக்கும் பெரிய பெரிய இயந்திரங்களை வைத்து பிடுங்கி நட மாற்றிடம் தேடிக்கொண்டு...
செல்பிஎடுத்து நாளிதழில் படங்களை தேடும் வேலையில் இருக்கிறோம்...
ஒரு ஊரில் ஆரம்பித்தது இன்றைக்கு பல ஊர்களில் தவறான முன்னுதாரணமாக மாறிக்கொண்டிருக்கிறது...

பிடுங்கி நடுகின்ற ஆர்வலர்களிடம் கேட்டேன் "பிடுங்கி நடுவதில் உங்கள் நோக்கம் என்ன ?
பயன்கள் என்ன ?"-குழப்பத்துடனே பதில்வருகிறது...

நடப்படவேண்டியது குற்றுயிரும் குலை உயிருமான வேரும் கிளையும் வெட்டப்பட்ட ஒற்றை மரங்களல்ல.கோடிக்கணக்கான ஏக்கர்கள் பரப்பில் பலவிதமான புதிய மரங்களைத்தான்.பல புதிய காடுகளை உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.கொஞ்சமாக இருக்கிற ஆர்வலர்களும் ஊனமாக்கிய மரங்களை கிரேன்களில் தூக்கிக்கொண்டு அலைவதுதான் வேதனை...

உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் யோசித்து செயல்படுவோம்-பூமிப்பந்தில் வாழும் சூழலை உருவாக்குவோம்.
"செய்கிற செயலை பெரும் பயனுள்ளதாக்குவோம்"...

(இந்தப்படத்தை உருவாக்கிய அந்தப் பெயர் தெரியாத சிந்தனைக் கலைஞனுக்கும் இராகவன் சிவராமன் க்கும் நன்றிகள்)

நமது முகநூல் பதிவுகளுக்கு :
https://www.facebook.com/ramamurthi.ram.52

Friday, 12 May 2017

பில்லாய் மான்

பில்லாய்....



அதபாருங்...
ஆனெய்ங்க பக்கத்துள நிக்கறதெல்லாம் பில்லாய்ம்மானுங்...
-என்னிடம் அங்கு மீன் பிடிக்கிற பரிசல்கார நண்பர் சொன்னது.
என் வாழ்வில் முதன்முதலாய் வனச்சூழலில் இதை பார்த்தது அங்கேதான்...

எமது ஊரிற்கு மிக அருகில் சிறுமுகை பகுதியில்
பவானிசாகர் அணைக்கு பின்பக்கமா பவானிநீர் வந்து சேருகிற இடம் கரையிலிருந்தே காட்டின் துவக்கம் ஆரம்பிக்கும். மாலைநேரத்தில் யானைகளோடு,கடமாக்களும்(Indian Gaur),கடமான்களும்(sambar deer),புள்ளிமான்களும்(spotted deer),காட்டுப்பன்றிகளும்(wild boar) இவற்றோடு அங்குள்ள மக்களால் பில்லாய் எனப்படுகிற தற்போது அரிதான நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் புல்வாய்மான்களும்(Black Buck)தண்ணீர் குடிக்க வருவதை காணலாம்...



(Black Buck)
புல்வாய்...
புல்வெளிமான்...
வெளிமான்...
முருகுமான்...
திருகுமான்...
திருகுகொம்புமான்...
கலைமான்...
கருஞ்சிக்கிடாய்(ஆண்)...
இப்படி பல பெயர்கள் உண்டு.ஒரே விலங்கிற்கோ பறவைக்கோ இப்படி பல பெயர்கள் இருப்பதென்பது இந்த மக்களிடையே மிக நீண்ட தொடர்புடையது என விளங்கும். சங்க இலக்கியங்களில் இரலைமான் என குறிப்பிடப்படும் இது,சிந்துவெளி நாகரீக காலத்திலிருந்தே இதன் தொடர்பின் சான்றாக கொற்றவையின் வாகனமாக  சிலைகள் உள்ளன். இதன் தாய் நிலமும் இந்திய மண்தான்...



ஒரு காலத்தில் இந்த துணைக்கண்டம் எப்படி இருந்தது என கற்பனை செய்து பாருங்கள்.,
நீண்ட தொலைவு இடைவெளியில் மனிதக் குடியிருப்புகள். சிமென்டையும் சுண்ணாம்பாலும் கட்டப்படாத எளிமையான வாழ்விடங்கள்.சுய தேவைக்காக மட்டும் கொஞ்சமான விவசாய நிலங்கள்.மற்ற இடமெங்கும் காடுகள்....
காடுகள்....
அந்தக் சமவெளிகாடுகளில்
எங்கு நிறைந்த வெளிமான்கள் அதை அடித்துண்கிற
சிவிங்கிப்புலிகள் இவற்றோடு அனைத்துவிதமான விலங்குகளும்.எப்படி இருந்திருக்கும்? அந்தச்சூழல் அற்புதமல்லவா!!!....



எங்கும் பரவியிருந்த இவற்றை மன்னர்களும்,மக்களும் போட்டிபோட்டுக்கொண்டு, மாமிசத்தில் மருத்துவகுணம் இருக்கிறது, கொம்புகளில் மந்திரசக்தி இருக்கிறது,தோலில் அமர்ந்து தியானம் செய்கிறோம் என தாறுமாறாக கொன்ற நிலையில் ஒண்டவந்த இங்லீஸ்காரனும் வீரம்,பொழுதுபோக்கு என அவனவன் பங்கிற்கு சுட்டுச் சுட்டு தின்றுவிட்டான்...

இன்றைக்கு இங்கே தரைவாழ் விலங்குகளில் மிக வேகமாக ஓடக்கூடியது இந்த வெளிமான்கள். வேகம் மணிக்கு 80 கி.மீ. மேல்.இதை உண்ணும் சிவிங்கிப்புலிதான் மிக வேகம் மணிக்கு 120 கி.மீ...
இன்று சிவிங்கிப்புலி இந்திய மண்ணிலேயே இல்லை.சமவெளிக் காடுகள் என்பது கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில் இந்தப் புல்வாய்களின் வாழிடம் என்பது தமிழகத்தில் மூன்று நான்கு இடங்கள் அதுவும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி தீவுபோன்ற குறுகிய,சவால் நிறைந்த வாழிடமாகிவிட்டது என்பது மிக வேதனை...

கோடியக்கரை கடற்கரையை ஒட்டி வெளிமான்கள் வாழிடமான இந்தப் பகுதி, இன்றைய நிலை, இருக்கிற குறுகியபரப்பில் சீமைக்கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பே அதிகம்.அதிக அளவில் நீர்குடிக்கும் இவற்றிற்கு இயற்கையான நீர்நிலைகள் அற்ற நிலையில் உணவும் நீரும் பற்றாக்குறையில் பரிதாபமான நிலைதான்...
அடுத்ததாக திருநெல்வேலிக்கு அருகில் வல்லநாடு வெளிமான் வாழ்விடம்.இங்கு மிக குறைந்த அளவிலேயே இருக்கின்றனவாம்...
கிண்டியிலுள்ள தேசியப் பூங்கா.சென்னை நகரத்தின் நடுவில் இதன் வாழ்வு என்பது பரிதாபம்தான்...
இருப்பதிலேயே நல்ல சூழல் உள்ள இடமென்றால் அது நமது சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியான, மோயாற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிதான்.சீகூர்,தெங்குமரஹாடா முதல் சிறுமுகை வரையான சமவெளிபகுதிகளில் காண முடிகிறது....

அடர்ந்த காடுகளில் இவை வாழ விரும்பாததற்கு காரணம் அங்கு புற்கள் குறைவு பாதுகாப்பும் குறைவு அதனாலேயே புல்வெளிக்காடுகளையே வாழிடமாக தேர்ந்தெடுத்திருந்தன....

ஆண் அடர்ந்த கரும்பழுப்பு நிறத்துடன் நீண்ட வளையவரிகளுடைய கொம்புகளோடு காணப்படும்.பெண் செம்பழுப்பாக கொம்புகளற்று ஆடுகளைப்போல் காணப்படும்.இணையைக் கவர ஆண்களிடையே பலத்த சண்டை நடக்கும்.கொம்புகள் மோதும் சத்தமே பயங்கரமாக இருக்கும் கோடியக்கரையில் நடந்த சண்டையினை நான் படம்பிடித்த வீடியோவை இணத்துள்ளேன்  பாருங்கள். மான்களைப்போல் இவற்றிற்கு கொம்புகள் விழுந்து முளைப்பதில்லை.வாழ்நாள் முழுவதும் ஒரே வலிமையான கிளைகளற்ற கொம்புகள்தான்.அதனாலேயே மான்களிலிருந்து வேறுபடுத்தி இரலைகள் என்கிறார்கள்.இவையும் இருநிலை செரிமானத் தன்மையுடைய அசைபோடும் விலங்கு...




எஞ்சிய நிலையில் இருக்கும் கொஞ்சமான வெளிமான்களையும் மாமிசத்திற்காகவும்,தோலிற்காகவும் கொம்புகளுக்காகவும் கொல்லப்பட்டு வருகிறது.இந்தி நடிகன் சல்மான்கான் ராஜஸ்தானில் வேட்டையாடியது இந்த வெளிமானைத்தான். இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை உலகமே அறியும்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியும் இந்த வெளிமானை வேட்டையாடியதற்காத்தான் தண்டனை கிடைத்தது(இப்படி அறிமுகம் செய்யவேண்டியதாக இருக்கிறது)....

இந்த தண்டனைகளுக்குப் பிறகே வேட்டைகள் குறைந்தன ஆனாலும் கள்ளவேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை சமீபத்தில் கோடியக்கரையில் கொம்புகளை கைப்பற்றியபோது வெளிச்சமாகிவிட்டது...



இதே நிலை தொடர்ந்தால்... தாய்நிலத்தில் இருந்து மனிதர்களால்  சுத்தமாக ஒழிக்கப்பட்ட "சிவிங்கிப்புலி" ஒரேயொரு ஜோடிக்காக,ஈராக்கிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம்,இதற்கும் அந்தநிலை ஒருநாள் வரலாம். இருப்பதைக் காப்பாற்ற என்ன செய்யலாம் சொல்லுங்கள் ???...

சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

இன்னும் விரிவான பதிவுகள் எமது முகநூலில்...
இணைப்பு:
https://www.facebook.com/ramamurthi.ram.52

Tuesday, 9 May 2017

கழுதையும் நானும்...

கழுதையும் நானும்...



இவரைத் தெரிகிறதா உங்களுக்கு ?
இவரைப்பற்றி ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு வரை பலர் அறிந்திருக்கலாம் பல விதத்தில் நம்மோடு வாழ்ந்தவர்தான் நம்ம கழுதையார்....

மனிதநாகரீக  வாழ்வில் பல படிகளை ஏற்றிய பெருமையில் இவருக்கும் பங்கு உண்டு. ஆனால் ஏதோ காரணத்தால் இவரை(இனி இதை எனவே விளிப்போம்)மரியாதைக் குறைவான ஒப்பீட்டிற்கும், உதாசீனப் படுத்துவதற்கும், ஒருவரை அவமானப் படுத்துவதற்குமே கழுதைகள் உவமையாக மனிதர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்...

இவற்றின் மரியாதையை நிமிர்த்த சகோதரர் கோவை சதாசிவம் தமது நம்ம கழுதை நல்ல கழுதை புத்தகத்தில் கடும் முயற்சி செய்திருக்கிறார் அனைவரும் வாங்கிப் படியுங்கள், அதை வீட்டில் வைத்திருங்கள் எதிர் காலத்தில் உதவும்....


எமது சிறிய வயதில் பல விதத்தில் இதைப் பார்த்திருக்கிறேன். அதில் ஒன்று எமது கிராமத்திற்கு வருடம் தவறாமல் கோயமுத்தூரிலிருந்து நீண்ட கோடை விடுமுறைக்கு வரும் ஒரு பையன் தவறாமல் இதன் வாலில் தகற டப்பாவையோ அல்லது பனை ஓலையையோ கட்டிவிடுவான் அது அதற்குப்பின் ஒரு ஓட்டம் எடுக்குமே  அது எப்போது முடிவுற்றது என எனக்குத் தெரியாது.அதன் ஓட்டம் எப்போது நிற்கும் என எண்ணியே பல நாட்கள் நான் தூக்கத்தை தொலைத்து துக்கமாகியதுண்டு....



எங்களது பக்கத்து நிலத்திலோ இதற்கு நடக்கும் கொடூரம் மிக அபாயமானது அந்த நிலத்தின் உரிமையாளர் தமது காட்டிற்குள் கழுதை வந்தாலே அதை குத்தீட்டியால்(வேல் போன்ற முனையுடைய நீண்டமூங்கில் குச்சில் பொருந்தியிருக்கும் ஆயுதம்)குத்தி விடுவார் கழுதையின் உரிமையாளர் அதாவது எங்கள் ஊரில் சலவைசெய்யும் வண்ணார் எனப்படுபவரே இதை வைத்திருப்பார் ....
அவர் அதற்கு ஏற்ப்பட்ட நிலையைக் கண்டு மனம் வருந்தி பேசாமல் செல்வதை எம்மால் அந்தச் சிறிய வயதிலும் உணர முடிந்தது.அதாவது இன்றைக்கு நாற்பது வருடங்களுக்கு முன்னர்....



எமது பள்ளிக்கூட காலத்திலோ இன்னும் பலவிதங்களில் கழுதைபற்றி மிக மட்டமாகவே மனதில் ஏற்றப்பட்டது அதுவும் அப்போதைய ஆசிரியர்களால்....
"ஏண்டா கழுதை"
"ஏண்டா கழுத அறிவிருக்கா?"
"ஏழு கழுதை வயசாயிடுச்சு இதுகூடத் தெரியலயா?"
"போ போ கழுதை கெட்டா குட்டிச்சுவர்"...
இப்படிப் பல விதங்களில்....

இப்படிப்பட்ட நம்ம கழுதையாரால் மனிதர்களுக்கு பல பெருமைகளும் உண்டு இங்கல்ல அதுவும் கூட ஒருசில நாடுகளில்,
அதிக கழுதைகளை வைத்திருப்போர் அந்த நாட்களில் மிகுந்த செல்வமுடையவர்களாகப் பார்க்கப் பட்டனர்....

இன்றைக்கு சுமாராக ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மனித சமூகத்துடன் ஒன்றிணைந்து மனிதனுக்காக மனித சமுதாய வளர்ச்சியில் கழுதைகள் பெரும்பங்காற்றியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது. மனிதர்களைச் சார்ந்து வாழும்(symbiotic)  தன்மைகொண்ட கழுதைகள், நாய்களப்போன்ற  அறிவுக்கூர்மையையும்,  எஜமானரிடம் அதிக விசுவாசத்தையும் வெளிக்காட்டக்கூடியவை என்பன அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபனமாகியுள்ளன....

கழுதைகள் மனிதனுக்கு பலகாலம் தொட்டு பலவிதத்தில் உதவியிருந்தாலும் குறிப்பாக உப்பளங்களிலும், உழவு வயல்வேலைகளிலும்,சலவைத் தொழிலிலும், மீனவர்கள் மீன்களையும் வலைகளையும் தூக்கிச் செல்லவும், விறகுகளை வெட்டிச் சுமக்கவும், மனிதர்களைச் சுமந்து செல்லவும் பொதி கழுதைகளின் பயன்பாடு உண்மையிலேயே பிரமிக்கத்தக்கவை....

மனிதச்சமூகங்களில் கழுதைகள் மிகப்பெரிய சொத்தாக ஒருகாலத்தில்  கணிக்கப்பட்டு வந்தன என்பதைப் பார்த்தோம் குறிப்பாக சீதனம் வழங்குவதில் கழுதைகளின் எண்ணிக்கை பிரதானமானதாகவும் இருந்தது...

நானறிந்தவகையில் சபரிமலை உட்பட பல கோவில்களில் கட்டுமானப் பணிகளில் உதவியதை (அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில்) நானே பார்த்திருக்கிறேன் இன்று டிராக்டர்கள் மூலம் கட்டுமானப் பொருட்களை சபரிமலைக்கு எடுத்துச்சென்று சூழல்பாதிப்பை ஏற்படுத்துவதையும்  காணலாம்....

ஆனால் கழுதைகளின் பலம் எப்படியென்றால் மிக சகிப்புத்தன்மையோடு பொதி சுமப்பது மட்டுமல்ல,கழுதைகள் தமக்குள்ளே ஒன்றிற்கொன்று தொடர்புகளை ஏர்படுத்திக்கொள்ள மிகையொலிகளைப் பயன்படுத்துகின்றன. கழுதை கத்துவதன் மூலம் (bray) 12 கி.மீ அப்பால் உள்ள தனது இனத்தை தொடர்புகொள்ளக்கூடியது. இதற்கு அதன் நீண்ட காதுகளும், பலமான தொண்டையமைப்பும், சக்திமிக்க நுரையீரலும் உதவுகின்றன என்றால் அதன் சக்தியை பாருங்கள்....

நம்ம ஊரில் கழுதைகள் மீதான பார்வை வேறுவிதமாக இருந்தாலும் எகிப்தில் குடும்ப ஆட்சி முறைகளில் (dynasty 4) கிமு 2675 க்கும் கி.மு 2565 இடைப்பட்ட காலப்பகுதியில் 1000ற்கும் மேற்பட்ட கழுதைகளை சொந்தமாக வைத்திருப்பவர்களே சமூகத்தில் பெரும் செல்வந்தராக பார்க்கப்பட்டனர். எகிப்தின் ஆட்சியாளர்களான அரசர் நேமர் , அரசர் ஹோர் அஹா (King Narmer or King Hor-Aha) அவர்களின் எலும்புக்கூடுகள் 2003 ஆம் ஆண்டில் தோண்டியெடுக்கப்பட்டன. அப்புதைகுழியில் 10 கழுதைகளும், மனிதர்களுக்கு வழங்கப்படும் மிகுந்த மரியாதை வழங்கப்பட்டு அரசனோடு சேர்த்து புதைக்கப்பட்டிருந்தது என்பது கழுதைகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறதுதானே....

வரலாறு முழுமையும் இப்படிப் பல பெருமைகளுடைய கழுதைகள்மேலான மனிதர்களின் எதிர்ப்புணர்வு உலகம் முழுவதும் எப்போதும் இருந்துகொண்டே தான் இருந்திருக்கிறது. கழுதை என்ற பதத்தைப் பயன்படுத்தி மனிதர்களைக் தாழ்மைப்படுத்துவதற்கான பழமொழிகளுக்கும் நம் சமூகத்தில் கொஞ்சநஞ்சமில்லை...


அப்புறம் இந்த ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்தவையே கோவேறு கழுதைகள் அவை குதிரைபோல் கனைக்கும் கழுதைபோல் நன்கு பொதியும் சுமக்கும். எம்மையும் ஒரு பதிநான்கு கிமீ கள் இமயமலையில் கேதார்நாத் மலைமீது சுமந்து சென்று திரும்ப கொண்டுவந்து விட்டிருக்கின்றன அது இப்போது இருக்குமா எனத் தெரியாது அவைகளுக்கு இங்கு எமது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக அதன் படங்களையும் இணைத்திருக்கிறேன்....



எப்படியிருப்பினும் எமது சம காலத்தவர்கள் இது பேப்பரையும், சினிமா போஸ்டரை தின்று வாழ்ந்ததையும்,கழுதையிடம் சிலர் உதைபட்டவரையும் ,கடிபட்டவரையும்,பாட்டுப் பாடுபவர்களை கழுதை கத்துவதோடு ஒப்பிடுவதையும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்....

யாருக்காவது கழுதைகளுடனான அனுபம் இருப்பின் பகிரவும்.இந்த வெண்மைக் கழுதை படங்கள் அனைத்தும் ஒரு மழைநாளில் மேற்கு தொடர்ச்சி மலையில் மசினங்குடியில் cafe coffee day வில் சமீபத்தில் எடுக்கப்பட்டவை அந்த அழகான வெண்மைக் கழுதைக்கும் நன்றி....

பி.கு: எங்கள் பகுதியில் கழுதையின் விட்டையை (shit)எடுத்துவந்து குழந்தைகளுக்கு சாம்பிராணி தூபம் போடுவதுபோல் காட்டுவார்கள் அதனால் என்ன பயன் எனத் தெரியவில்லை. கழுதை விட்டையை ஊர்சுற்றி எனக் குறிப்பிடுவார்கள்....

சூழலியல் ஆவலுடன்...
Ramamurthi Ram

நமது முகநூலில் இன்னும் அதிக தகவலோடு
https://m.facebook.com/story.php?story_fbid=1154551567994210&id=100003181323647

Tuesday, 2 May 2017

கொண்டலாத்தி


இது கொண்டலாத்தி
hoopoe(Upupa epops)

தமிழில் இதற்கு பல பெயர்கள் உண்டு...
பல பகுதிகளில் வாழும் மக்கள் பல பெயர்களை ஒரே பறவைக்கு வைத்துக் குறிப்பிடுகிறார்கள் அந்த வகையில் இதற்கும்,
கொண்டலாத்தி...
சாவல்குருவி...
புளுக்கொத்தி...
எழுத்தாணிக் குருவி...
கொண்டைவளர்த்தி...
கொண்டை உலர்த்தி...
விசிறிக்கொண்டைக்குருவி...
இதில்லாமல் எங்கள் ஊரில் ஒரு வயதான ஆயா இதை சுடுகாடுதூத்தி(தூற்றி) என்றுதான் சொல்லும் அதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.வேறு பெயர்கள் இருக்கிறதா எனச் சொல்லுங்கள்...


சில பகுதிகளில் மட்டுமல்ல பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் கூட இதை "மரங்கொத்தி"-என குறிப்பிடுகிறார்கள்.ஆனால் இது மரங்கொத்தி இல்லை.
அவர்கள் மரங்கொத்தியை இதுவரை கவனிக்காமல் இருந்தது கூட இதற்கு மரங்கொத்தி எனப்பெயரிட்டு அழைப்பது காரணமாக இருக்கலாம்...

வேண்டுமன்றால் மண்கொத்தி எனலாம் காரணம் இது மரங்கொத்திபோல் டொக் டொக் என மரத்தைக்கொத்தாமல் தரையில் மண்ணைக்கொத்தி கிளரி புழுபூச்சிகளைப் பிடித்துத் தின்னும்.ஒருவேளை இதன் நீண்ட வளைந்த அலகைப்பார்த்து மரங்கொத்திஎன எண்ணியிருக்கலாம்...

சேவலைப்போன்ற கொண்டயின்காரணமாக இதை சாவல் குருவி எனவும் கொண்டயே இதன்முக்கிய அடையாளமானதால் கொண்டலாத்தி எனப் பெயரும் நீண்ட எழுத்தாணி(எழுத்தாணி தெரியுமல்லவா திருவள்ளுவர் கையில் இருப்பது) போன்ற அலகினால் எழுத்தாணிக்குருவி எனவழங்குவது கூட மிகப் பொருத்தமான பெயர்கள்...

இதன் வாழிட எல்லைக்காகவும் இணையை அழைக்கவும் இது, ஹூப்பாப்பாப்...
ஹூப்பாப்பாப்...
எனச் சத்தமிடும்.இந்த ஒலியுன் காரணமாக ஆங்கிலத்தில் இதற்கு ஹூப்போ எனப் பெயர் வந்திருக்கலாம்...

உணர்ச்சியை வெளிப்படுத்தும்போதும் பறக்கத்துவங்கும்போதும் அதன் தலை உச்சியிலுள்ள கொண்டையை(crown) கருநுனி கொண்ட விசிறிபோல் விரித்துச் சுருக்கும்.அதனால் இதை விசிறிக்கொண்டை குருவி என்கின்றனர்...

எமது சிறிய வயதில் எங்க  கிராமத்தில் ஓட்டுவீட்டின் சுவற்றிற்கும் ஓட்டிற்கும் இடையில் பலவீடுகளில் கூட்டை அமைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன் சிறிய துவாரத்தில்கூட நுழைந்துவிடும்.ஓட்டைப்பிரித்து கூட்டைப்பார்க்கப் போன நான் நாற்றம்தாங்காமல் அப்படியே அதேபோல கூட்டை மூடிவிட்டுவந்த அனுபவமும் உண்டு.கூடு பழையதுணி,புல்,இறகுகளுடன் விரும்பத்தகாத நாற்றத்துடன் இருக்கும்.நாற்றத்துற்கு காரணம் உள்ளே இருக்கும் பொருட்களும் பாதுகாப்பிற்காக பெண்குருவியின் கழுத்துப்பகுதியில் சுரக்கும் வஸ்துவும்தான் காரணம்...

ஓட்டுவீடு குறைந்த இந்நாளில் வேறுவாழிடங்களைத் தேடிக்கொள்கிறது.
ஆனால் மரங்கொத்திகள்(woodpecker) பொதுவாக மனிதக்குடியிருப்புகளின் அருகில் மனிதர்களை நெருங்கிவாழும் தன்மையுடையதல்ல...

தமது வாழிட எல்லையை வரையறுத்துக் கொள்ளும் இந்தக் கொண்டலாத்தி, மற்ற எதிரி பறவைகள் கூடு இருக்கும் பகுதிக்கு வந்தால் கூச்சலிட்டு தமதுகூரிய அலகால் கோபமாக கொத்திவிரட்டும்...

சமீபத்தில்ஒருநாள் அழகாக புழுதிமண்ணில் ஒருஇணை குளியல் நடத்திக்கொண்டிருந்தைப் பார்த்தேன்.அடிக்கடி புழுதி மண்ணில் மண்குளியல் நடத்தும். தரையில் அது அசைந்து நடப்பது ரசிக்கக் கூடிய அழகு....

பாலைவனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும் இவை அரபு நாடுகளில் கதைகளில் இவற்றிற்கு நீண்ட நெடிய தொடர்பு உண்டு.இஸ்ரேல் நாட்டின் தேசியப்பறவைகூட இந்தக் கொண்டலாத்திதான்.தமிழ் இலக்கியங்களில்கூட இதை பதிவு செய்திருக்கிறார்கள்..

அழகான உருவத்தைக்கொண்ட இவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. இவையெல்லாம் இல்லாவிட்டால் பூச்சிகளுக்கு நடுவிலுள்ள இடைவெளியில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்...

சூழலியல் தேடலுடன்...
Ramamurthi Ram
நமது  முகநூல் பகுதியிலும் இவற்றைக் காணலாம்:
https://www.facebook.com/ramamurthi.ram.52

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...