Thursday, 27 April 2017

மறுநடவு மரங்கள்

மரங்களின் இடமாற்றம் மரங்களிற்கு தடுமாற்றமா ?



சமீபகாலமாக மிக அதிக அளவில் இயற்கை ஆர்வலர்களால் பல ஆண்டுகள் வளர்ந்த முதிய மரங்களை மறுநடவு செய்யப்படுகிறது.இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தயவு செய்து மரங்களைப் பற்றி அறிந்த வல்லுனர்களும்,அனுபவசாலிகளும்,மரங்களின்மீது ஆர்வமுடையவர்களும் கருத்துகளை சொல்லவும்.இதுபற்றிய எமது பார்வைகூட தவறாக இருக்கலாம்.ஆகவே இந்தப் பதிவினைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இதுபற்றிய கருத்தினைக் கூறினால் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் அளவிற்கு உங்கள் கருத்து தொடக்கப்புள்ளியாக்கூட அமையலாம்...



எனக்குத் தெரிந்த அளவில், கடந்த ஆண்டில் இந்தியாவில் நமது தமிழ்நாட்டில் குன்னத்தூர் கோபி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான முப்பத்தி மூன்று புளிய மரங்களை இந்த மாதிரி மறுநடவு செய்யவதை பார்த்தேன்...



இப்படி ஊடகங்களால் பாராட்டியும் வியத்தும், இந்தமாதிரி மாற்றிடத்தில் மரங்களை பிடிங்கிநட்ட செயல்கள் கோவையிலும் அதைத்தொடர்ந்து பல இடங்களிலும் நடந்த இந்த செயல்,இரண்டு நாட்களுக்கு முன்னர் அவினாசியில் எமது நண்பர்களால் ஒரு அரசமரம் இடம்மாற்றி நட்டசெயல்.,எம்மை இப்போது பதிவிடத் தூண்டியது...



மரங்களின் மீதான பார்வையில் ஒரு விழிப்புணர்வும் எதிகாலத்தில் மரங்களின் தேவைகுறித்த அக்கறையும் இதில் தெரிவதைப்பார்த்து மிகமகிழ்ச்சியடைத்தாலும்,ஒருசிலவற்றையும் மனசினுள் சிந்திக்க வைக்கிறது...



இப்படி வயதான மரங்களை நடுவதென்பது..,
அதிக முயற்சி...
அதிக வேலைப்பளு...
அதிக செலவு...
அதிக பராமரிப்பு...
அதோடு மரம் துளிர்க்காவிட்டால் வீண்முயற்சியாக கூட ஆகிவிடும்...

ஆனால் இதுபோன்ற முயற்சியில் பாதிக்கும் குறைவான செலவில் அதிக அளவிலான மரங்களை உருவாக்கிடலாம்...
அதுவும் நன்கு வளர்ந்த ஆறடி செடிகளை நட்டு சிறிதுகாலம் பராமரித்தாலேபோதும் இதைவிட அதிக அளவில் மரங்களை உற்பத்தி செய்யலாம்...

அதுவுமில்லாமல்  வயது முதிர்ந்த மரங்கள் எவ்வளவுகாலம் இந்த மண்ணில் நிலைத்துநிற்கும் என சொல்ல முடியாது.அதே நேரத்தில் சில மரவகைகளின் போத்துகளை நடுவதன் மூலம் விரைவாக மரங்களை உருவாக்கிட முடியும்.ஒரே மரத்தின் நீண்ட கிளைகளால் சில மரங்களை உருவாக்கிடலாம்...

மரங்கள் சாலை விரிவாக்கத்தின்போதும்,மின்பாதைகள் அமைக்கும்போதுமே அதிக அளவில் வெட்டப்படுகின்றன அரசாங்கம் இதை மனதில் கொண்டு சாலைகளை மரங்களை வெட்டாமல்கூட மாற்றி அமைக்கலாம்.சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதில் முனைப்புக் காட்டும் அரசு.இருக்கிற மரங்களை வெட்டாமலும் பிடுங்காமலும் இருக்க புதிய சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கலாம்.மிச்சமிருப்பவைகளையாவது இனி தக்க வைக்கலாம்.ஆனால் அரசாங்கமே இந்த மரமழிக்கும் வேலைகளை செய்யாமலிருக்க வேண்டும்...



முன்பல்லாம் மக்களுக்குத்தான் இதுபற்றி அக்கறை இருக்காது.ஆனால் இப்போது மக்களுக்கு அக்கறை அதிகமாகிவிட்டது.அதன் விளைவுதான் மக்களே உழைப்பையும் பணத்தையும் செலவுசெய்து குளங்களையும் நீர்வழிப்பாதைகளையும் சீரமைப்பதோடு,இதுமாதிரி மரங்களை மாற்றிடத்தில் நடும் நிகழ்வுகளையும் செய்கிறார்கள். நாட்டைச் சீரமைக டாஸ்மாக் கடைகளை அடித்துநொறுக்கி சீரமைப்பதையும் பார்த்து வருகிறோம்.அரசு செயல்படாதபோது மக்கள் செயல்படுவது மிகப்பெரிய மாற்றம்....



புதியநம்பிக்கை எட்டிப்பார்க்கிறது...
அக்கறையுடன்.,
Ramamurthi Ram

மரங்களை இடமாற்றி நடுவதுபற்றிய பலரது கருத்துப் பரிமாற்றங்களை எமது முகநூல்பதிவில் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=1269510503164982&id=100003181323647

Friday, 21 April 2017

பூமிதினம்(Earth day)2017

ஏப்ரல் 22
பூமிதினம்(Earth day)2017



எதற்காக இந்த தினமெல்லாம் ?...
இது கொண்டாட்ட தினமா ?
இல்லை....
"எச்சரிக்கை"தினம்...
இயல்பான பூமியாக இருந்தால் இதுமாதிரி எந்த தினத்தையும் அனுசரிக்கத்தேவையில்லை.,
இந்தபூமிப்பந்தின் இயல்புநிலையை மாற்றி எச்சரிக்கை கோட்டையும்(deadline)தாண்டவைத்துவிட்டோம் என்பதனை எச்சரிக்கவே இதுமாதிரி தினங்களை யாரோ  ஒருசிலர் ஒன்றுகூடி பயத்தால் உருவாக்கப்பட்டவைகள்தான் இதுமாதிரி தினங்கள். இதில் என்ன கொடுமை என்றால் இந்த பூமியில் வாழுகிற மனிதர்களில் அதிகமானவர்களுக்கு இன்னும் இந்தமாதிரி எச்சரிக்கைகள் போய்ச் சேரவேயில்லை என்பதுதான்...

அப்படி என்னதான் இந்த பூமிக்கு நடந்துவிட்டது அதற்கு நான் என்னசெய்வது இதுதானே பலரின்கேள்வி!!!...

சுத்தமான காத்து காணாமல்போய் காத்தெல்லாம்
மாசு...
மாசு...
மாசு...

பூமியிலுள்ள நீரெல்லாம் குடிக்கவே லாயக்கில்லாத நீராக மாறியதோட எங்க ஊருப்பக்கம் ரெண்டாயிரம் அடிக்கு கீழேதான் ஈரமண்ணையே பார்க்கமுடியுது...
உண்கிற உணவும்,நீரும்,
நஞ்சு...
நஞ்சு...
நஞ்சு...

எங்கும் பூத்துக்குலுங்கிய பசும்போர்வை போர்த்தியிருந்த பூமியெங்கும் ஒரே
குப்பை...
குப்பை...
குப்பை...
-இன்றைக்கு இந்தக் குப்பைகளுக்கு பல பெயர்கள் குப்பகளில் பலவகைகள் எங்களுக்குத் தெரிந்த குப்பையெல்லாம் ஆடு மாடுகளின் கழிவுகள்தான்...,
ஆனால் இன்றக்கோ ஒழிக்கவே முடியாத எலக்ட்ரானிக் குப்பைகள்,
பிளாஸ்டிக் குப்பைகள்,
ரசாயனக்குப்பைகள்,
மருத்துவக் குப்பைகள்...
அனல்மின் குப்பைகள்...
அணுக்கழிவுகள்...
-இதுவெல்லாம் என்ன ? இதுவெல்லாம் யாரால் ?
இதுவெல்லாம் எதனால் ?...

இந்தபூமி மிகச்சிலரின் சொகுசுக்காகவும் திருப்திக்காகவும் தினம்தோறும் ஒவ்வொருநொடியும் சிதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது இதை சிதைப்பவர்களில் தாம் என்ன செய்கிறோம் என்பதையே உணராத அறியாத மனிதர்கள்தான் அதிகம்...

ஒவ்வொரு நிமிடமும் இந்த பூமிமுழுவதும் ஐம்பத்தாறு ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகிறதாம்.இதில் எங்க ஊர்ல தனியார் நிலங்களில் உள்ளூர் மரவெட்டியால் வெட்டுகிற மரமும்..,
வளர்ச்சீங்கற பேர்ல ரோடுபோட்றேன் ஊரை விரிவாக்குறேன்,தொழிற்சாலை கட்றேன்ட்டு வெட்டுற மரமெல்லாம் கணக்குல வருமான்னு தெரியல...

பூமியச் சுற்றியுள்ள தாவரக் கவசத்தையும்,ஓசோனையும் ஓட்டையப்போட்டதால பூமி நாளுக்கு நாள்
வெப்பம்....
வெப்பம்...
வெப்பம்...
-இப்படியே போனா  அடுத்துவரும் நாட்களில் நாம் எங்குபோய் நிற்போம்?...
அனேகமா இந்த பூமியே தந்தூரி அடுப்புமாதிரி ஆகிவிடும் இப்பவே அந்தமாதிரிதான் இருக்கிறது...
அதோடு.,
குடிக்கநீரும்,
மூச்சுவிட காற்றும்
உண்ண நல்ல உணவும் இல்லாமலேயே போய்விடும்.அதோடு இனி,
பருவத்தில் மழை இருக்காது
அல்லது மிகுதியான பெருமழைபெய்யும்...
தொடர்ந்த நீண்ட வறட்சிநிலை உருவாகலாம்....
விளைநிலங்கள் பாலைநிலமாகலாம்...
இனி என்ன செய்யப் போகிறோம்?

மனிதன்உழைப்பில்லாமல் என்றைக்கு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தானோ அன்று துவங்கியது இந்த சூழல்சிதைவு.ஆக இதன் வரலாற்றை ஆராய்ந்து எந்தப் பயனுமில்லை...

மனிதர்களைத் தவிர எந்த உயிரினமும் இயற்கையை சிதைத்துவாழவில்லை...
மனிதர்கள்கூட உணவிற்காக சிதைக்கவில்லை,
சொகுசான,
வசதியான வாழ்க்கைக்கும்,
மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் எனக்காட்டிக்கொள்ள இயற்கையை சிதைத்து பொருளைக்குவித்து,மிகத் தாழ்ந்தவனாகிவிட்டான்....

சூரியனைச்சுற்றிவருகிற கோள்களிலேயே உயிர்வாழக்கூடிய சூழல் உடைய சிறப்பான கோள்தான் இந்த பூமி.., இனி இந்த உயிர்ச்சூழல் உடைய பூமியில் இதற்குமேலும் நாமும் நமது சந்ததியினரும் வாழவேண்டும் என்கிற சுயநலத்தினை மனதில் கொண்டாவது முறையாக வாழப்பழகுவோம்...

*மரங்களை வெட்டுவதை நிறுத்தி வணிக நோக்கில்லாத மரங்களை இந்த பூமியெங்கும் நடுவோம்...
*பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து மஞ்சள்பையை கையிலெடுப்போம்...
*முடிந்தவரை சைக்கிளை ஓட்டுவோம் முடியாவிட்டால் பொதுப் போக்குவரத்தையாவது பயன்படுத்துவோம்...
*உயிர்வாழத் தேவையானதை மட்டும் வாங்குவோம் தேவையற்றதை வாங்கும் நுகர்வு மனப்பான்மையை புதைப்போம்...
*வணிகநோக்கில் இயற்கையை அழித்து  காசாக்குவதை தடுப்போம்...

-தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்த்து எளிமை வாழ்க்கை வாழ்ந்தாலே வருங்கால சந்ததியினரும் மூச்சுவிட வாய்ப்பாய் அமையும் இல்லையென்றால் இந்தபூமி தம்மை எப்படியாவது சமன்படுத்திக்கொள்ளும். உருவத்தில் மிகப்பெரிய டைனோசர்களையே காணாமல்போகச் செய்த இந்த பூமிக்கு மனிதர்களை சரிசெய்ய வெகுநேரம் ஆகாது...

இந்த புவிநாளில் அதை உணர்ந்து வாழ்வோம்.இனிவரும் எல்லா நாட்களையும் புவிநாளாகவே அனுசரித்து வாழ்வோம்...
சூழலியல் அக்கறையுடன்:
Ramamurthi Ram
முகநூல் பக்கத்திற்கு:
https://www.facebook.com/ramamurthi.ram.52



Monday, 17 April 2017

ஆந்தைகளுக்கு (Owls) நன்றி செலுத்துவோம்...

ஆந்தைகளுக்கு (Owls)
நன்றி செலுத்துவோம்...

(உருவம் என்றும் நிலையில்லாதது.,செய்கிற செயல்தான் என்றும் இந்த பூமிஉள்ளவரை நிலைக்கும்)

"கோட்டான் கத்தினா சாவு நடக்கும்"- அதுவும் எந்தவீட்டிற்கு அருகிலிருந்து அலறுகிறதோ அந்த வீட்டு வயசானவங்க பாடையில ஏத்தற அளவில  கிராமத்துல பேசுவாங்க.,அதனாலேயே இதற்கு "சாவுக்குருவி" ன்னு இன்னொரு பேரு.,
எங்கவீட்டுக்கு அருகில் கத்தும்போது எமக்கு சாவுபயம் எட்டிப்பார்க்கும்பாருங்க. அத நெனச்சா இப்ப சிரிப்பாவருது...



"ஏண்டா கூகையாட்ட முழிச்சிட்டிருக்கிறே ?"- இது ஒரு வசவுச்சொல்....
இந்தமாதிரி இந்த உலகம் பூராவுமே பல நாடுகளில் ஆந்தைமீது ஒரு பீதியக் கிளப்பும் அறிவாளி மனிதர்கள் இருந்துகொண்டேதான் இருந்திருக்கிறார்கள்.அதற்கு அதன் செயல்பாடும் ஒரு காரணமாக இருக்கலாம்...

மனிதர்களைப் போன்றே தட்டையான முகத்தில் இமைக்காத கண்கள்மூலம் நீண்ட நேரம் தீவிரமாக உத்ற்றுப் பார்க்கும் தன்மை.உடலைத்திருப்பாமல் பின்பக்கமுள்ளவற்றையும் தலையை மட்டும் முழுவதும் திருகி(திருப்பி)ப்பார்க்கும் அமைப்பு(270டிகிரி கோணம்வரை)இரவில் மட்டும் நடமாட்டம். நிசப்தமான இரவில் இடைவிடாத அலறல் இதுவெல்லாம் அரவமற்ற சூழலில் வாழ்ந்த அந்தக்கால மனிதர்களுக்கு இனம்புரியாத அச்சத்தையும் ஆந்தைகளின்மீது வெறுப்பையும் உண்டாக்கியிருக்கலாம்.காரணமே இல்லாமல் ஆந்தையை எங்கு கண்டாலும், மனிதர்களை கொல்லவருபவனை அடித்துக்கொல்லும் ரேஞ்சில், கூட்டமாக வெறியோடு கொல்வதை நேரில் பார்த்திருக்கிறேன்....

உயிர்ச்சூழலை சமன்படுத்த இயற்கை ஒவ்வொரு உயிர்களையும் உலகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் தட்பவெப்ப புவியமைப்பிற்கேற்ப ஏற்படுத்தியிருக்கிறது.அப்படி வலுவான காரணத்திற்காக, இந்த பூமியில் மனிதர்களுக்கு முன்னரே உருவானதுதான. இந்த ஆந்தைகள் ஆக மனிதனுக்கு முன்னரே உருவானதால் ஆந்தைகள் மனிதர்களைக் கொள்ள படைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்...

ஆந்தை அலறுவது அதன் இணையை ஈர்த்து குடும்பம்நடத்ததானே தவிர மனிதர்களின் மரண அறிவிப்பிற்கில்லை.இங்கு இப்படியிருக்க வட நாட்டில் ஒருசில பகுதிகளில், ஆந்தையை மகாலட்சுமியின் வாகனமாகவும்.,அது எந்தவீட்டில் அமர்ந்து அலறுகிறதோ அந்த வீட்டிற்கு நல்ல செய்தியை சொல்லவந்த தூதுவனாகவும் மதிக்கிறார்கள்.சில நாடுகளில் இதை ஒரு அறிவிற்கானகுறியீடாக வைத்திருக்கிறார்கள்.அதனால் பல பலகளைக்கழக சின்னங்களில் ஆந்தை இடம்பெற்றிருக்கிறது.கிரேக்க தேவதை அதீனாவின் சின்னம் ஆந்தை. அந்த நாட்டுத் தபால் தலைகளிலும், பழைய நாணயங்களிலும் ஆந்தையை வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள்...

வடமாநிலங்களில் பலபகுதிகளில் ஏவல்,பில்லி,சூனியம் போன்ற அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மந்திரதந்திர வேலைகளில் ஆந்தைகளை பலியிட்டும் ஒவ்வொரு செயலுக்கும் ஆந்தைகளின் ஒவ்வொரு உடல்பாகத்தைப் பயன்படுத்தும் ஏமாற்றுப்பேர்வழிகளும் அவற்றை நம்பி பணத்தையிழக்கும் எளியமனிதர்கள் மட்டுமல்ல பெரிய அரசியல் பிரபலங்களும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை....

இந்தமாதிரி செயல்களுக்கு வடமாநில கிராமங்களில் பதினைந்திற்கு மேலான வகைகளை பிடித்து ஆந்தைவியாபாரம் கொடிகட்டிப்பறக்கிறது.ஒரு ஆந்தை அதன் வகையைப் பொறுத்து ரூபாய் ஐந்தாயிரத்திற்கு மேல் விற்கப்படுகிறது...

1972 ம் ஆண்டின் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் ஆந்தைவேட்டையும் வியாபாரமும் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும் வடிந்தி கிராமங்களில் இதை தடுப்பது சிரமம் தான் அவர்கள் புலி,சிறுத்தைகளைக்கூட அடித்துக்கொள்ள அஞ்சுவதில்லையே....

உண்மையில் ஆந்தை நமக்கு நண்பன் எப்படித் தெரியுமா?...
வயல்களிலும் உணவுக் கிடங்குகளிலும் உணவுப் பொருட்களுக்கு பெருத்த சேதம் விளைவிப்பது
எலிகள். எலிகளால் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 5-10 சதவிகிதம் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஓர் ஆண்டுக்கு எலிகளினால் 20 மெட்ரிக் டன் அளவு வயலிலும், 33 மெட்ரிக் டன் அளவு சேமிப்பு கிடங்குகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
எலி ஒரு ஆண்டில் ஐந்து ஆறு முறை குட்டிகள் போடும், ஒவ்வொரு முறையும்
சுமார் பத்துப் பன்னிரெண்டு குட்டிகளைப்போட்டுத் தள்ளுகிறது...

ஒரு ஜோடி எலிகள் அதன் ஆயுற்காலத்தில சுமாராக 500 முதல் 2000 வரையாக உருவாகுமாம். இப்படி
அளவுக்கு அதிகமாக பெருகும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது
அவற்றைத்தின்னும் ஆந்தைகளும் பாம்புகளும் தான். எலிகளின் எண்ணிக்கை
கட்டுப்பாடற்று பெருகும். எலிகள் தானியங்களுக்கு சேதம் விளைவிப்பதோடல்லாமல்  ஆட்கொல்லி நோய்களான ப்ளேக், லெப்டொ ஸ்பிரோஸிஸ்
இவற்றையம் பரப்புகிறது.இப்போது புரிகிறதா ஆந்தையை ஏன் இயற்கை உருவாக்கியதென்று?

இந்த ஆந்தை தன் குஞ்சுக்கு என்ன இரை கொடுக்கிறது என்று தெரியுமா ? அப்படியே ஒரு முழு எலி. ஒரு குஞ்சு ஒரு இரவில் ஒன்றிலிருந்து இரண்டு எலிகளைத்
தின்னும் அதேசமயம் ஒருஆந்தையானது ஒரு இரவில் நான்கு எலிகளுக்குமேல் தின்னும்.ஆந்தை இரவில் இரை தேடும் பறவை இனம்.எலியும் இரவில் நடமாடக்கூடியது...

தொலைவில் உள்ள இரையைக்கூட ஆந்தைகளால் தெளிவாகப் பார்க்க முடியும்.ஆனால் அருகிலிப்பதைப் பார்க்க சிரமப்படுமாம்.

ஆந்தைகள் பூச்சிகளையும் சிறிய பிராணிகளையும் உணவாக உட்கொள்ளும். சில ஆந்தை வகைகள் மீன்களையும் வேட்டையாடி உண்ணும்.ஆந்தைகளின் வலுவான நகங்கள் இரையைப் பிடிக்கவும் கொல்லவும் உதவியாக உள்ளன...

அண்டார்க்டிகா தவிர மற்ற எல்லா நிலப்பரப்புகளிலும் ஆந்தைகள் உள்ளன.

ஆந்தையின் காதுகள் இரண்டும் வேறு வேறு அளவுகளில் இருக்கும். ஆந்தைகளுக்குக் கேட்கும் திறன் அதிகம்.

ஆந்தைகளால் பகலில் பார்க்க முடியாவிட்டாலும் இரை எழுப்பும் ஒலி மூலம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

ஆந்தைக்கு மூன்று இமைகள் உள்ளன. ஒன்றை மூடித் திறக்கவும், மற்றொன்றைத் தூங்குவதற்கும், இன்னொன்றைக் கண்ணை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கப் பயன்படுத்திக் கொள்ளும்.

நிறைய ஆந்தைகளுக்குத் தலையில் காது மடல்கள் கொம்புகள் போல அமைந்திருக்கும். ஆனால், அவை காதுகள் அல்ல. கொம்பு என்று அழைக்கப்பட்டாலும் அது சிறகுதான்.

ஆந்தைகள் பகலில் தூங்கி இரவில் சுறுசுறுப்பாக இயங்கும் பறவைகள்.
அதற்கேற்றபடி அவற்றின் கண் பார்வை அமாவாசை இரவிலும் துல்லியமாகத்
தெரியும்.

பெரியவகைகளில் நான்கரை கிலோ எடைவரை இருக்கும்.
ஆந்தைகளின் இறக்கையில் உள்ள இறகுகள் மிக மிக மிருதுவானவை. அதனால் அவை
பறக்கும் போது சத்தமே உண்டாகாது. அதனால் இரைஉயிரிகளை ஆந்தை நெருங்கும் வரை இரையால் உணரமுடியாது!..

ஒரு கூகை ஆந்தை ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் எலிகள் வரை பிடித்துத் தின்னும்...
சூழலியல் தேடலுடன்:
Ramamurthi Ram

இவ்வளவு நன்மைகளை இந்த மனிதர்களுக்கு செய்யும்
ஆந்தைகளை போற்றி அவற்றின் வாழிடங்களை சிதைக்காமல் பாதுகாக்கனுமா ? இல்லையா???
சொல்லுங்கள்.....

இதேபோன்ற சூழலியல் சார்ந்த பதிவுகளை எமதுமுகநூலில்காண:
https://www.facebook.com/ramamurthi.ram.52

Wednesday, 12 April 2017

புங்கன்-நமது மண்ணின் மரங்களை அறிவோம்

நமது மண்ணின் மரங்களை அறிவோம் 3



இனி வரக்கூடிய காலங்களில் பூமி வெப்பமடைவது என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டேபோகும் என்கிறார்கள். இன்னும் பத்தாண்டுகளில் தற்போதயவெப்பத்தைவிட இன்னும் கூடுதலான வெம்மை இருக்கும் என்கிறார்கள் இப்பவே தாங்கமுடியல இதைவிட அதிகம்னு சொன்னா ?....

எனவே அந்தநிலை மாறவேண்டுமெனில் பூமியின்மீது சூரிய ஒளி நேரடியாக படுகின்ற இடங்களைக் குறைக்கவேண்டும் அதைத்தவிர வேறொரு வழியுமில்லை.அதற்கு தீர்வு பூமியெங்கும் மரங்களை நடுவதே.விரைந்து இந்தபூமியை பசும்போர்வைகொண்டு போர்த்துவோம் அதற்கேற்ற அதிக ஆக்ஸிஜன் கொடுக்கின்ற மரங்களாகவும் வெப்பத்தை குறைக்கக்கூடிய மரங்களாகவும் மண்ணிற்கேற்ற மரங்களாகவும் இருக்கிற மரவகைகளின் வரிசையில் இன்று புங்கன் மரம் அல்லது புங்கமரம் என தமிழில் குறிப்பிடப்படும் மரத்தினைப்பற்றி பார்ப்போம்...



இவைஇருக்கும் பகுதிகளில் அங்கு வாழும் மக்கள் அவரவர் வட்டாரப் பெயர்களில் கரஞ்ச், கரஞ்சா, புங்கை,புங்கு அல்லது பூந்திஅல்லது சுரஞ்சகம் (Millettia pinnata)
என அழைக்கிறார்கள்...

இந்தியாவை தாயகமாகக் கொண்டது இந்தப் புங்கன். அதுவும் நமது மேற்குதொடர்ச்சி மலைகளில் தோன்றியதாக தாவரவிலாளர்களால் குறிப்பிடப்படும் இம்மரம்
வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான நிழல் தரும் மரங்களில் புங்கை மரம் சிறந்தது ஏனெனில் அவற்றின் இலைகள் சிறிதானவை, மரம் முழுவதுமே இலைகள் நிறைந்து அடர்த்தியாக இருக்கும், அதேசமயம்  இலைகளுக்கிடையே ஊடுறுவும் காற்றை தடுப்பதில்லை உள்ளே புகுந்து வெளியேவரும் காற்றானது மிகுந்த குளுமையுடன் வெளியேவருவதால் மரத்தினைச்சுற்றி எப்போதும் நிறைந்த குளுமையாகவே இருக்கும்.மற்ற மரங்களை ஒப்பிடும்போது இதன் நிழல் மிக அடர்த்தியாக இருக்கும் அதாவது மரத்தினடியில் சூரிய வெளிச்சத்தினையே காணமுடியாது...



புங்கன்மரத்தினை வீட்டில் வளர்க்கக் கூடாது என்கிற கருத்தினைச் சிலர் சொல்வார்கள் இது மிக்க குளுமைத்தன்மையோடு இருப்பதால் வெயில் காலங்களில் இதனடியில் இருப்பவர்கள் அந்த இடத்தினைவிட்டு நகர மனமே வராது.அதனால் உழைக்காமல் சுகமாக மரத்தினடியிலேயே இருந்துவிடுவார்கள் என்பதால்கூட முற்காலத்தில் இவ்வாறு சொல்லியிருக்கலாம்.ஆனால் தற்போதைய புவிமிகுவெப்பம் அடையும் நிலை அதிகமாகிக் கொண்டே இருப்பதால் புங்கன் மரங்களை வீட்டில் மட்டுமல்ல வீட்டைச்சுற்றிலும்  இருக்கிற காலியிடமெங்கும் வளர்க்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...



மழைகாலத்தில் இலைகள் முற்றிலும் கொட்டிப் போகமல் இருக்கும் போதே துளிர்கள் வந்துவிடும், இம்மரம் பருவகாலத்திற்கு ஏற்றவகையில் தம்மை வளர்த்துக் கொள்ளும் தன்மை உடையது. அதன் கொத்து கொத்தான பூக்களில் தேன்நிறைந்து இருப்பதால் அவை பூக்கும் காலங்களில் தேனீக்களையும் வண்டுகளையும் ஈர்க்கும். வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூப் போன்று காணப்படும். இம்மரப் பூக்கள் மூலிகை மருந்தாகவும் பயன்படுகிறது, இதன் காய்கள் புருவம் சேர்த்த ஒரு கண் அளவுக்கு வளர்ந்து, உள்ளே ஒன்று அல்லது இரண்டு விதைகளோடு இருக்கும். பச்சை நிறத்திலிருக்கும் காய்கள் முதிரும்போது மஞ்சள்நிறம்கலந்த கோதுமை நிறத்திற்கு மாறி முற்றிகாய்ந்த நிலையில் உதிர்ந்துவிடும்...



புங்கை விதைகள் எண்ணெய் தன்மை கொண்டவை, இதன் எண்ணைகள் எரியும்தன்மை கொண்டவை, மருந்தாகவும், பயோ டீசலாகவும் பயன்படுத்தலாம், எண்ணெய்எடுத்தபின் எஞ்சிய புண்ணாக்கு நல்ல இயற்கை உரமாகும்...

புங்கன்மரம் மிகுந்த உயரமாக வளராத நடுத்தர உயரமுள்ள என்றும் பசுமை மாறாத விரிந்த சிவிகையைஉடைய மரமாகும் நம்நாட்டில் பெரும்பாலும் நிழலுக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. சுந்தரவனக் கரையோரப்பகுதி, அந்தமான் மற்றும் தீபகற்ப இந்தியாவின் ஆற்றங்கரைகள், சாலை ஓரங்கள், கால்வாய் கரைகள், கடலோரப்பகுதி,தரிசு மற்றும் விவசாய நிலங்கள் என வறண்ட நிலம் சதுப்பு நிலம் உவர்மண்நிலம் வனப்பகுதி என எல்லா இடங்களிலும் எல்லாதட்பவெப்நிலையிலும் நன்கு வளரக்கூடியது...

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களில் மூங்கிலுக்கு அடுத்தநிலையில் புங்கன்மரம் இருக்கிறது.இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும்,மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன...

புங்கன் வறட்சித் தாங்கக்கூடிய, நைட்ரஜனை நிலைப்படுத்தும் மரங்களில் ஒன்று.வனச்சூழலில் இது விதைகள் மூலம் மளமளவென்று தோன்றுகிறது. விதைகள் மூலமும் வேர்கள் மூலம் புதுமரத்தை உருவாக்கும் இயல்புடையது.நானும் எமது நண்பர்களும் மேற்குதொடர்ச்சிமலையின் அத்திக்கடவு பகுதிகளில் இருவாச்சிப் பறவைகளைத்தேடிச் செல்லும்போது பவானிந்தியின் கரைகள்முழுவதும் இருப்பதைக்கண்டோம் அதுவும் இது வேர்மூலம் புதிய இளம் கன்றுகளை உருவாக்கி இருப்பதை பார்த்து மிகுந்த ஆச்சரியப்பட்டோம்....

மரம் முழுவதுமே மிகுந்த மருத்துவ குணமுடையது.எங்கள் கோவை வட்டாரப் பகுதிகளில் இதன்காய்களை குழந்தைகளுக்கு கழுத்திலோ இடுப்பிலோ கட்டிவிடுவதை சிலகாலங்களுக்குமுன் பார்த்திருக்கிறேன். இந்தப் பழக்கம் எந்தெந்தப் பகுதியில் இருந்ததென்று தெரியாது...

வெப்பத்தைக்குறைப்பதில் முதலிடத்திலும்....
மிகுந்த மருத்துவகுணமும்... மாற்று எரிபொருளாக இதன் எண்ணெயும்...
உரமாக புண்ணாக்கும்...
நாராக இதன்பட்டைகளும்...
மூச்சுக் காற்றை சுத்தம் செய்ய இது வெளிப்படுத்தும் அதிக அளவு ஆக்ஸிஜனும்....
-இப்படி  எல்லாவகையிலும் பயனுள்ள எங்கும் வளரக்கூடிய நமது மண்ணின் மரமான இதை எங்கள் அவினாசி பகுதிகளில் வளர்க் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.இதைப்படிக்கிற நீங்களும் அதிக அளவு வளர்த்து இந்தபூமியின் வெப்பத்தைக்குறைத்து அவரவரால் முடிந்த அளவில் சுற்றுச்சூழலை காப்போம்...
_____________________________
இதுபோன்ற பதிவுகளை கீழே உள்ள இணைப்பில் சென்று எமது Facebook
பகுதியிலும் பார்க்கலாம்:

https://m.facebook.com/story.php?story_fbid=1254705237978842&id=100003181323647


Tuesday, 4 April 2017

Prince of bandhipur...

Miss you legend....
Prince of bandhipur...
வருந்துகிறோம்....



"பிரின்ஸ் " - இந்தப் பெயர் பந்திப்பூர்-கர்நாடக காட்டிற்கு வழக்கமாகச் செல்பவர்களுக்கும் கானுயிர் ஆர்வலர்களுக்கும் ஒரு அதிர்வலையை உண்டாக்கும்....

"பிரின்ஸ்"- இப்போது நம்மிடையே இல்லை என அதிகாரமற்ற செய்திகள் வருவது பலருக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது...

இது உண்மையாக இருக்கவே கூடாது.அப்படி உண்மையாக இருந்தால், PRINCE உன் மரணம் இவ்வளவு மோசமாக இருந்திருக்கக்கவே கூடாது.
ஒரு அனாதையைப்போல்...

நீ காட்டிற்குள் வாழ்ந்திருக்கலாம் ஆனால் உலகம் முழுவதிலும் உன்மேல் அன்பும்,காதலும்,ஆவலும் வைத்திருப்போர் எத்தனைபேர் என எனக்குத் தெரியும்.இந்த செய்திகேட்டு அழுதவர்கள் பலரைப் பற்றி நான் அறிவேன்.அவர்களின் ஆதங்கம்,காட்டிற்குள் இறந்து ஒருவாரத்திற்கும் மேலாகி கிடைத்த புலி நீயாக இருக்கக்கூடாது என்பதே...

உண்மையாக நீ இறந்து உனது இறுதிச்சடங்கு அறிவிப்பு கொடுத்திருந்தால் அங்கு எவ்வளவு கூட்டம் கூடியிருக்கும் என்பதை நாங்கள் உணர்வோம்.உண்மையாக இருக்கும் பட்சத்தில் உன்மரணம் மரியாதை கொடுக்கப்படாமலேயே போனது அனைவருக்கும் வருத்தமே...

மூன்றுவருடங்கள்  நீண்டநாள் தேடலில் முதல்முறை ஒருசில நொடிகள் மட்டுமே என்னால்  உன்னைப் பார்க்க முடிந்தது. ஆனால் கடந்த பொங்கல் நாளன்று இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக "கொளக்குமல்லி கட்டே"வில் உம்மோடு இருந்த நாளை எம்மால் மறக்கவே முடியாது.அன்று நவரசங்களையும் காட்டிவிட்டாய் எங்களது தீவிர ஆவலுக்கு நீ தீனிபோட்டதாகவே அன்று தோன்றியது. எங்களது மனஓட்டத்தை புரிந்து கொண்டு, எங்களை அன்று காட்டிற்கு வரவழைத்ததாகவே தோன்றியது எனக்கு, எங்களுக்கு அன்று முழு நிறைவு.அதுவே நீ மனிதர்களின் கண்ணில் பட்ட கடைசிநாளாக சொல்கிறார்கள்...

நீ அந்தக் காட்டின் அரசன்தான்.அப்படி மக்கள் அழைப்பதில் தவறில்லை புலிகளின் இயல்பிற்கு மாறுபட்ட இயல்புடைய உம்மை அப்படி அழைக்கலாம்தான். இனி நீ இல்லாவிட்டால்  அந்த இடத்தை யார் நிறைவு செய்வார்கள் ?....

பொதுவாக பெரும்பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலிகள் மிகுந்த கூச்ச உணர்வு உடையவை.அதாவது மனிதர்களிடமிருந்து விலகியே இருக்கும்....

மத்தியப் பிரதேசமாநிலம் பாந்தவகார் தேசியபூங்காவில் சார்ஜர் என்கிற புகழ்பெற்றபுலி. அது யாரைப்பார்த்தாலும் எதைப்பார்த்தாலும் உறுமிக்கொண்டு விரட்டியடிக்க ஆரம்பிக்கும்,பயமுறுத்தி தாக்குவதற்கு துரத்தும் அது காட்டிற்குள் செல்லும் சஃபாரி வாகனங்களாக இருந்தாலும் சரி மற்ற விலங்குகளாக இருந்தாலும் சரி.அதனாலேயே அந்தப்புலிக்கு Charger என்கிற பெயர் வந்தது. ஆனால் இந்த பிரின்ஸின் குணம் முற்றிலும்  அதற்கு மாறுபட்டது என்பார்கள்.2009 ம் ஆண்டுவாக்கில் இதை முதலில் பார்த்ததாக கூறப்படுகிறது.அப்போது முதல் இப்போதுவரை அடிக்கடி மனிதர்கள் கண்ணில் படும்போதெல்லாம் இது பதட்டமோ,பயமோ இல்லாமல் ஏன் மனிதர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.இதன் இந்த குணத்தாலேயே தென்னிந்தியாவில், அதுவும் இந்தியாவிலேயே அதிகப்புலிகள் உள்ள ஒரு காட்டில், இதுமட்டுமே மிகப்புகழ்பெற்றதற்கு காரணம்.தென்னிந்திய புலிகளில் மிக அதிகமாக புகைப்படம் எடுத்தது இதைத்தான்.

ஒரு ஆண்புலிகளின் வாழிட எல்லை சுமார் முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவாக இருக்கும். ஆனால் இதன் ஆளுகை எல்லை சுமார் என்பது கி.மீ பரப்பளவாக பார்த்துக்கொண்டு அந்த எல்லைக்குள் அதாவது மூன்று ஆண்புலிகள் வாழும் காட்டின் பரப்பளவில் எந்த ஆண்புலியையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டதுகூட இதற்கு இவ்வளவு பெயரையும் புகழையும் கொடுத்திருக்கலாம்.மனிதக்குடியிருப்புகளுக்கு அருகிலேயே இதன் வாழிடப்பரப்பு இருந்தாலும் இதுவரை எந்தவிதத்திலும் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை.அடிக்கடி சுற்றுலாவாசிகளையும் வன ஊழியர்களையும் கண்டும் காணாமலுமே கடந்து சென்றிருக்கிறது...

"கௌரி" பத்துவருடங்களுக்கு முன்னர் பந்திப்பூரில் இதே குணங்களோடு இருந்த பெண்புலி. "அகஸ்தியா"    அப்போது 14-16 வயதான ஆண்புலி இந்த இரண்டிற்கும் பிறந்ததுதான் பிரின்ஸ் என்கிறார்கள் இது தனது தாயின் குணத்திலேயே இருப்பதாகச் சொல்கிறார்கள்.இதற்கு இப்போதைய வயது 14-15 ஆக இருக்கலாம்....

தமது வாழ்நாளில் தமது வாழிட எல்லைக்குள் வந்த பல ஆண்புலிகளை விரட்டியடித்து கொன்றதாக இதைப்பற்றி சொல்கிறார்கள் நான் இதை இறுதியாக பார்த்த கடந்த ஜனவரிக்கு முன் நடந்த சண்டையில் ஒரு ஆண்புலியின் காலை உடைத்துவிட்டதாம் நான் பார்க்கும்போது இதன் வாயருகில் சிறிய காயம் இருந்தது...

இந்தக்காட்டை ஆள இதன்வாரிசான சுல்தான் என்கிற "பசவனகட்டே" மேல்(Male)இப்போது வந்துவிட்டதாக சொல்கிறார்கள் இதனோடும் சண்டையிட்டிருக்கிறது பிரின்ஸ்.எமக்குத் தெரிந்து இதைப்பார்க்காமல் ஏக்கத்திலிருக்கும் புகைப்படக்காரர்களே மிக அதிகம் அவர்களுக்காகவாவது நீ மீண்டும் வா...

Monday, 3 April 2017

மண்ணிற்கேற்ற மரங்கள் 2 அரசமரம் (Peepal tree)




"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தேதீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்....

நமது மண்ணின் மரங்களைப்பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்...

மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம்.நன்கு வளர்ந்த அரசமரம் சுமார் நூறுஅடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது.இவற்றின் பலனும் மிகப்பெரியது. அதனால்தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில்  இதற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளனர்...



எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டிவிடவேகூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய கடவுள் நிலையில் வைத்திருந்தது தமிழ்ச்சமூகம்.வேறு எந்தக்காரணத்தைச் சொன்னாலும் வெட்டிவிடுவார்களோ என்கிற அக்கறைகூட அதன்கீழே சாமிசிலைகளை நட வைத்திருக்கலாம்.அவ்வளவு முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றதே இந்த அரசமரம்...



புத்தரிற்கு போதிமரத்தின் கீழ் ஞானம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது அந்த போதிமரம் வேறெதுவுமில்லை அரசமரம்தான்.ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுதான் மூளைக்காண உணவு.வளர்சிதை மாற்றத்தில் சிதைகிற உடலை சரிகட்டுவதில்  பிராணவாயுவின் பங்கே மிகமிக அதிகம்.பிராணன் என்கிற உயிர்வளியை நன்குவளர்ந்த ஒருமரம் நாளொன்றிற்கு சுமார் இரண்டாயிரத்து நானூறு கிலோவரை வெளியிடுகிறதாம்.ஒரு மனிதனுக்கு தேவையான உயிர்வளியின் அளவு நாளொன்றிற்கு எண்ணூறு கிராம் எத்தனைபேருக்கு உதவெகிறது என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.இதை அரசமரம் என்பதில் தவறே இல்லை.மற்றொரு சிறப்பாக அரசமரமானது இரவுநேரத்திலும் பிராணவாயுவை வெளியிடுவதாக சொல்கிறார்கள்.
இவ்வளவு உயிராற்றலின்கீழ் யார்தொடர்ந்து அமர்ந்திருந்தாலும் ஆரோக்கியமும் சிந்தனைத்தெளிவும்(ஞானம்)பெற்று புத்தனாகலாம் என்பதில் சந்தேகமில்லை !!!...



சும்மா மரத்தினடியில் இரு உடலின் ஆரோக்கிய குறைபாடுநீங்கும் எனச் சொன்னால் யாரும்பின்பற்ற மாட்டார்கள் என்பதாலோ என்னவோ அதை கடவுளாக்கி அதன்வேரினடியில் நீரைஊற்றி சுற்றிவா என அதன்கீழே ஒரு சிலையையும் வைத்திருக்கின்றனர்.நாமோ இன்று காரணத்தை மறந்து காரியத்தைமட்டும் செய்து கொண்டிருக்கிறோம்.மரத்தின் வேரைச்சுற்றிலும் கான்கிரீட் தளத்தைப்போட்டு அதன் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம்...

இந்த கோடையின் துவக்கத்திலேயே மிகுவெப்பத்தால் படுகிற வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.அருகில் ஏதாவது அரசமரம் இருந்தால் அதனடியில் சிறிதுநேரம் அமர்ந்துபாருங்கள் அந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் அனுபவித்துவிட்டு செல்லுங்கள். இயற்கையும் கோடைக்குத்தகுந்தபடி புதிய தளிர் இலைகளுடன் தயார்படுத்தியிருக்கும் அழகையும் கவனியுங்கள்....

அஸ்வத்தம்,
அச்சுவத்தம்,
திருமரம்,
போதி,
கவலை,
பேதி,
கணவம்,
சராசனம்,
மிப்பலம்...
இதுவெல்லாம் அரச மரத்தின் பெயர்கள்....

எல்லாப்பறவைகளும் இரவு அடைவதற்கு எல்லாமரங்களையும் தேர்ந்தெடுக்காது ஆனால் பெரும்பாலான பல பறவைகள் இரவு இருப்பிடமாக பெரும்பாலும் அரசமரத்தை விரும்புகின்றன.பல்லுயிர்ச்சூழல் பெருக்கத்தில் உதவுவதில் பெரும்பங்கைக் கொடுப்பது அரச மரங்களே.இதன் பழங்களை பறவைகள் விரும்பு உண்ணும் என்பது இன்னும் சிறப்பு....

இனியாவது இதன் மகத்துவத்தை உணர்ந்து வேறு அன்னிய மரங்களைத் தவிர்த்து,வாய்ப்புள்ள இடங்குல் எல்லாம் நமது மண்ணின்மரமான அரசமரத்தினை நட்டு இந்த பூமியை குளிர்வித்து, மழையை ஈர்த்து சுகமாக நல்ல காற்றினை வரும் தலைமுறையை சுவாசிக்கச் செய்வோம். நீரைப்போல் காற்றையாவது காசுகொடுத்து வாங்காமல் இருப்போம்....

இங்கேயும் பாருங்கள்:
https://m.facebook.com/story.php?story_fbid=1245729378876428&id=100003181323647

Saturday, 1 April 2017

சீமைக்கருவேல மரங்கள்மட்டுமா அழிக்கப்பட வேண்டியவை ?

சீமைக்கருவேல மரங்கள்மட்டுமா அழிக்கப்பட வேண்டியவை ?



சிலகாலமாக மரம்நடுவிழா இலவச மரக்கன்றுகள் கொடுக்குமிடங்கள் போன்றவைகளில் கூட இந்த மண்ணைச் சார்ந்த மரங்களல்லாத அயல் மரங்களையே பலவற்றைக் கொடுத்து, அவற்றை நடும் போக்கு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது....

அயல்மரங்களை தொடர்ந்து நடப்படுவது என்பது வனக்காடுகளை அழிப்பதைவிட அதிகதீங்கை கொண்டுவந்துவிடும்....

மிக நீண்ட நாட்களுக்கு முன்னர்அப்படி தென்அமெரிக்காவிலிருந்து வந்து இந்த மண்ணை ஆதிக்கம் செய்து இன்று அதை ஒழிப்பதில் போரிற்கான ஆயத்தம்போல் அரசும் பிற சமூக அமைப்புகளும் தீவிரமாக களத்தில் உள்ளதை சமீபகாலமாக காண்கிறோம்...

இதற்கெல்லாம் என்ன காரணம் ?
ஒரே பதில் அறியாமைதான்.ஆர்வமுள்ள அளவிற்கு அடிப்படை தகவலை தெரிந்து கொள்ளாததே காரணம்.
அந்த தாவரங்களை எதோஒரு அயல்நாட்டிலிருந்து இங்கு கொண்டுவந்த,கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கிற தாவரங்களால் இந்த மண்ணிற்கும்,இந்த மண்ணில்வாழும் உயிர்களுக்கும்  எந்தவிதத்திலாவது பயனாக இருக்குமா என்கிற அடிப்படையான தகவலை முதலில் அறிந்து கொள்ளவேண்டும்...

அயல்மரங்களைப் பொருத்தவரை நீண்டகாலம் நிலைத்துநின்று தொடர்ந்த பலன்களை கொடுப்பதென்பது மிக மிக குறைவுதான். ஒருசில மிக குறைவான பலன்களைக் கொடுத்தாலும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அவற்றின் பங்கு என்பது கேள்விக்கு உரியதுதான்.அதோடு அந்த அயல்மரங்களுக்கு இங்கே இயற்கை எதிரிகள் குறைவு என்பதோடு வேகமீக நீரை உறிஞ்சி விரைவாக பரவுவதோடு இந்த மண்ணின் இயல் தாவரங்களை தன்னருகே வளரவேவிடாது.பெரும்பாலான பறவைகளை ஈர்க்கும் தன்மையில்லாத மலட்டு மரங்கள் அவை...

அயல்மரங்கள் பலவித சிக்கல்களைத்தான் அதிகம் உண்டாக்கும்.ஏனென்றால்அந்த தாவங்களின் தன்மை வேறு அது அதன் தாய்மண்ணின் தட்பவெப்பம்,மண்ணின் தன்மைக்கேற்ற பண்போடு இருக்கும் அதைக்கொண்டுவந்து முற்றிலும் வேறான சூழலில் நடப்பட்டால் நன்மைக்குப் பதில் இங்கு தீமைகளையே அதிகமாகும்.விரைவில் வளர்ந்துவிடும் தன்மையினாலேயே அயல்மரங்கள் விரும்பப் படுகின்றன ஆனால் நமது தட்பவெப்ப சூழலைத் தாங்காமல் விரைவிலேயே அழிந்தும் விடும்.வர்தாப் புயலின் போது இவற்றை உணர்ந்தோமே.நமது மரங்கள் அதிக காற்றிற்கு சிறிய சேதாரத்தோடு தாங்கிநின்றதையும் அயல் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததையும் பார்த்தோமே....

அப்படி சீமைக்கருவேலம் வரிசையில் சமவெளிப்பகுதிகளில் பரவிவரும் யூக்கலிப்டஸ் மரத்திற்கும்,சர்க்கரைப் பழம் என்கிற சிங்கப்பூர் செர்ரிக்கும் நீலகிரி தேயிலை செடிக்கும் குடகு காபி செடிக்கும் இன்னும் பல தாவரங்களுக்கும் எதிர்காலத்தில்கூட இப்படித்தான்  ஒரு நாள் நமது அடுத்த தலைமுறையினர் போராடிக்கொண்டு இருப்பார்கள்....

காலகாலமாக சமவெளிப்பரப்பிற்கு ஆண்டுமுழுவதும் நீராதாரமாக இருந்த மலைப்பகுதி காடுகளில் அன்னியத்தாவரங்களின் ஆக்கிரமிப்பு என்பது ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்போடு ஆரம்பித்துவிட்டது.அவர்கள் செய்த முதல் வேலை அவர்களின் தேவைக்காக சோலைக்காடுகளையும் புல்வெளிக்காடுகளையும் வகைதொகையின்றி அழித்து நமக்கு சிறிதும் பொருத்தமற்ற தேயிலை,காபி தோட்டங்களை ஆரம்பித்து அங்கே மற்ற இடங்களில் எரிபொருள் தேவைக்காக தேவதாரு (Pine),வாட்டில் (Wattle tree) என்கிற சீகை மரம்,உண்ணி(Lantana) தைல மரம் (Eucalyptus), சாம்பிராணி மரம் (Cyprus tree) ஆகியவற்றை நட்டார்கள்.அவர்கள் சென்றபின்னரும் எதையுமே உணராத சம்பந்தப்பட்ட நமது அரசின் துறைகளும் அவற்றையே பின்பற்றி வருவதுதான் உச்சகட்ட வேதனை.தேனீரும் காபியும் நமது வெப்பபிரதேச நாட்டிற்கு தேவையே இல்லாதது அவை அவர்களுன் குளிர் பிரதேச நாட்டிற்கான பானம்.நமக்கு நீர்மோர்,இளநீர்,பதநீர் போன்ற உடலைக் குளிர்விக்கும் பானங்களே ஏற்றது.அதன் மேலான அடிமைக்குணம் மட்டும் சுதந்திரத்திற்கு பின்னரும் மாறவேயில்லை....

அவர்கள் சென்றுவிட்டார்கள் ஆனால் அவர்கள் கொண்டுவந்த தாவரங்கள் இங்கேயே தங்கியதோடு இன்றுவரை நமது வற்றாத நதிகளை வேரறுத்துவிட்டன.இன்றோ நாம் நதிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம்....

வனங்களில் இன்னும் கொடுமை உண்ணிச்செடிகள்(Lantana)அவற்றால் உண்டாகியிருக்கும் உயிர்ச்சூழல் பாதிப்பு மிக அதிகம்.புல்வெளிப்பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டன.இதனால் தாவர உண்ணிகன் வாழ்க்கைச்சூழல் மிகப் பாதிப்புக்குள்ளாகி விட்டது.இவற்றின் விதைப்பரவலோ மிகவேகம் இப்படி எஞ்சியிருக்கும் காடுகளும் மிகச் சவாலுடனேயே இருக்கிறது...

தேயிலைத் தோட்டங்களையும் காபித்தோட்டங்களையும் சீமைக்கருவேல் மரங்களைப்போன்று அழிப்பதே காடுகளையும்,நதிகளையெம் மீட்டெடுப்பதற்கான நிரந்தரத்தீர்வு ஆகும்...

இவற்றைத்தவிர்க்க நடப்படும்போதே அது நமது மண்ணைச்சேர்ந்த இயல் மரங்களாக நட்டுவிட்டால் பின்னர் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம். அந்த மரங்களும் இந்த மண்ணின் தன்மைக்கு ஏற்றபடி வாழ்ந்து பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாகவும் வசிப்பிடமாகவும் உதவி அதன் பிரதி பலனாக அவற்றின்மூலம் தன்சந்ததியை பெருக்கிக்கொள்ளும்.காடுகளும் தாவரங்களும் இயல்பாக இயற்கையாகவே பரவும்...

இந்தக்காடு பெருக்கத்திற்கு நாம் செய்யும் ஒரே செயல். மனிதர்கள்மூலம்  அயல்மரங்களை நம் பூமியில்  ஊடுறவச்செய்யாமல்,எஞ்சியிருக்கிற நம் மண்ணின் மரங்களை அழிக்காமல் பார்த்துக் கொண்டாலே போதும் காடு தன்னைத்தானே பெருகிக்கொள்ளும் நாம் அதற்கு உதவவேண்டியதே இல்லை....

மரங்களை வெட்டி காகிதம் தயாரித்து பத்திரிக்கை தயாரித்து அதில் நாம் மரம் நடுவிழா புகைப்படங்களைப் போடாமல் இருந்தாலேபோதும் மரத்திற்கு நாம் செய்யும் பெரும் உதவி....

(இனி இயல்மரங்கள் ஒவ்வொன்றைப்பற்றியும் தொடர்ந்து அறிவோம்)

இன்னும் விரிவாக காண:
https://m.facebook.com/story.php?story_fbid=1243633449086021&id=100003181323647.

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...