Saturday, 1 April 2017

சீமைக்கருவேல மரங்கள்மட்டுமா அழிக்கப்பட வேண்டியவை ?

சீமைக்கருவேல மரங்கள்மட்டுமா அழிக்கப்பட வேண்டியவை ?



சிலகாலமாக மரம்நடுவிழா இலவச மரக்கன்றுகள் கொடுக்குமிடங்கள் போன்றவைகளில் கூட இந்த மண்ணைச் சார்ந்த மரங்களல்லாத அயல் மரங்களையே பலவற்றைக் கொடுத்து, அவற்றை நடும் போக்கு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது....

அயல்மரங்களை தொடர்ந்து நடப்படுவது என்பது வனக்காடுகளை அழிப்பதைவிட அதிகதீங்கை கொண்டுவந்துவிடும்....

மிக நீண்ட நாட்களுக்கு முன்னர்அப்படி தென்அமெரிக்காவிலிருந்து வந்து இந்த மண்ணை ஆதிக்கம் செய்து இன்று அதை ஒழிப்பதில் போரிற்கான ஆயத்தம்போல் அரசும் பிற சமூக அமைப்புகளும் தீவிரமாக களத்தில் உள்ளதை சமீபகாலமாக காண்கிறோம்...

இதற்கெல்லாம் என்ன காரணம் ?
ஒரே பதில் அறியாமைதான்.ஆர்வமுள்ள அளவிற்கு அடிப்படை தகவலை தெரிந்து கொள்ளாததே காரணம்.
அந்த தாவரங்களை எதோஒரு அயல்நாட்டிலிருந்து இங்கு கொண்டுவந்த,கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கிற தாவரங்களால் இந்த மண்ணிற்கும்,இந்த மண்ணில்வாழும் உயிர்களுக்கும்  எந்தவிதத்திலாவது பயனாக இருக்குமா என்கிற அடிப்படையான தகவலை முதலில் அறிந்து கொள்ளவேண்டும்...

அயல்மரங்களைப் பொருத்தவரை நீண்டகாலம் நிலைத்துநின்று தொடர்ந்த பலன்களை கொடுப்பதென்பது மிக மிக குறைவுதான். ஒருசில மிக குறைவான பலன்களைக் கொடுத்தாலும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அவற்றின் பங்கு என்பது கேள்விக்கு உரியதுதான்.அதோடு அந்த அயல்மரங்களுக்கு இங்கே இயற்கை எதிரிகள் குறைவு என்பதோடு வேகமீக நீரை உறிஞ்சி விரைவாக பரவுவதோடு இந்த மண்ணின் இயல் தாவரங்களை தன்னருகே வளரவேவிடாது.பெரும்பாலான பறவைகளை ஈர்க்கும் தன்மையில்லாத மலட்டு மரங்கள் அவை...

அயல்மரங்கள் பலவித சிக்கல்களைத்தான் அதிகம் உண்டாக்கும்.ஏனென்றால்அந்த தாவங்களின் தன்மை வேறு அது அதன் தாய்மண்ணின் தட்பவெப்பம்,மண்ணின் தன்மைக்கேற்ற பண்போடு இருக்கும் அதைக்கொண்டுவந்து முற்றிலும் வேறான சூழலில் நடப்பட்டால் நன்மைக்குப் பதில் இங்கு தீமைகளையே அதிகமாகும்.விரைவில் வளர்ந்துவிடும் தன்மையினாலேயே அயல்மரங்கள் விரும்பப் படுகின்றன ஆனால் நமது தட்பவெப்ப சூழலைத் தாங்காமல் விரைவிலேயே அழிந்தும் விடும்.வர்தாப் புயலின் போது இவற்றை உணர்ந்தோமே.நமது மரங்கள் அதிக காற்றிற்கு சிறிய சேதாரத்தோடு தாங்கிநின்றதையும் அயல் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததையும் பார்த்தோமே....

அப்படி சீமைக்கருவேலம் வரிசையில் சமவெளிப்பகுதிகளில் பரவிவரும் யூக்கலிப்டஸ் மரத்திற்கும்,சர்க்கரைப் பழம் என்கிற சிங்கப்பூர் செர்ரிக்கும் நீலகிரி தேயிலை செடிக்கும் குடகு காபி செடிக்கும் இன்னும் பல தாவரங்களுக்கும் எதிர்காலத்தில்கூட இப்படித்தான்  ஒரு நாள் நமது அடுத்த தலைமுறையினர் போராடிக்கொண்டு இருப்பார்கள்....

காலகாலமாக சமவெளிப்பரப்பிற்கு ஆண்டுமுழுவதும் நீராதாரமாக இருந்த மலைப்பகுதி காடுகளில் அன்னியத்தாவரங்களின் ஆக்கிரமிப்பு என்பது ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்போடு ஆரம்பித்துவிட்டது.அவர்கள் செய்த முதல் வேலை அவர்களின் தேவைக்காக சோலைக்காடுகளையும் புல்வெளிக்காடுகளையும் வகைதொகையின்றி அழித்து நமக்கு சிறிதும் பொருத்தமற்ற தேயிலை,காபி தோட்டங்களை ஆரம்பித்து அங்கே மற்ற இடங்களில் எரிபொருள் தேவைக்காக தேவதாரு (Pine),வாட்டில் (Wattle tree) என்கிற சீகை மரம்,உண்ணி(Lantana) தைல மரம் (Eucalyptus), சாம்பிராணி மரம் (Cyprus tree) ஆகியவற்றை நட்டார்கள்.அவர்கள் சென்றபின்னரும் எதையுமே உணராத சம்பந்தப்பட்ட நமது அரசின் துறைகளும் அவற்றையே பின்பற்றி வருவதுதான் உச்சகட்ட வேதனை.தேனீரும் காபியும் நமது வெப்பபிரதேச நாட்டிற்கு தேவையே இல்லாதது அவை அவர்களுன் குளிர் பிரதேச நாட்டிற்கான பானம்.நமக்கு நீர்மோர்,இளநீர்,பதநீர் போன்ற உடலைக் குளிர்விக்கும் பானங்களே ஏற்றது.அதன் மேலான அடிமைக்குணம் மட்டும் சுதந்திரத்திற்கு பின்னரும் மாறவேயில்லை....

அவர்கள் சென்றுவிட்டார்கள் ஆனால் அவர்கள் கொண்டுவந்த தாவரங்கள் இங்கேயே தங்கியதோடு இன்றுவரை நமது வற்றாத நதிகளை வேரறுத்துவிட்டன.இன்றோ நாம் நதிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம்....

வனங்களில் இன்னும் கொடுமை உண்ணிச்செடிகள்(Lantana)அவற்றால் உண்டாகியிருக்கும் உயிர்ச்சூழல் பாதிப்பு மிக அதிகம்.புல்வெளிப்பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டன.இதனால் தாவர உண்ணிகன் வாழ்க்கைச்சூழல் மிகப் பாதிப்புக்குள்ளாகி விட்டது.இவற்றின் விதைப்பரவலோ மிகவேகம் இப்படி எஞ்சியிருக்கும் காடுகளும் மிகச் சவாலுடனேயே இருக்கிறது...

தேயிலைத் தோட்டங்களையும் காபித்தோட்டங்களையும் சீமைக்கருவேல் மரங்களைப்போன்று அழிப்பதே காடுகளையும்,நதிகளையெம் மீட்டெடுப்பதற்கான நிரந்தரத்தீர்வு ஆகும்...

இவற்றைத்தவிர்க்க நடப்படும்போதே அது நமது மண்ணைச்சேர்ந்த இயல் மரங்களாக நட்டுவிட்டால் பின்னர் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம். அந்த மரங்களும் இந்த மண்ணின் தன்மைக்கு ஏற்றபடி வாழ்ந்து பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாகவும் வசிப்பிடமாகவும் உதவி அதன் பிரதி பலனாக அவற்றின்மூலம் தன்சந்ததியை பெருக்கிக்கொள்ளும்.காடுகளும் தாவரங்களும் இயல்பாக இயற்கையாகவே பரவும்...

இந்தக்காடு பெருக்கத்திற்கு நாம் செய்யும் ஒரே செயல். மனிதர்கள்மூலம்  அயல்மரங்களை நம் பூமியில்  ஊடுறவச்செய்யாமல்,எஞ்சியிருக்கிற நம் மண்ணின் மரங்களை அழிக்காமல் பார்த்துக் கொண்டாலே போதும் காடு தன்னைத்தானே பெருகிக்கொள்ளும் நாம் அதற்கு உதவவேண்டியதே இல்லை....

மரங்களை வெட்டி காகிதம் தயாரித்து பத்திரிக்கை தயாரித்து அதில் நாம் மரம் நடுவிழா புகைப்படங்களைப் போடாமல் இருந்தாலேபோதும் மரத்திற்கு நாம் செய்யும் பெரும் உதவி....

(இனி இயல்மரங்கள் ஒவ்வொன்றைப்பற்றியும் தொடர்ந்து அறிவோம்)

இன்னும் விரிவாக காண:
https://m.facebook.com/story.php?story_fbid=1243633449086021&id=100003181323647.

No comments:

Post a Comment

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...