Tuesday, 9 May 2017

கழுதையும் நானும்...

கழுதையும் நானும்...



இவரைத் தெரிகிறதா உங்களுக்கு ?
இவரைப்பற்றி ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு வரை பலர் அறிந்திருக்கலாம் பல விதத்தில் நம்மோடு வாழ்ந்தவர்தான் நம்ம கழுதையார்....

மனிதநாகரீக  வாழ்வில் பல படிகளை ஏற்றிய பெருமையில் இவருக்கும் பங்கு உண்டு. ஆனால் ஏதோ காரணத்தால் இவரை(இனி இதை எனவே விளிப்போம்)மரியாதைக் குறைவான ஒப்பீட்டிற்கும், உதாசீனப் படுத்துவதற்கும், ஒருவரை அவமானப் படுத்துவதற்குமே கழுதைகள் உவமையாக மனிதர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்...

இவற்றின் மரியாதையை நிமிர்த்த சகோதரர் கோவை சதாசிவம் தமது நம்ம கழுதை நல்ல கழுதை புத்தகத்தில் கடும் முயற்சி செய்திருக்கிறார் அனைவரும் வாங்கிப் படியுங்கள், அதை வீட்டில் வைத்திருங்கள் எதிர் காலத்தில் உதவும்....


எமது சிறிய வயதில் பல விதத்தில் இதைப் பார்த்திருக்கிறேன். அதில் ஒன்று எமது கிராமத்திற்கு வருடம் தவறாமல் கோயமுத்தூரிலிருந்து நீண்ட கோடை விடுமுறைக்கு வரும் ஒரு பையன் தவறாமல் இதன் வாலில் தகற டப்பாவையோ அல்லது பனை ஓலையையோ கட்டிவிடுவான் அது அதற்குப்பின் ஒரு ஓட்டம் எடுக்குமே  அது எப்போது முடிவுற்றது என எனக்குத் தெரியாது.அதன் ஓட்டம் எப்போது நிற்கும் என எண்ணியே பல நாட்கள் நான் தூக்கத்தை தொலைத்து துக்கமாகியதுண்டு....



எங்களது பக்கத்து நிலத்திலோ இதற்கு நடக்கும் கொடூரம் மிக அபாயமானது அந்த நிலத்தின் உரிமையாளர் தமது காட்டிற்குள் கழுதை வந்தாலே அதை குத்தீட்டியால்(வேல் போன்ற முனையுடைய நீண்டமூங்கில் குச்சில் பொருந்தியிருக்கும் ஆயுதம்)குத்தி விடுவார் கழுதையின் உரிமையாளர் அதாவது எங்கள் ஊரில் சலவைசெய்யும் வண்ணார் எனப்படுபவரே இதை வைத்திருப்பார் ....
அவர் அதற்கு ஏற்ப்பட்ட நிலையைக் கண்டு மனம் வருந்தி பேசாமல் செல்வதை எம்மால் அந்தச் சிறிய வயதிலும் உணர முடிந்தது.அதாவது இன்றைக்கு நாற்பது வருடங்களுக்கு முன்னர்....



எமது பள்ளிக்கூட காலத்திலோ இன்னும் பலவிதங்களில் கழுதைபற்றி மிக மட்டமாகவே மனதில் ஏற்றப்பட்டது அதுவும் அப்போதைய ஆசிரியர்களால்....
"ஏண்டா கழுதை"
"ஏண்டா கழுத அறிவிருக்கா?"
"ஏழு கழுதை வயசாயிடுச்சு இதுகூடத் தெரியலயா?"
"போ போ கழுதை கெட்டா குட்டிச்சுவர்"...
இப்படிப் பல விதங்களில்....

இப்படிப்பட்ட நம்ம கழுதையாரால் மனிதர்களுக்கு பல பெருமைகளும் உண்டு இங்கல்ல அதுவும் கூட ஒருசில நாடுகளில்,
அதிக கழுதைகளை வைத்திருப்போர் அந்த நாட்களில் மிகுந்த செல்வமுடையவர்களாகப் பார்க்கப் பட்டனர்....

இன்றைக்கு சுமாராக ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மனித சமூகத்துடன் ஒன்றிணைந்து மனிதனுக்காக மனித சமுதாய வளர்ச்சியில் கழுதைகள் பெரும்பங்காற்றியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது. மனிதர்களைச் சார்ந்து வாழும்(symbiotic)  தன்மைகொண்ட கழுதைகள், நாய்களப்போன்ற  அறிவுக்கூர்மையையும்,  எஜமானரிடம் அதிக விசுவாசத்தையும் வெளிக்காட்டக்கூடியவை என்பன அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபனமாகியுள்ளன....

கழுதைகள் மனிதனுக்கு பலகாலம் தொட்டு பலவிதத்தில் உதவியிருந்தாலும் குறிப்பாக உப்பளங்களிலும், உழவு வயல்வேலைகளிலும்,சலவைத் தொழிலிலும், மீனவர்கள் மீன்களையும் வலைகளையும் தூக்கிச் செல்லவும், விறகுகளை வெட்டிச் சுமக்கவும், மனிதர்களைச் சுமந்து செல்லவும் பொதி கழுதைகளின் பயன்பாடு உண்மையிலேயே பிரமிக்கத்தக்கவை....

மனிதச்சமூகங்களில் கழுதைகள் மிகப்பெரிய சொத்தாக ஒருகாலத்தில்  கணிக்கப்பட்டு வந்தன என்பதைப் பார்த்தோம் குறிப்பாக சீதனம் வழங்குவதில் கழுதைகளின் எண்ணிக்கை பிரதானமானதாகவும் இருந்தது...

நானறிந்தவகையில் சபரிமலை உட்பட பல கோவில்களில் கட்டுமானப் பணிகளில் உதவியதை (அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில்) நானே பார்த்திருக்கிறேன் இன்று டிராக்டர்கள் மூலம் கட்டுமானப் பொருட்களை சபரிமலைக்கு எடுத்துச்சென்று சூழல்பாதிப்பை ஏற்படுத்துவதையும்  காணலாம்....

ஆனால் கழுதைகளின் பலம் எப்படியென்றால் மிக சகிப்புத்தன்மையோடு பொதி சுமப்பது மட்டுமல்ல,கழுதைகள் தமக்குள்ளே ஒன்றிற்கொன்று தொடர்புகளை ஏர்படுத்திக்கொள்ள மிகையொலிகளைப் பயன்படுத்துகின்றன. கழுதை கத்துவதன் மூலம் (bray) 12 கி.மீ அப்பால் உள்ள தனது இனத்தை தொடர்புகொள்ளக்கூடியது. இதற்கு அதன் நீண்ட காதுகளும், பலமான தொண்டையமைப்பும், சக்திமிக்க நுரையீரலும் உதவுகின்றன என்றால் அதன் சக்தியை பாருங்கள்....

நம்ம ஊரில் கழுதைகள் மீதான பார்வை வேறுவிதமாக இருந்தாலும் எகிப்தில் குடும்ப ஆட்சி முறைகளில் (dynasty 4) கிமு 2675 க்கும் கி.மு 2565 இடைப்பட்ட காலப்பகுதியில் 1000ற்கும் மேற்பட்ட கழுதைகளை சொந்தமாக வைத்திருப்பவர்களே சமூகத்தில் பெரும் செல்வந்தராக பார்க்கப்பட்டனர். எகிப்தின் ஆட்சியாளர்களான அரசர் நேமர் , அரசர் ஹோர் அஹா (King Narmer or King Hor-Aha) அவர்களின் எலும்புக்கூடுகள் 2003 ஆம் ஆண்டில் தோண்டியெடுக்கப்பட்டன. அப்புதைகுழியில் 10 கழுதைகளும், மனிதர்களுக்கு வழங்கப்படும் மிகுந்த மரியாதை வழங்கப்பட்டு அரசனோடு சேர்த்து புதைக்கப்பட்டிருந்தது என்பது கழுதைகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறதுதானே....

வரலாறு முழுமையும் இப்படிப் பல பெருமைகளுடைய கழுதைகள்மேலான மனிதர்களின் எதிர்ப்புணர்வு உலகம் முழுவதும் எப்போதும் இருந்துகொண்டே தான் இருந்திருக்கிறது. கழுதை என்ற பதத்தைப் பயன்படுத்தி மனிதர்களைக் தாழ்மைப்படுத்துவதற்கான பழமொழிகளுக்கும் நம் சமூகத்தில் கொஞ்சநஞ்சமில்லை...


அப்புறம் இந்த ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்தவையே கோவேறு கழுதைகள் அவை குதிரைபோல் கனைக்கும் கழுதைபோல் நன்கு பொதியும் சுமக்கும். எம்மையும் ஒரு பதிநான்கு கிமீ கள் இமயமலையில் கேதார்நாத் மலைமீது சுமந்து சென்று திரும்ப கொண்டுவந்து விட்டிருக்கின்றன அது இப்போது இருக்குமா எனத் தெரியாது அவைகளுக்கு இங்கு எமது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக அதன் படங்களையும் இணைத்திருக்கிறேன்....



எப்படியிருப்பினும் எமது சம காலத்தவர்கள் இது பேப்பரையும், சினிமா போஸ்டரை தின்று வாழ்ந்ததையும்,கழுதையிடம் சிலர் உதைபட்டவரையும் ,கடிபட்டவரையும்,பாட்டுப் பாடுபவர்களை கழுதை கத்துவதோடு ஒப்பிடுவதையும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்....

யாருக்காவது கழுதைகளுடனான அனுபம் இருப்பின் பகிரவும்.இந்த வெண்மைக் கழுதை படங்கள் அனைத்தும் ஒரு மழைநாளில் மேற்கு தொடர்ச்சி மலையில் மசினங்குடியில் cafe coffee day வில் சமீபத்தில் எடுக்கப்பட்டவை அந்த அழகான வெண்மைக் கழுதைக்கும் நன்றி....

பி.கு: எங்கள் பகுதியில் கழுதையின் விட்டையை (shit)எடுத்துவந்து குழந்தைகளுக்கு சாம்பிராணி தூபம் போடுவதுபோல் காட்டுவார்கள் அதனால் என்ன பயன் எனத் தெரியவில்லை. கழுதை விட்டையை ஊர்சுற்றி எனக் குறிப்பிடுவார்கள்....

சூழலியல் ஆவலுடன்...
Ramamurthi Ram

நமது முகநூலில் இன்னும் அதிக தகவலோடு
https://m.facebook.com/story.php?story_fbid=1154551567994210&id=100003181323647

No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...