Monday, 6 November 2017

சத்தியமங்கலம் காடுகளில் வனச்சுற்றுலா

மகிழ்ச்சி மிக மகிழ்ச்சி...
(கொஞ்சம் வருத்தம்)


அறிவிப்பு வந்தவுடனேயே மிக சந்தோசமாக இருந்தது. அறிவிப்பு வந்துகூட கொஞ்ச நாட்களாக அதை நடைமுறைப் படுத்தும் காலம் நீண்டு கொண்டே இருந்தது. அதை நம்புவதா இல்லை வேண்டாமா ? என்றுகூட மனதிற்குள்ளே ஒரு கேள்வி விடாமல் ஓடிக்கொண்டே வந்தது. இதன்மூலம் தான் அது நடக்கிறது என வாட்ஸாப்பில் இரண்டைக் காட்டினார்கள்.அப்போதுகூட கொஞ்சம் அவநம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் நேற்றைய முன்தினம் பத்திரிக்கைகளில் செய்தியை அச்சில் பார்க்கும்போது இறுதியாக,உறுதியாக நம்ப வேண்டியதாகிவிட்டது.....

அந்த இரண்டும் அருமையான safari van தாங்க...
அப்புறமாக வேறொன்றும் இல்லீங்க நம்ம சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட wildlife safari தாங்க அளவற்ற மகிழ்ச்சிக்கு காரணம்...

இப்போதைக்கு இது முன்னோட்டமாக பரீட்சார்த்த முறையில் அதுவும் கிட்டத்தட்ட ஏழு இடத்தில்!!!!...
நடைபெறுவதாக சொன்ன அறிவிப்பு கொஞ்சம் குழப்பினாலும் போய்பார்த்தே தீரவேண்டும் என்கிற ஆவலில் நேற்றைய இரவு முழுவதும் தூங்கவே இல்லை.போவதா இல்லை வேண்டாமா என்கிற மன நிலையிலேயே இருந்தோம் இரவு பதினொன்றை மணிக்கு போவதாக முடிவெடுத்ததால் பல ஆர்வலர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லவே முடியவில்லை :D

இன்று காலை ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி,இடையில் ஒரு  டீயும் ஒரு காபியும் குடித்து சத்தி வன அலுவலகத்தை 6.35 சென்றடைந்தோம்.அதற்கு முன்னரே திருப்பூர் இயற்கை கழகத்தைச் சேர்ந்த நமது அறிவார்ந்த,அன்பான நமக்குப் பிடித்தமான 12 பேர் தயாராக திருப்பூரிலிருந்து வந்தது ஆச்சரியமில்லை.அவர்கள் வந்த நேரமும் வேகமும்  அவர்களின் வழக்கமான அர்ப்பணிப்பை உணர்த்தியது...

ஒரு வழியாக 7 மணியளவில் கிளம்பி சத்தியமங்கலம் வனப்பகுதியை நோக்கி தீவிர ஆவலுடன் சென்றோம் இன்றைக்கு முதல் நாள் என்பதால் எங்களுடன் Ranger மற்றும் Forester ம் இரண்டு Gaurd களும் APW களும் வந்தனர்.மிக மிக அக்கறையோடு சிறப்பாக கவனித்துக்கொண்டனர்.முதல் நாள் இதுவும் முதல் Trip என்பதால் நாங்கள் அனைவருமே சிறப்பு விருந்தினர்கள் பட்டியலில் இருப்பதை உணர்ந்தோம்....

ஆனாலும் சில தீவிர பிரச்சனைகளை சொல்லாவிட்டால் நான் பொறுப்பற்றவனாவேன்.முதலாவது நாங்கள் சென்ற வாகனம் நாம் எதிர்பார்த்த அந்த புதிய காட்டுலா வாகனங்களில்  இரண்டில் ஒன்றுகூட இது இல்லை!!!...

நாங்கள் சென்றது திருப்பூரிற்கு தொழிலாளர்களை அழத்துச்செல்லும்  ஒரு சாதாரண வாகனம். இரண்டாவது திட்டமிட்ட அளவிற்கு பெரிய முன்னேற்பாடுகள் இல்லை இதில் முக்கியமானது பாதை.நேற்றுப் பெய்த மழையில் ஒரே சகதியும் சேறும்.பல மாநிலங்களில் வன உலா சென்ற நமக்கு,நமது சொந்த மண்ணில் நடக்கும் நிகழ்வை பெரிய எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தது குறைவில்லாத ஏமாற்றத்தையே கொடுத்தது ...

இதில் வன ஊழியர்களையோ அல்லது வனத்துறையினையோ அதுகாரிகளையோ குறை சொல்ல ஒன்றுமில்லை. கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது நமது வனத்துறை இதற்கு நமது பெருமைமிகு அரசே காரணம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல ?...

பல இடங்களைக் கடக்க வெகு தாமதமானது. எல்லாமே கிட்டத்தட்ட ஒரு சடங்கு நிகழ்வாகவே நடந்தேறியது.ஆனாலும் ஏற்கனவே நானும் எமதுமகளும் கடந்த மே மாதத்தில் யானைகள் கணக்கெடுப்பில் மூன்றுநாட்கள் சுற்றித்திரிந்தது இதே பகுதிதான்(ஆனால் அன்றைக்கு  இங்கே ஒருசிறு பல்லியைக்கூட பார்க்கவில்லை என்பதை வெளியில் எப்படிச்சொல்வது?...)

இன்றைக்கு இறுதியாக ஒரு நன்கு திடகாத்திரமாக வளர்ந்த ஒரு ஆண் கடமாவை(Indian Gaur) பார்த்து வியந்தோம்....

உண்மையாக சொல்லப்போனால் இந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகமென்பது மிகப் பெரியது.நீங்கள் இதை முது மலையுடனோ அல்லது பந்திப்பூருடனோ ஒப்பிட்டே பார்க்க முடியாது இதன் பரப்பளவு 1411 சதுர கிலோமீட்டர். இது 2013ல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு.தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கடந்த நான்கு வருடங்களாக நடந்த ஆய்வின்படியே இந்த வனச்சுற்றுலாவை நடத்த முடிவெடுத்து இருக்கிறார்கள்....

ஆனாலும் சிறப்பொன்றும் இல்லை என்பது ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும், எங்கோயோ வெகு தொலைவில் நடந்த இது மாதிரி வனச்சுற்றுலா நிகழ்வுகள் எமது சொந்த மண்ணில் நடப்பது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் என்பதில் அடங்காத உவகை.சற்று ஆறுதல் என்னவென்றால் இது Trial தான் விரைவில் ஒரு சரியான உருவத்திற்கு வரும்.இது பெரிய வனப்பகுதிதான் ஆனாலும் ஏழு இடங்களில் நடத்த வேண்டியதில்லை.இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டும் சிறப்பாக செய்தால்போதும்.மாற்றிக்கொள்ளாவிட்டால் பெரிய வெற்றி என்பது இருக்காது....

இது தொடர்பாக கேள்விகள் இருந்தால் கேளுங்கள் எமக்கு தெரிந்தது எதுவோ அதைச் சொல்கிறேன்.இது வீரப்பன் காடு.பல கற்பனை மற்றும் நிஜக் கதைகள் அடங்கிய மாபெரும் பொக்கிசம்...

*********************************
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ரசிக்கலாம் வாங்க! 'வண்ணப்பூரணி' வனச்சுற்றுலா திட்டம் தொடக்கம் -
https://goo.gl/EeE6d2 

Sunday, 17 September 2017

"கொன்றால் பாவம் தின்றால் போச்சு"

எத்தனை சட்டம் போட்டு தடுத்தாலும் கள்ளவேட்டை என்பதை தடுக்க முடிகிறதா ?...



இன்றைக்கும் பத்திரிக்கைகளில் கள்ளவேட்டை தொடர்பான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. மனிதர்கள் மட்டுமே இந்தபூமியில் வாழத் தகுதியானவர்களா ?
அப்படி மனிதர்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ்ந்திடமுடியுமா ?
மனிதர்களுக்கு மட்டுமே ஏன் இந்த பூமியில் இவ்வளவு ஆதிக்க உரிமை ?
மனிதர்கள் அவ்வளவு உரிமை பெற்றவர்களா ?...



ஆதியில் மனித சமூகம் காடுகளில் தன்னிச்சையாக வாழ்ந்து திரியும்போது வேட்டையென்பது உணவிற்கான தேவையாக இருந்தது.ஓரிடத்தில் தங்க நேர்ந்தபோது நாகரீக வாசம் வந்து பிற தேவைகளான உடையையும் எரிபொருளையும் விலங்குகளின் தோலும் கொழுப்பும் தீர்த்தன...

ஆதியில் வேட்டை சமூகத்திலிருந்த  மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தின் பல லட்சக்கணக்கான ஆண்டு வாழ்க்கை ஓட்ட மாறுபாட்டில், கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு நிலையாக ஓரிடத்தில் வாழ ஆரம்பித்து தனக்கான உணவு,உடை,இருப்பிட போக்குவரத்துவசதிகளை கச்சிதமாக ஏற்படுத்திக்கொண்டாலும்.சமீபகாலம் வரை  பிற காட்டுயிர்களை வேட்டையாடுதலை நிறுத்தவே இல்லை.பல உயிரினவகைகளை உலகத்திலிருந்தே முற்றிலுமாக துடைத்து அழித்தபின்னரே சிலரிற்கு அந்த விசயம் குற்ற உணர்வை ஏற்படுத்தி பாதித்திருக்கிறது அதன் பிறகே கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு உண்டாகி வனச்சட்டங்கள் பல நாடுகளில் தீவிரமாக நடைமுறைக்கு வந்தது....

இந்தியாவில் 1972 ம் ஆண்டு வனவிலங்கு சட்டம் அமுலுக்கு வரும்வரை வேட்டை என்பது உணவிற்காகாக என்பது சிதைந்து அது ஒரு ஹீரோயிசமாக வேட்டையாடுபவர்களால் நினைக்கப்பட்டது.ஆனால் இன்று காட்டுயிர்களை வேட்டையாடுவது மிகத் தண்டனைக்குரிய குற்றம்.சட்டந்தான் நம்மை மாற்றவேண்டுமானால் நாம் யார்?...

ஆக வேட்டையாடுதல் என்பது ஆரம்பத்தில் சரியே ஆனால் மனிதர்கள் வாழும் சூழலைமட்டுமே பெருக்கி,சுயநலமாக உலகம் முழுவதும் உள்ள காடுகளை சுருக்கி சுருக்கி குறைத்து காட்டுயிகள் வாழும் சூழலை குறுக்கிய நிலையில் எஞ்சியிருக்கும் காட்டுயிர்களை கண்ணி வைத்துபிடிப்பதும் கள்ளத் துப்பாக்கி கொண்டு கள்ளவேட்டையாடுவதும் கொஞ்சமாவது நியாயமா நீங்களே சொல்லுங்க...



இன்றும் கள்ளவேட்டை ஆங்காங்கு மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது இந்தநிலையை மாற்ற சட்டங்களும் அதை நடைமுறைப்படுத்தும் அரசு அமைப்புகளுக்கு மட்டுமே பொறுப்பென்றால் நாமெல்லாம் பொறுப்பற்ற மனிதர்களே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்...

இப்போதைக்கு நாம்தான் இந்த உலகில் உருவான கடைசி உயிரினம் என்பதை நினைவில் கொள்வோம்.ஆகவே இதுபற்றி எதாவது அவசிமாக சொல்லவும் உறவுகளே,நண்பர்களே,அன்பானவர்களே ....

Monday, 11 September 2017

"யானைடாக்டர்"

"யானைடாக்டர்"
நண்பர்களுக்கு அறிமுகம் செய்த நம்ம டாக்டர்.



முன்னுதாரணமாக மாமனிதர்கள் இன்றும் இருப்பார்கள்.நம் கண்களுக்கு அவர்கள் தட்டுப்படுவதில்லை,அவ்வளவுதான்...
அவர்களில் ஒருவர் டாக்டர் கே.
...அவரின் வரலாற்றை அடுத்த தலைமுறையின் முன் கொண்டு சென்று நிறுத்துவதே இச்சிறுகதையின் நோக்கம். இது நாம் இங்கு என்னவாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.



-ஜெயமோகன்.
எழுத்தாளர்.

"டாக்டர்.பழனி"...
மேலே டாக்டர்.கே குறித்து,ஜெ சொன்ன வார்த்தைகள் நம்ம டாக்டருக்கும் பொருந்தும்.
நண்பர்களுக்கு எதையெதையோ அறிமுகப் படுத்துபவர்களுக்கு இடையே இந்த அருமையான நூலை உண்மைக்கதையை அனைவரும் அறியவேண்டும். ஏன் இந்த உலகமே அறியவேண்டும் என்பதில் பேராவல் கொண்டவர்.அதன் தொடக்கம் தம்மிடமிருந்தே துவங்கவேண்டும் எனபதன் தொடக்கமாக தமது சக டாக்டர்களுக்கும் நண்பர்களுக்கும் முதலில் இதை அறிமுகப்படுத்தும் விதமாக இந்த உண்மைக் கதையின் எழுத்தாளர் ஜெவிடம் அனுமதியும்,முன்னுரையும் பெற்று அடக்கவிலையில் அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார்...

டாக்டர் பழனி எமக்கு முகநூலின் மூலமே அறிமுகமானார்.தர்மபுரி மாவட்டம் அரூரில் மிருகவைத்தியம் பார்ப்பதோடு,பெட்ரோல் பங்க்கும் நடத்திவருகிறார்.பன்முகத்தன்மையை ஒருங்கே பெற்ற டாக்டருக்கு சூழலியல் மீதான ஆர்வம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. மிகுந்த தேடுதல் கொண்டவரிடம் எம்மை அறிமுகம் செய்தவர் அவரது நண்பர் ஆசிரியர் தங்கமணி.முதலில் எமது முகநூல் பதிவுகளை படிக்கும்படி பரிந்துரை செய்திருக்கிறார். பதிவுகளை பார்த்த டாக்டர் உடனடியாக எமது போன்நெம்பரைப் பெற்று பேச ஆரம்பித்தவர் இன்றுவரை பேசிக்கொண்டே இருக்கிறார்...

இது நடந்தது ஓராண்டிற்கு முன்னர். அப்போதே நாங்கள் சந்திக்கவேண்டும் என விரும்பினோம்.அருமையான இயற்கை சூழலில் சந்தித்தோம் அந்த சந்திப்பு பலரை எமக்கு அறிமுகம் செய்ததில்லாமல் பலவற்றை எமக்கு கற்றுத் தந்தது...

டாக்டர் உண்மையில் ஒரு புத்தகப் பிரியர்.
சூழல் செயல்பாட்டாளர்.
விளையாட்டு விரும்பி.
மருத்துவர்.
டாக்டர் ஃபியூல்ஸின் உரிமையாளர்.
அதற்கு மேலாக மிக அன்பான நண்பர் மனதில் பட்டதை குறிப்பாக பாராட்டத் தயங்காதவர்....

படித்தோமா..
தொழில் செய்தோமா...
நாலுகாசு பார்த்தோமா...
தாம்மட்டும் வாழ்ந்தோமா என்றிருக்கும் கூட்டத்திற்கு நடுவில் இந்த மாதிரி அனைத்து உயிர்களிடத்திலும் அன்பையும் பூமியின் மீது அக்கறையும் கொண்ட மனிதர்கள் மிக மிக குறைவே.தம்மைப்போலவே தமது மகன் மகேந்திர வர்மாவை உருவாக்கிக் கொண்டிருப்பது இன்னும் சிறப்பு...

டாக்டர் அனுப்பிய இரண்டு புத்தகமும் அதில்  அளவில்லாத பிரியமும் பார்சலாக வந்தது. டாக்டர் இரண்டு நாட்களாக பார்சல் கிடைத்ததா ? கிடைத்ததா ? என தொடர்த்து கேட்டுக்கொண்டே இருந்தார்.சனியன்றே வந்த பார்சல் இன்றுதான் கையில் கிடைத்தது.புத்தகம் ஏற்கனவே எம்மிடம் இருந்தாலும் இது இரண்டும் எமக்கு பொக்கிசம்....

புத்தகத்தை மிக அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.தமிழிலும் அதை அப்படியே ஆங்கிலத்திலும் பதித்திருப்பது மிகச் சிறப்பு.கதையின் சுவராசியத்திற்காக எழுத்தில் சில நெருடல்கள் இருந்தாலும்.பிரமிப்பான நமது சமகாலத்தில் ஆனைமலைக் காடுகளில் பணியாற்றி வாழ்ந்து மறைந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி யின் வரலாற்றுக்கதை என்பதே மிக மிக சிறப்பு.அனைவருக்கும் இது சென்று சேரவண்டும்.அட்டைப்படத்தில் அழகான நம்ம ஊர் யானையை போடாமல் ஆப்பிரிக்க யானை இடம்பெற்றது டாக்டரின் தவறில்லை அது இயல்வாகையின் தவறு என்பது எமக்கு முன்பே தெரியும்.அவர்களுக்கும் வெளிநாட்டு மோகமா ?... :D

யானையின்மீதும் காட்டின் மீதும் ஆர்வம் கொண்டவர்களும்.ஆர்வமில்லாதவர்களும்(பிறகு ஆர்வமாகிவிடும்)படிக்க பரிசளிக்க ஏற்ற நூல். நம்ம டாக்டரின் இதுபோன்ற சிறப்பான பணிகள் இந்த பூமிக்கு இன்னும் தேவை.தொடர வேண்டும்.
அனைவரும் டாக்டரை வாழ்த்துவோம்...

அதிக தகவல்களுக்கு,
https://m.facebook.com/story.php?story_fbid=1397946163654748&id=10000323647

Wednesday, 6 September 2017

"பால்பாண்டி எனும் பறவை மனிதர்"

நம்மைச்சுற்றி பல எளிமையான உயர்ந்த மனிதர்கள்,நம்ம ஊரிலும் இந்த பூமியிலும் வாழ்ந்து சிறப்பான பணிகளை செய்துவருகிறார்கள்.அவர்களை நாம் மிக எளிதாக கடந்துவிடுகிறோம்.நமது கோளாறான அளவுகோளின்படி உயர்ந்த மனிதர்கள் என்கிற அளவீடு வேறானதாக இருப்பதுதான் பெரிய குறையே....

நம்மையும் நமது நெருங்கிய உறவுகளையும் நிதானமாக கவனித்துப் புரிந்துகொள்ளாமல் ஓடும்போது,இவர்களை கவனிக்காமல் செல்வதில் ஆச்சரியமில்லை.அவ்வாறான மனிதர்களில் இன்றைக்கு மிக முக்கியமான ஒருவர்பற்றி பேசுவோம்....

அவர்,
"பால்பாண்டி எனும் பறவை மனிதர்"



பறவை ஆர்வலர்கள் அத்தனைபேருக்கும் பால்பாண்டியைத் தெரியும்...
பால்பாண்டியின் பாட்டையும் தெரியும்.எதைக்கேட்டாலும் நிறுத்தாமல் பேசும் பால்பாண்டி...
கேட்கும் சிலவற்றை நீங்கள் நம்பலாம் அல்லது நம்பாமலும் போகலாம்...
பெரும்பாலான பிரபலங்களை தமக்குத் தெரியும் என்பவர்,அவர்களுக்கும் தம்மைத்தெரியும் எனும்போது உங்களின் மனதுக்குள். சந்தேகம் எட்டிப்பார்க்கும்...

இங்கிலாந்து இளவரசர் சார்லஸோடு முகமெல்லாம் சிரிப்பா பேசுகிற படத்தையும் பார்க்க முடிகிறது.கேரள முதல்வர் அச்சுதானந்தனோடு சமமாக ஒரேமேடையில் உட்கார்ந்திருக்கும் படத்தையும் காட்டுகிறார்.சோனியா காந்தியிடம் விருது வாங்குவதையும் காட்டுகிறார்...
இவரைப் பற்றி பல பத்திரிகை தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளையும் பார்க்கமுடிகிறது....

பறவைகளின் மீது உங்களுக்கு ஏன் இந்த ஆர்வம்?...
பறவைகளில் ஆண்பெண் வேறுபாடுகளை எப்படிக் கண்டறிவது?...
எந்தெந்தப் பறவைகள் இங்கேயே இருப்பவை?...
எந்தெந்தப் பறவைகள் வெளியிலிருந்து இங்கு வருபவை?....
ஒவ வொன்றும் எந்தப்பகுதி எந்த நாட்டிலிருந்து இங்கு வருகின்றன?...
வந்த பறவைகள் எல்லாமும் இங்கே கூடுகட்டுகிறதா ?
எந்த மாதத்தில் கூடுகட்டும்? கூட்டினை மென்மைப்படுத்த எதைக்கொண்டு கூடுகளை அமைக்கிறது ?
எல்லாக்கூடுகளும் ஒரே மாதிரியானவையா?
பறவைக்குப் பறவை கூடுகளின் வேறுபடுகள் என்ன?
மரத்திலும் தரையிலும் கூடுகளை அமைக்கும் பறவைகள் என்னென்ன ? இணைசேர்ந்த பிறகு முட்டையிட எத்தனை நாட்களாகும் ?...
ஒவ்வொரு பறவைகளின் முட்டைகளின் நிறங்கள் என்னென்ன?

அடைகாப்பது ஆணா பெண்ணா ?...
முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவர எத்தனை நாட்களாகும்?...
வெளிவந்த குஞ்சு கண்விழிக்க எத்தனை நாட்களாகும்?
பறக்க எத்தனை நாட்களாகும்?... ரோமங்கள் என்ன நிறம்? குஞ்சுக்கு என்னமாதிரி உணவுகளை பெற்றோர்கள் ஊட்டும் ?...
-இப்படி எந்தக் கேள்விகளைக் கேட்டாலும் பதிலைக் கொட்டுகிற எளிய மனிதர் பால்பாண்டிக்குப்பிறகு இந்தப் பறவைகளை பாதுகாப்பதும்,களத்திலிருந்து தகவல்களை கடத்துவதும் யார் என்பது கேள்விக்குறியே.இப்போதிருக்கும் அவரது வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கும்போது  அடுத்தவாரிசாக யாரையாவது உருவாக்குங்கள் என நம்மால் முழுமனதோடு சொல்ல முடியவில்லை...

இப்படியான மனிதர்களை இருக்கும்போதே நாம் கொண்டாடுவோம்.அப்போதுதான் அரசும் கொஞ்சமாவது இவர்களை கவனிக்கும்.
இல்லையென்றால் வழக்கம்போல....

இவரைப்பற்றி சில வரிகளில் மட்டுமே சொல்ல முயல்வது என்பது முழுமையானதாக இருக்காது.சொல்வதற்கு நிறைய இருக்கிறது....
சொல்வோம்...

Saturday, 12 August 2017

காடுகளின் நண்பன் நமக்கேன் நண்பனில்லை?




//மனிதர்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பயன்படுத்தும்  நிலப்பரப்பு வரைமுறையில்லாமல் அதிகரித்துக்கொண்டே சென்று சமவெளிக்காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக குறுக்கி மலைகளுக்கருகில் கொண்டு சென்று நிறுத்திவிட்டோம். சமவெளிக்காடுகளில் வாழ்ந்த யானைகளை மலைகளுக்கும் அதனையொட்டிய காடுகளுக்கும் விரட்டியடித்த வேலையைத்தான் பல நூற்றாண்டில் நிறைவு செய்து முடித்திருக்கிறோம்.

சமீபகாலத்தில் அங்கேயும் விட்டோமா?///

உலக யானைகள் தின சிறப்புக் கட்டுரை..

மேலும் படிக்க: https://goo.gl/rrsoxf

Wednesday, 9 August 2017

புத்தகங்கள்

தேடிச்சென்றவையும்  எதிரில் வந்தவையும்....



சில புத்தகங்களைத் தேடித்தேடிச் சென்றேன்.சில புத்தகங்கள் எதேச்சையாக கண்ணில் பட்டன.என்ன கொடுமையென்றால் சில சூழலியல் புத்தகங்களும் பயணக் கட்டுரைகளும் பதிப்பாகி பத்துப் பதுனைந்து வருடங்களுக்குப் பிறகும் விற்காமல் இருந்தவற்றை நான் வாங்கியியிருக்கிறேன்.புள்ளிவிவரப்படி புத்தகங்கள் விற்பனை அதிகரித்திருப்பதாக திருப்பூர் புத்தக கண்காட்சியில் அருமைமிகு  கோவை சதாசிவம் எம்மிடம் சொன்னார்.ஆனால் சூழலியல் குறித்த புத்தகங்கள் அந்த அளவிற்கு விற்கிறதா எனத் தெரியவில்லை.....

இதில் நக்கீரன் நக்கீரன் அவர்களின் காடோடி மட்டும் ஐந்தாவது முறையாக நான் வாங்கியிருக்கிறேன்.அதை நண்பர்களுக்கு பரிசளிப்பதற்காக.அதை ஏற்கனவே மூன்றுமுறை படித்துவிட்டேன்.எமக்குள் பல மாற்றங்களை உண்டாக்கிய புத்தகம்.ஏன் உங்களுக்கும் கூட அது நிகழலாம்...

ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு மூன்றுமுறை சென்றாகிவிட்டது.பல்லாயிரம் நல்ல புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றது.நூற்றுக்கணக்கான ஸ்டால்களில் எதில் சென்று பத்தகங்களை வாங்குவது என நீங்கள் எம்மிடம் கேட்டால்.அவசியமாக பூவுலகின் நண்பர்கள்(நண்பர் Yoga Raj இருக்கிறார்),காலச்சுவடு,பாரதி புத்தகாலயம் ஸ்டால்களுக்கு சென்று வாருங்கள்....

ஒரே வருத்தம் நண்பர் Satheesh Muthu Gopal அவர்களின் "யாருக்கானது பூமி" -(கணையாழி பதிப்பகம்)இங்கும் கிடைக்கவில்லை. இனி ஆன்லைனில்தான் முயற்சிக்கவேண்டும் அல்லது அவராவது இறக்கப்பட்டு எமக்கு அனுப்பினாலும் பரவாயில்லை....

படியுங்கள் நிறையப் படியுங்கள் புத்தகங்களே என்னை நூறுசதவிகிதம் மாற்றியிருக்கிறது.எமது படிப்பு பழக்கம் தினத்தந்தியின் கன்னித்தீவில் துவங்கி அன்றைய அம்புலிமாமா,கோகுலம்,முத்து காமிக்ஸ்,ராணிமுத்து,குங்குமச்சிமிழில் ஆரம்பித்து பிரபஞ்சன்,சாண்டில்யன்,பாலகுமாரன் ஆகியோரை கடந்து இன்று வேறு வேறு பரிணாமங்களில் கொண்டு சென்றிருக்கிறது....

அன்றைய ஓவியர்களான கோபுலு,மாருதி,ராமு,ம.செ,ஜெ... போன்றவர்களையும் மறக்கமுடியவில்லை....

மீண்டும் சொல்கிறேன் பாடத்திட்டங்களில் உள்ள பாடத்தைப் படித்து தேர்ச்சியடைந்தால் மட்டும் அறிவென்பது கிடைத்துவிடாது.எம்மைப்பொருத்தவரை மிக்சர் சுற்றிக்கொடுத்த பேப்பர்கள் கூட நமக்குள் மாற்றத்தை உண்டாக்கிவிடும்.மிக்சர்பொட்டலங்கள்கூட நமக்கு ஆசானால் ஆச்சரியமில்லை....

ஆகவே அறிவென்பது நமக்கு எங்கும் கிடைக்கலாம்.அது இந்த புத்தகத் திருவிழாவில்கூட கிட்டும்.முயற்சியுங்கள்...

என்றென்றும் தேடலுடன் உங்கள்,
Ramamurthi Ram

Thursday, 3 August 2017

ஆலமரம்

ஆலமரம்
Banyan tree (Ficus bengalensis)



"ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி..."
-இந்த வார்த்தைகளை கேட்காத தமிழ் தெரிந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்...
ஆலமரம் போல் எந்த சூழ்நிலையிலும் துளிர்விட்டுத்தழைக்கும் மரத்தைப் பார்க்க முடியாது.எங்கு விழுந்தாலும் முளைப்பதற்கு மயற்சிக்கும். குறிப்பாக பறவைகளின் எச்சங்கள் மூலம் முளைக்கும் செடிகளுக்கு அபாரமாக வளரும் தன்மையுண்டு.பராமரிப்பற்ற சுவர்கள்,பாறை இடுக்குகள்,மரங்களின் இடுக்குகள்.என முளைப்பதற்கு தோதான எந்த இடங்களையும் கடுகினைவிடச் சிறிய அளவுடைய ஆலம் விதைகள் விட்டு வைப்பதில்லை....



இந்த நாட்டோடும்,மண்னோடும்,மனிதர்களோடும் நீண்ட தொடர்புள்ளது ஆலமரம்.பாலுள்ள மரங்கள் மீது பற்றும்,மரியாதையும் வைத்திருந்த இந்த மண்ணின் மக்கள்,ஆலமரத்தோடு வைத்திருந்த உறவோ சாதாரணமில்லை....
ஆதிகாலம்  தொட்டே ஆலமரத்தடி திண்ணைகள் இருந்திருக்கின்றன.வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்லவும் கிராமக் கூட்டங்கள் நடக்குமிடமாகவும்,வியாபாரம் நடக்கும் இடமாகவும் இருந்திருக்கிறது.வணக்கத்திற்குரிய மரமாகவும் இருந்திருக்கிறது. பல சங்கப் பாடல்களிலும் இடம்பெற்று வெட்டினால் பாவம்-தீங்கு உண்டாகும் என்ற அளவில் நம்பிக்கை இருந்திருக்கிறது.இன்றைக்குப்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை.மக்கள் வாழும் பகுதிகளிலும்,விவசாய நிலங்களிலும் அதிக அளவில் இருந்திருக்கின்றன்.அக்காலத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளையும், உணவுத்தேவைக்கான சிறிய விவசாய நிலப்பகுதிகளைத் தவிர்த்து விட்டு பார்த்தால், அத்தனை நிலங்களுமே வனக்காடுகளாகத்தான் இருந்திருக்கிறது. அதில் ஆலமரங்கள் பெருத்த எண்ணிக்கையிலேயே இருந்திருக்கிறது....



ஒரு ஆலமரத்தில் சிறியதும் பெரியதுமான பலவகைப் பறவைகள்,பூச்சிகள்,பல்லிகள்,அணில்கள்,எறும்புகள் போன்ற பல்லுயிர்களும் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக சார்ந்திருப்பதைப் பார்க்கலாம்.பல பறவைகளுக்கு விருப்பமான உணவு ஆலம்பழம்...



அலெக்சாண்டர் தமது படைகளோடு இத்தியாவினுள் நுழைந்த போது வியந்து ஆச்சரியப்பட்டு பார்த்தது ஆலமரத்தைத்தான்.நான்காயிரம் முதல் ஏழாயிரம் படைவீரர்கள் ஆலமரத்தின் கீழே தங்கியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பரந்த மரங்கள் இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.இன்றைக்கும் நானூற்றி ஐம்பது வருட பழமையான அடையாறு ஆலமரம் பல கதைகளைச் சொல்லும் சாட்சியாக இருக்கிறது.அது மட்டுமில்லாமல்,
ஆந்திர கதிரி திம்மம்மா ஆல மரம்,
உலகப் புகழ்பெற்ற கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள மாபெரும் ஆலமரம், பெங்களுருக்கு அருகிலுள்ள மரம்,
குஜராத்தில் இருக்கும் கபீர் வட், அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பஞ்சாப் பதேகார் மாவட்ட ஆல மரம்– நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன.பாண்டிச்சேரியிலுள்ள ஆரோவில் ஆலமரம் கூட ஆச்சரியமான அளவுதான். ஆயிரக் கணக்கான விழுதுகளுடன் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரே சமயத்தில் மூன்றாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை இந்தமரங்களின் கீழ்உள்ள நிழலில் தங்கலாம்....



ஆலம் விழுதுகள் பல மருத்துவ குணம் கொண்டது அதன் துவர்ப்புச் சுவையே பல்,ஈறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்பவையாக இருக்கிறது.
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி,
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"-இது காலகாலமாக தமிழ்பேசும் மக்களிடையே புழங்கிக் கொண்டிருக்கும் வெகு சாதாரண பழமொழி.ஆலமரம் முழுவதுமே மிகுந்த மருத்துவ பயனுடையது என்பதை மறுப்பதற்கில்லை.அதிலும் குறிப்பாக ஆலம் விழுதின் தண்டில் பல் துலக்கினால்,பல் மற்றும் ஈறுகள் தொடர்பான அத்தனை பிரச்சனைகளும. எளிதில் தீரும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை என்பதைவிட,அதுதான் உண்மை என அடித்துச் சொல்லலாம்.நான் நீண்ட நாட்கள் ஆலம் விழுதிலும்,கருவேலங்குச்சியிலும் பல் துலக்கியவன்....



ஒரு மொழியில் ஒரு பெருளிற்கு பல பெயர்கள் இருத்தல் என்பது,அது அந்த மொழிபேசும் மக்களோடு நீண்ட நெடுங்கால பிணைப்பில் உள்ளது என்பதை எளிதில் அறியலாம் அந்த வகையில் இந்த மரத்திற்கு,
இயக்கு,
ரோதம்,
காமரம்,
சோளி,
தோல்மரம்,
பாமரம்,
பூதம்,
வடம்,
பானோக்கி....
இன்னும் எத்தனை பெயர்களோ?!!!...
இப்படி பல பெயர்களில் அழைத்தாலும் ஆலமரம் எனப் பெயர் வந்ததற்கு காரணம் மிக அகலமான பரப்பளவில் வளருவதால் இதற்கு "அகல்மரம்"-என்ற பெயரே நீண்ட காலம் இருந்தது.பின்னர் காலப்போக்கில் இப்பெயரே மருவி ஆலமரம் என்கிற பெயர் நிலைத்துவிட்டது....



ஆலமரங்கள் நீண்டகாலம் நிலைத்துநிற்க விழுதுகள் முக்கிய காரணம்.கிளைகளிலிருந்து கீழே இறங்கும் விழுதுகள் விலங்குகளினாலோ அல்லது மனிதர்களாலோ இடையூறு இல்லாமல் இருந்தால் மண்ணில் ஊன்றி உறுதியாகி கிளைகளைத் தாங்கி,தாய்மரத்தின் சுமையைக்குறைப்பதோடு மரம் பரந்து விரிவடையவும் உதவுகிறது.நான் பார்த்த மரங்களில் குறிப்பாக கர்நாடகாவில் சில ஆலமரங்கள் விழுதுகள் இல்லாமலேயே இருந்தன (அதற்கான காரணத்தை அனுபவசாலிகள் யாராவது விவரித்தால் உதவியாக இருக்கும்)அதே சமயத்தில் நம்மூரைவிட மிகப் பருத்த மரங்களையும் பார்க்க முடிந்தது.ஆலமரகுடும்பத்தின் வேறு இனங்களாகவும் இருக்கலாம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் அங்கும் அந்த அழகான மரங்கள் சிதைந்து நின்ற காட்சிகள் மனதை இன்னும் வருத்திக்கொண்டே இருக்கிறது....



கரூர் பக்கத்தில் உள்ள நெரூரில் கோட்டைமேடு என்ற இடத்தில் ஒரு பெரிய ஆலமரம் அதில் எக்கச்சக்க பாலித்தீன் பைகளும் சில வைக்கோளில் செய்த குடுவைகளையும் கட்டப்பட்டிருந்தன்.அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது அதனுள் மாடுகள் கன்றை ஈன்றபின் வெளித்தள்ளும் நஞ்சுக்கொடியை கொண்டுவந்து ஆலமரம் போன்ற பால்மரங்களில் கட்டிவிடுவார்களாம்.அப்படிக் கட்டினால் அதிகளவில் பால்சுரக்கும் என்கிற நம்பிக்கையாம்.நம்பிக்கை இருக்கட்டும் அதற்காக பாலிதீன் பைகளிலா கட்டுவதா ? அது காய்ந்துவிடாமல் நாற்றமெடுத்து,ஈக்கள் மொய்த்து சுகாதாரகேடும்,சூழல் கேடுமல்லவா நடக்கிறது. வைக்கோலை பயன்படுத்தினால் பிரச்சனை வராதே.....



ஆலமர அனுபவங்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வளவு தகவல்கள் இருக்கிறது. இங்கு இப்போதைக்கு இது போதும்.அதிக வெப்பம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் ஆலமரம் போன்ற அதிக நிழல்தந்துஅதிக ஆக்ஸிஜன் தரும் மரங்களே இன்றைக்கு தேவை என்பதை உணர்ந்து பாதுகாப்போம்.பயன்பெறுவோம்...
சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
படங்கள்,
Divya Barathi Ramamurthi
விரிவான தகவல்களுக்கு,
https://m.facebook.com/story.php?story_fbid=1363912550391443&id=100003181323647

Wednesday, 26 July 2017

டாக்டர் சாலிம் அலி - நினைவுநாள்

டாக்டர் சாலிம் அலி - நினைவுநாள்
(12நவம்பர்1896-27ஜூலை1987 )



"மனிதன் என்பவன் உன்னதம் பெற்ற வாலில்லாக் குரங்கு என்று நம்புகிறேன்."
  -சாலீம் அலி,ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி நூலில்

தமது பெயரை சாலிம் அலி என அழைப்பதையே விரும்பினார்.ஆனால் பலர் இன்னும் சலீம் அலி என்றே சொல்லியும்,எழுதியும். வருகிறார்கள்.....

இந்தியாவின் பறவை மனிதர்.பறவைகளைப்பற்றிய அரிய பதிவுகளை இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கியவரும்,இன்றைய நமது சமகால பறவை ஆர்வலர்கள் பலரின் முதல் முன்னோடி என்பதையும் எத்தனைபேர் தெரிந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை....

அவருடைய பறவைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் தேடல்கள் மற்றும் ஆவணப் படுத்தும் காலகட்டம் என்பது மிக சிரமமான,சவாலானகாலம்.
காரணம் அன்றைய கால கட்டத்தில் பறவைகளை இனங்கண்டு ஆவணப்படுத்த இன்றைய காலம்போல் சிறப்பான எளிமையான கருவிகள்- குறிப்பாக புகைப்படக் கருவிகள்,தொலைநோக்கி கருவிகள் எளிதில் கிடைக்காத காலம் என்பதைவிட,இருந்தவற்றில்கூட இன்றைய எளிமையான நவீன மாற்றங்கள் அவற்றில் இல்லை....

ஆவணப்படுத்த எளிய இரண்டேவழிகள்தான் அப்போது உண்டு(!)...
ஒன்று ஆவணப்படுத்தவேண்டிய  பறவையை கொன்று பதப்படுத்துவது,பிரிதொன்று அந்தப் பறவைகளை படங்களாக வரைவது....

இன்றும் இப்படி சவாலான காலமாக இருந்தால் எத்தனை பறவை ஆர்வலர்கள் இன்றைக்கு நம்மிடையே உருவாகி இருப்பார்கள் என சற்று யோசிக்கவேண்டிய நிலைதான்.குறிப்பாக பறவைகளை படம்பிடிப்பவர்களை கண்டுபிடிக்கவே முடியாது....

அதுமட்டுமில்லாமல் அன்று ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வசதியான பாதைகளும் இல்லை,வாகனங்களும் இந்தளவு இல்லை,குறிப்பாக தொலை பேசிகளோ,மொபைல் போன்களோ இல்லை என்பது சவாலான காலம்தானே!....

1941ம் ஆண்டு Book of Indian Birds என்ற சாலிம் அலியின் புகழ் பெற்ற முதல் நூல் வெளியானது. இந்நூல் இதுவரை 20 பதிப்புகளுக்குமேல் கடந்துவிட்டது.
இந்த நூல் இந்தியாவில் எழுதப்பட்ட முதல் பறவைகள் வழிகாட்டிப் புத்தகமாகும். சாலிம் அலி தனது நண்பரான தில்லானின் உதவியோடு இன்றைக்கும் உலகம்முழுவதும் பிரபலமாக இருக்கும், இந்தியா, பாகிஸ்தானின் பறவைகள் கையேடு என்ற நூலை 10 தனித் தனி தொகுதியாக வெளியிட்டார்...

தனது வாழ்க்கை வரலாற்றை ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்ற பெயரில் அவர் எழுதியுமிருக்கிறார்.கிட்டத்தட்ட சுமார் இருபதாண்டுகாலம் காட்டிற்குள் பறவை தேடுதலுக்காகவே நேரத்தை செலவிட்டிருக்கிறார்.இப்போதும்கூட பறவை ஆர்வலர்களை பயித்தியங்கள் போல பார்க்கும் மனநிலையில்தான் பலர் இருக்கும் நிலையில் அந்தக் காலகட்டத்தில் அவரை எப்படியெல்லாம் பார்த்து பேசியிருக்கும்!!!.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தமது பத்தாவது வயதில் ஒரு பறவையை  வேட்டையாடி, அதன்பின் அதன்மீது ஆவலாகி,தேடுதலை துவங்கி பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் ஆரம்பித்து, பல வெளிநாடுகள்வரை சென்று தேடித்தேடி கற்ற சாலிம் அலி. பல பறவைகள்பற்றிய ஆராய்ச்சிக்கு பல பொக்கிசங்களை இந்த பூமிக்கு கொடுத்திருக்கிறார்....

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில்(BNHS)கற்க ஆரம்பித்த சாலிம் அலி பின்னர் அதன் தலைவராகவே ஆனவர்...

தீவிரமாக வேட்டையாடும் காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே,பல பறவைகள் மற்றும் உயிரியல் காப்பகங்கள், சரணாலயங்கள் உருவாக காரணமாக இருந்த இவரிற்கு,எண்ணற்ற விருதுகளும் கௌரவங்களும் வந்து சேர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை.அதிலும் குறிப்பாக,இந்திய அரசின் பத்மபூஷன் விருதும் 1958, பத்ம விபூஷன் விருதும் 1976 இவரது பறவையியல் சேவைக்காக தேடிவந்தது.
நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் ஜே. பால்கெய்பு பன்னாட்டு பரிசை 1976ம் ஆண்டு காட்டுயிர் பாதுகாப்புக்காக பெற்றார். மேலும் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினர் பதவியை சாலிம் அலிக்கு வழங்கி கௌரவித்தது...



தமது வாழ்வில் சுமார் அறுபத்தியைந்து ஆண்டுகாலம் பறவைகளையும்,உயிரினங்களையும் ஆராய்ந்த, அந்த மகத்தான பறவைமனிதரான சாலிம் அலியின் நினைவுநாள்தான் இன்று.நன்றியுடன் நினைவுகூறுவோம்....

நன்றியுடன்,
Ramamurthi Ram

Saturday, 8 July 2017

கொடிவேரி அணை-ஒரு ஆச்சரியம்

கொடிவேரி அணை-ஒரு ஆச்சரியம்.



நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய பவானிசாகர் அணைக்கட்டில் இருபதடி உயரத்திற்கு சேரும் சகதியும் நிரம்பியிருக்கிறது. மிக அதிகமாக நீர்வரத்து இருக்கும் போது அந்த இருபதடி நீரை தேக்கிவைக் முடிவதில்லை,ஆனால் இன்றைக்கு சுமாராக ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர்,இப்போது இருப்பதைப்போல் எந்தவிதமான நவீன சக்திவாய்ந்த எந்திரங்களும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில்,அணை தன்னைத்தானே தூர்வாரும் நுட்பத்தை நமது முன்னோர்கள் கொடிவேரி அணைக்கடில் செய்திருக்கிறார்கள்.என்பது மிக வியப்பான ஒன்று அந்த அறிவும் தொழில்நுட்பமும் வளராமல் இன்றைக்கு ஏன் தேய்ந்தது என்பதை தீவிரமாக யோசிக்க வேண்டும்!!!...



நீர் மேலாண்மையில் நம்ம ஆட்களை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை எனச் சொல்லலாம். மனித ஆற்றலைக்கொண்டே,மணல்போக்கி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அணைக்கட்டின் மையப் பகுதியில் தண்ணீர் குவிகின்ற மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் இருபதடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சுரங்கத்திற்குள் கற்களால் ஆன நுட்பமான சல்லடை போன்ற அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்டு, மணலும்,சகதியும் அணையினுள் தேங்கி விடாதவாறு உருவாக்கி,இந்த மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது...
இந்த மணல்போக்கிகளின் வேலை என்னவென்றால் மணலையும் சேற்றையும் உள்ளே இழுத்து அணைக்கு வெளிப்பக்கமாக சுரங்கத்தின் துவாரம் வழியாக வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனிச்சிறப்பான தொழில்நுட்பம். இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்திருக்கிறது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் சிறப்பான நுட்பம் மிகுந்த கட்டுமான அமைப்பு இது....
சுற்றுச்சூழலை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில், முழுக்க முழுக்க மனித ஆற்றலைக்கொண்டே,சற்று தொலைவிலுள்ள கடம்பூர் மலைப் பகுதியில் இருந்து கற்களைக்கொண்டுவந்து  மிகத்தெளிவாக உறுதியாக கட்டி முடித்திருக்கும் திறமையை எப்படித்தான் வியப்பது !!!...



நேர்த்தியான நீர்மேலாண்மையை கையாண்டு ஆற்றின் போக்கிலேயே அணக்கு வடக்குப்பக்கம் அரக்கன்கோட்டை கால்வாயும்,தென்புறம் தடப்பள்ளி கால்வயையும் அமைத்து பாசனத்தில் எஞ்சிய கழிவுநீர் மீண்டும் வடிந்து ஆற்றிற்கே வருகின்ற வகையில் திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள்...
இந்த அரிய தொழில்நுட்பங்களை இன்றைய மக்கள் அறியாமல் போனது தான் வேதனை. இன்று கொடிவேரி அணைக்கட்டு சுற்றுலாத் தளமாக மட்டுமே அறியப்படுகிறது. குடிப்போர்களின் சொர்க்க பூமியாக மாறியிருக்கிறது.கூட்டம் கூட்டமாக வந்து மது அருந்தியிருகிறார்கள். காலி பாட்டில்களை அணைக்குள் எறிந்திருக்கிறார்கள்.கொஞ்சநாட்களுக்கு முன்பெல்லாம் தீவிரமாக நடந்தது இதுவெல்லாம்.இப்போதைக்கு கொஞ்சம் பரவாயில்லை.அப்போது குடித்துவிட்டு குளிப்பவர்கள் அணைக்குள் இருக்கும் மணல்போக்கிகளுக்குள் சிக்கி இறந்துவிடுகிறார்கள் என்று அவற்றில் பாறைகளையும் மண்ணையும் போட்டு மூடியே விட்டார்கள்...
அருமையான தொழில்நுட்பத்தை மண்ணைப்போட்டு மூடி இன்றைக்கு மணலும் சகதியும் சேர்ந்து மேடாகி அணைக்குள் பெரும்பாலான இடத்தை செடிகள் ஆக்கிரமித்திருக்கிறது.குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக நவீன சமூகத்திடம் சிக்கித் தவிக்கின்றன நமது முன்னோர்களின் அணைகள்!
இது எங்கே இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு,பல சினிமாப் படங்களில் பார்த்திருக்கலாம்.ஈரோடு-கோபிச்செட்டிபாளையத்திலிருத்து சத்தியமங்கலம் செல்லும் பாதையில் இந்தக் கொடிவேரி அணை அமைந்திருக்கிறது. திருப்பூரிலிருத்து வருபவர்கள் பெருமாநல்லூர்,நம்பியூர்,குருமந்தூர் வழியாக கொடிவேரியை அடையலாம்...



விடுமுறை நாட்களில் ஒருநாளை இங்கு சுகமான குளியலுடன் கழிக்கலாம்.இந்தமாதிரி சுற்றுலா இடங்களுக்கேயுண்டான ஆயில் மசாஜ் மற்றும் அங்குள்ள மக்களால் ஆற்றின் ஓரமாக நடத்தப்படும் தற்காலிக மீன்வறுவல், சாப்பாட்டுக்கடைகள் போன்றவையும் உண்டு.ஆசைதீரக்குளித்துவிட்டு பூங்காவில் குழந்தைகளுடன் நாளைக்கழித்துவிட்டு வரலாம்.தயவு செய்து பிளாஸ்டிக் பொருட்களை,கவர்களை எடுத்துச்செல்ல வேண்டாம்....

சூழலியல் ஆவலுடன்,
Ramamurthi Ram

இன்னும் இதுபற்றிய அதிக தகவல்கள் மற்றும் கருத்துக்களை காண:
https://www.facebook.com/ramamurthi.ram.52

Tuesday, 4 July 2017

விலங்குகளுக்கு அபாயம்

"விலங்குகளுக்கு அபாயம்"



மின்கம்பங்களில்
DANGER
அபாயம்
ప్రమాదం
खतरा
അപായം
ભય
ಅಪಾಯ....
இப்படி சிவப்பு எச்சரிக்கை பலகைகளை பார்த்திருப்போம்.

இங்குள்ள மனிதர்களில் பாதிப்பேரிற்குக் கூட இதைப் படித்து புரிந்து கொள்ள முடியாது.....

இதில் விலங்குகளின் நிலைதான் ஆகக் கொடுமை. அதற்கு எந்த எல்லையுமே இல்லாததால்,
அதற்கு ரோடு எது..,
விவசாயக் காடு எது..,
மின்கம்பம் எது..,
வேகமாக போகும் ரயிலோ..,
வாகனங்களையோ....
பிரித்து அறிகின்ற அறிவா இருக்கும்!...

மனிதர்களின் அபாய அறிவிப்புகளை அறிந்துகொள்ளுமளவு புத்திசாலியானவையா விலங்குகள்?...
அவைதான் நம்மைப்போல் படிக்கவில்லையே?!...

அவைகளை காக்கவேண்டுமென வாய்கிழிய கத்தும் அரசுகளின் திட்டம் ஆனால் அதை செயல்படுத்தும் அரசு இயந்திரங்களை இயக்கும் மனிதர்கள் அந்த அளவிற்கு சிந்திப்பதில்லை சிந்திக்குமளவிற்கு அவர்களும் இல்லை.அவர்களோ
அத்தியை வெட்டு..,
ஆளைவெட்டு...
என அறிவோடு பேசுகிறார்கள்...



இப்படியிருக்க நேற்று உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறி உயிரை விட்டிருக்கிறது ஒரு சிறுத்தை.🐆🐆🐆 இந்தக்கொடுமை தெலுங்கானா வின் ஹைதராபாத்-நிஜாமாபாத் மாவட்டத்தில் மல்லாரம் வனப்பகுதிக்கு அருகில் நடந்திருக்கிறது...

இவ்வளவு பெரிய சிறுத்தை எப்படி இந்த மின்கம்பத்தில் ஏறும் என கிராம மக்கள் கேள்வியெழுப்பி இருக்கிறார்கள்.இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை அடித்த இரையை தூக்கிக்கொண்டு நன்றாக மரங்களில் ஏறும் சிறுத்தையால்.எதுவுமில்லாமல் மின்கம்பத்தின் மேலே ஏறுவது பெரிய விசயமில்லை.ஏற்கனவே கடந்த ஆண்டு குஜராத்தில் மயிலைத் துரத்திச்சென்ற சிறுத்தை மின்சார டிரானஸ்பார்மரில் ஏறி, எரிந்து உயிரை விட்டது உலகிற்கே தெரியும்.நமது பதிவிலும் இருக்கிறது...



இது போன்ற பல இடங்களில் பலமுறை பறவைகள்,கரடிகள்🐨🐒🐘🦍🦉🦅 உட்பட பல விலங்குகள் இறந்திருக்கின்றன.கடந்தவாரத்தில் மிகத்துயமான வகையில் கர்நாடக குடகு பகுதியில் வனத்தையொட்டிய காபித் தோட்டத்தில் உயர் அழுத்த மின்கம்பம் முறிந்து விழுந்ததில் ஆறு யானைகளைப் பலி கொடுத்தோம்....



இப்படி எஞ்சியிருக்கிற குறைந்த எண்ணிக்கையில் உள்ள விலங்குகளை காப்பதற்காவது ,குறைந்தபட்ச திட்டமாக, விலங்குகள் நடமாடும் பகுதிகளிலாவது பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.விலங்குகளை பாதுகாக்க ஒதுக்கப்படும் பலகோடி ரூபாய்கள் என்னவாகின்றனவோ?!...

கேட்டால் ஆளாளாலிற்கு வேறுவேறு துறைகளை மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள்.நடக்கிற துயர சம்பவத்திற்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என்கிற நிலையிலேயே விலகி நின்றுவிடுகிறார்கள்.இவர்கள் இப்படியிருக்க ஒன்இந்தியா வீடியோவைப் பாருங்கள் சிறுத்தைக்குப்(Leopard) பதிலாக இந்தியாவிலேயே இல்லாத சிவிங்கிப்புலியின்(cheetah)படத்தைப் போட்டு காமெடி பன்னுகிறான்.இதுபோன்ற ஊடகங்களுக்கு எப்போதுதான் பொறுப்பு வருமோ.இது எல்லாமே அறிவுப் பஞ்சத்தின் விளைவு...

ஒரு முடிவெடுத்து மனிதக்கவனக் குறைவால் நடக்கும் இதுபோன்ற இழப்புகளையாவது தவிர்க்கலாம்...

சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

மேலும் அதிக விபரங்கள் மற்றும் கருத்துகளுக்கு எமது முகநூல்:
https://www.facebook.com/ramamurthi.ram.52

Monday, 3 July 2017

கும்பகோணம்

"கும்பகோணம்"

எமது வாழ்க்கையில் பல மறக்கமுடியாத சம்பவங்களை துவக்கிவைத்த ஊர்.எனது ஊர் கோவைப்பகுதியாக இருந்தாலும் கும்பகோணத்திற்கும் எமக்கும் நெருங்கிய உறவை ஏற்படுத்தியது எமது நண்பன் "காட்டூர் ராஜா" வினுடனான,இருபத்தியெட்டு ஆண்டுகால நெருங்கிய நட்புதான்



இது சாதாரண உறவல்ல, இருவர்குடும்பத்திற்குமான நெருங்கிய உறவு அது, என்பதில் எமக்கு மகிழ்ச்சியும் பெருமையும். சுகதுக்கங்கள் அனைத்திலும் இரு குடும்பமுமே பங்கெடுத்துக் கொள்வோம்.அப்படி ஒரு குடும்ப திருமண நிகழ்வில் கலந்துகொண்டு,உடனடியாக ஊர்திரும்பலாம் என்று இருக்கும்போது,இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம் அப்படியே பிச்சாவரம் அலையாத்திக் காடுகளை பார்க்கலாம் என திடீர் முடிவுசெய்து குடந்தையிலிருந்து சிதம்பரம் போகும் வழியில் கங்கை கொண்ட சோழபுரம் சென்று பார்த்துவிட்டு, இரவு தங்கலுக்கு சிதம்பரம் சென்றுவிட்டோம்.நான் சிதம்பரம் சென்றதை பலரிற்கு முகநூல்வழியாக மார்க் காட்டிக்கொடுத்துவிட்டார்.உடனடியாக பசுமை ஹாஜியிடமிருந்து மெசேஞ்சரில் தகவல் அது அப்படியே உங்களுக்கு...



"சார் சிதம்பரம் அருகே சற்று முன் வந்து சென்றீர்களா  ?"

கொஞ்சம் தாமதமாக எமதுபதில்...
"வணக்கம் அய்யா நான் தற்போது சிதம்பரத்தில்தான் இருக்கிறேன்...  :) "

"சிதம்பரத்திலிருந்து 17 Km. தான் எனது ஊர்.
போன் காண்பித்தது நீங்கள் சிதம்பரத்தில் இருப்பதாக!
சிதம்பரத்தில் எங்கு தங்கியுள்ளீர்கள்  ,?
உங்களின் மொபைல் நம்பர் Pls...
....நான் சிதம்பரத்தில் இருந்து இப்பொழுதுதான் அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஊர் வந்தேன்"...
-இது பசுமை ஹாஜி.

இதற்குப்பிறகு எங்கள் உரையாடல் போன்மூலம் தொடர்ந்து அவருடைய அன்பையும் அழைப்பையும் தவிர்க்கவே முடியாமல்,அடுத்தநாள் மதியம் பிச்சாவரத்திலிருந்து பரங்கிப்பேட்டை சென்று....







எமது வாழ்வில் மறக்கமுடியாத நாளாக ஆக்கிவிட்டார். அவர் மட்டுமல்ல அந்த குடும்பமே எவ்வளவு அன்பான அக்கறையான குடும்பம் என சிறிது நேரத்தில் உணர்த்திவிட்டார்கள்.நேரில் அறிமுகம் இல்லாத ஒருவர் வீட்டிற்கா? அதுவும் மதிய உணவிற்கா ?.... வேண்டாம் என நாங்கள் முடிவு செய்து,
முடிந்தவரை அவர்வீட்டிற்குச் செல்வதை தவிர்த்துவிட்டு அவரைமட்டும் சந்தித்துவிட்டுச் சென்றுவிடலாம் என்றிருந்த எம்மையும் குறிப்பாக எமது மனைவி மகளையும் வழுக்கட்டாயப்படுத்தி வீட்டிற்கு வரவழைத்து விட்டார்...

போகாதிருந்திருந்தால் வாழ்வில் ஒரு அன்பான குடும்பத்தை சந்தித்த வாய்ப்பை இழந்திருப்போம்....
சரி போகிறோம் உடனடியாக கிளம்புகிறோம் என்றிருந்த எங்களது முடிவை அவர்களது அருமையான விருந்தும் பேச்சும் மாலைவரை அங்கேயே இருக்கச்செய்துவிட்டது.....

ஊரெங்கும் மரங்கள் குறிப்பாக பாதியளவு புங்கன் மரங்கள் மீதியுள்ளவை மற்ற நாட்டுமரங்களை காண முடிந்தது.வெறும் பேச்சு வெட்டிவேலை என உணர்ந்த ஹாஜி மாற்றம் தன்னிடமிருந்தே துவங்கவேண்டும் என முதலில் தமது வீட்டிற்கு அருகே மரங்களை நட ஆரம்பித்து,வீதியெங்கும் அந்த நற்காரியம் தொடர்ந்து பிறகு பக்கத்து தெருக்கள் என ஊரே இயங்கி இப்போது முழுவதுமாக மரங்கள்....
மரங்கள்...

வீடெங்கும் மரங்களைப் பாதுகாப்பதற்கான இரும்பு கூண்டுகளும்,கம்பிவலைகளும் இருப்பதைக் காண முடிந்தது.குடும்பத்தையும் குறிப்பாக வீட்டிலுள்ள குழந்தைகளையும் மரங்களின் காதலர்களாக,காவலர்களாக மாற்றி வைத்திருக்கிறார்...

இப்போது பக்கத்து ஊர்களுக்கெல்லாம் முடித்துவிட்டு சற்று தொலைவிலுள்ள ஊர்களிலும் இளைஞர்களை திரட்டி அங்கும் மரங்களின் அவசியம்பற்றி எடுத்துரைத்து மரங்களை நடுவதோடு மட்டுமல்லாமல் அதை பராமரிப்பதையும் வலியுறுத்தி கற்றுத்தருகிறது இவர்கள் குழு.இந்த நற்செயல்களுக்கு காரணமாக இருந்த முன்னோடிகளையும் இப்போது களத்தில் உதவிவருபவர்களையும் மறக்காமல் குறிப்பிட்ட ஹாஜி தன்னால் மட்டும் அங்கே எதுவும் நடக்கவில்லை என்று சொன்னது, எமக்கு மிக மிக தன்னடக்கமாகவே பட்டது.....

பிறகு பேச்சு காடுகள்,விலங்குகள்,பறவைகள் அவற்றால் காடுவளர்ப்பு- பெருக்கம் என எங்கள் அனுபவங்களையும் மாறி மாறி பகிர்ந்துகொண்டு,புறப்பட மனமில்லாமலே புறப்பட்டோம் காரணம்,எங்களுக்குள் பேச இன்னும் நிறைய விசயங்கள் இருப்பதாகவே பட்டது.பேச்சு முற்றுப்பெறாமலேயே பரங்கிப்பேட்டையிலிருந்து எங்கள் பயணம் கோவையை நோக்கி பறப்படத் தயாரானது....

அவர் கொடுத்த பரங்கிப்பேட்டை ஹல்வா சுவை இன்றும் நாக்கில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.அதன் பெருமைகளையும் அவர் சொல்லத் தவறவில்லை...

இங்கும் #தாளிப்பனை:



சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை மருத்துவக்கல்லூரிவழியாக பிச்சாவரம் செல்லும்போது உடையான்மேடு கிராமத்தில் தாலிப்பனை அதுவும் சிறியதும் பெரியதுமாக கீழ்பகுதி மிக நெருக்கமாக ஒட்டிய நிலையில் பார்த்ததும் நேராக பனைக்கருகில் சென்றுவிட்டோம். பெரிய பனை பூத்து பூக்கள் முழுவதுமே காயாகி எடை தாங்காமல் நீண்ட குலைகுலையாக சரிந்த நிலையில் கண்டோம் காய்கள் முற்றி உதிரத் தொடங்கியிருந்தது.பூத்தே ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும்....



அங்கிருந்த ஒரு வயதான பாட்டி," இந்தக் கூந்தப்பனையில் இத்தனை ஆயிரம் காய்கள் இருந்தாலும் ஒரே காய்தான் ஒரு பர்லாங் தூரம் வெடித்துச் சிதறிச் முளைக்கும்" - என்றது எனக்கு சற்று நெருடலாகவே இருந்தது. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே எமக்கும் தோன்றியது...

தாளிப்பனை பூக்க அறுபது எழுபது வருடங்கள் ஆகும் என்கிற நிலையில்,ஒரு பூத்தமரமும் அதற்கருகேயே ஒரு பத்து பதினைந்து வயது மரமும் எப்படி உருவானது என்பதும் புதிர்தான்...



இதன் கொட்டைகளை வெற்றிலை சீவலிற்கு பயன்படும் பாக்கு சீவலிற்கு மாற்றாக(கலப்படமாக!)பயன்படுத்துகிறார்கள் என்கிற கூடுதல் தகவல்களை மட்டும் தெரிந்துகொண்டேன்.அதற்குமேல் இதுபற்றி பெரிதாக அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. நல்ல வளமான மண்ணும் நீரும் அங்கே இருப்பதால், குன்னத்தூரில் இருக்கும் தாளிப் பனையைவிட மரம் சற்று நல்ல பருமானாக ஒரே சீராகவும்.ஓலைகள் நன்கு பெரிதாகவும் இருப்பதைக் காண முடிந்தது.அதற்கு சற்று தொலைவில் இதே போல காய்த்த நிலையில் ஒரு பனையைக் கண்டேன் என்பதடிக்கு மேலான உயரத்தில் இருப்பதால் தொலைவில் இருந்தால் கூட நன்கு காண முடிகிறது.....

இந்தப் பயணத்தை நல்ல அனுபவமாக்கிய சகோதரர்  பசுமை ஹாஜி அவர்களுக்கும்,முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என அன்பை வருத்தமாக வெளிப்படுத்திய தம்பி Stepan Edbark க்கும்.விழுப்பரம் அங்கிருந்து பக்கம் தான் வந்துவிட்டுச் செல்லுங்கள்.என அன்புக் கட்டளையிட்ட சகோதரர் Swaminathan Sellasundaram க்கும், நன்றிகளையும் அன்பையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்...

என்றும் சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
மேலும் இதுபற்றிய தகவல்கள்,கருத்துகளைக் காண,
https://m.facebook.com/story.php?story_fbid=1332210333561665&id=100003181323647

Sunday, 25 June 2017

கானக மைனா

கானக மைனா...



இந்தப்படத்தை வைத்து மானைப்பற்றி எழுதுவதா ?..
இல்லை மைனாவைப் பற்றி எழுதுவதா ?....
மானை அதுவும் இந்த மிளா என்கிற கடமான்கள் பற்றி ஏற்கனவே எழுதியாகிவிட்டது,
( https://m.facebook.com/story.php?story_fbid=1223120461137320&id=100003181323647 )....

இப்ப இந்த மைனாவைப் பற்றி பார்ப்போம்.,
சரி மைனாக்கள் என்றாலே எங்கும் நிறைந்திருக்கின்ற,இப்போது கிட்டத்தட்ட காக்கைகளுக்கு சமமாய் எண்ணிக்கையிலும்,செயலிலும் இருக்கும், நாகணவாய்ப்புள் என்கிற சாதாரண மைனாதான் நினைவுக்கு வரும். அதற்கு எங்கள் பகுதியியில் என்ன பெயர் தெரியுமா ?....
அழுகவண்ணான் குருவி(அளுகனாங்குருவி)....
ஏன் இதற்கு இந்தப் பெயர் என இதுவரை தெரியவில்லை.வெட்டுக்கிளிகளை ஒழிப்பதற்கு இவை ஆஸ்த்திரேலியா கொண்டு செல்லப்பட்டு,ஒரு வழியாய் வெட்டுக்கிளிகள் அங்கே  ஒழிந்தது.ஆனால் இவற்றை கட்டுப்படுத்தவே முடியாமல் அரசாங்கமே திணறியதெல்லாம் ஊரறிந்த கதை...



மைனாக்களில்(starling) பல வகைகள் இருந்தாலும் நான் பார்த்தவை கிட்டத்தட்ட ஆறு வகைகள்...
அதில்,
மைனா(common mynah).,
கருந்தலை மைனா(Brahmini starling).,
காட்டு மைனா( jungle myna).,
மலை மைனா(hill mynah),
ரோசாமைனா-சூறைக்குருவி (Rosy starling).,
சாம்பல்தலை நாகணவாய் (Chestnut-tailed Starling)...

இந்தப் படத்திலுள்ளது காட்டு மைனா.மைனாக்கள் ஒவ்வொன்றுமே அழகு.அதிலும் இந்தக் காட்டு மைனா தனி அழகு.இதன் அடர்ந்த நிறமும் அலகும்,அலகிற்கு மேலுள்ள மீசையும்  இன்னும் கூடுதல் அழகுதான்...

ஒவ்வொரு உயிரினமும் ஒன்றையொன்று சார்ந்தே வாழும் என்பதற்கு இந்தப் படத்திலுள்ள மைனா நல்ல உதாரணம்.நாங்கள் பார்க்கும்போது அந்த பெண்கடமானின் கண்களிலும் மூக்கிலும் உள்ள கழிவுகளை சுத்தம் செய்து கொண்டிருந்தது.அதற்கு வாகாக அந்த மானும் தலையை அசைக்காமல் லயித்து நின்று கொண்டிருந்தது. நாமக்கு காது குடைவதுபோல் அதற்கும் சுகமாகக்கூட இருந்திருக்கலாம்.அது அசையாமல் அனுபவித்ததை அப்படித்தான் பார்க்க முடிந்தது.ஒரு உயிரினத்திற்கு அந்தக் கழிவுகூட உணவாகவும்,இன்னொன்றிற்கு சுகமும் சத்தமும் நடந்துகொண்டிருப்பதுதான் இயற்கையின் சிறப்பு...

மானின் மீது சவாரி செய்து கொண்டே பறக்கும் பூச்சிகளை பிடித்துண்ணுவது,மைனாவிற்கு கூடுதல் பயன்.காட்டுமாடுகள் மீதும் இப்படித்தான் சவாரி செய்யும்.புழு பூச்சிகள் மட்டுமல்ல பழங்களையும்,பூக்களில் உள்ள மதுரத்தையும் மிக விருப்பமாக உண்ணும்....

வனக்காடுகளில் மட்டுமே இதைப் பார்த்திருக்கிறேன்.நீலகிரி மலையிலுள்ள கிராமங்களில் எல்லாமே இங்குள்ள சாதாரண மைனாக்களைப்போல்,வீடுகளுக்கு முன்புள்ள கழிவுகளில் உணவைத் தேடுவதையும்,சோற்றுப் பருக்கைகளை தின்பதையும் பார்த்திருக்கிறேன்.ஆனால் வனச்சூழலில்,அழகாக பல குரல்களில் கூட்டமாக பழமரங்களில் கூச்சலிடுவதை மிக மிக இரசித்து அனுபவிக்கலாம்.ஒவ்வொரு வகை மைனாவிற்கும் ஒவ்வொரு விதமான குரல்கள்.அனைத்தும் இனிமைதான்.அதில் இது தனி ரகம்.வனவிலங்கு சட்டம் கடுமையாவதற்கு முன்பெல்லாம் மனிதர்கள் இதைப்படுத்திய பாடு இருக்கிறதே!...
குஞ்சுகளாய் இருக்கும்போது கூண்டில் அடைத்து கிளிகளைப்போல் பேசக்கற்றுக் கொடுத்தால்,இது அசத்தும்.நாகர்கோவிலில் ஒரு உணவகத்தில் உள்ள மைனா அங்கு வருபவர்களைஎல்லாம், வாங்க...
வாங்க...
உட்காருங்க என்று சொல்லுமாம்!(கத்துமாம்).இதை எனது நண்பன் பாபு சொல்லும்போது மிக ஆச்சரியப்பட்டேன்.ஒரு குஞ்சு அங்கே ஐநூறு ரூபாய்களுக்கு அப்போது விற்றதெல்லாம் தனிக்கதை...

உங்களுக்கும் இந்த மைனாக்களுடன் பேசிய அனுபவமிருந்தால் பகிருங்கள்.

என்றும் சூழலியல் ஆவலுடன்,
Ramamurthi Ram
https://www.facebook.com/ramamurthi.ram.52

Wednesday, 21 June 2017

தாளிப்பனை

தாளிப்பனை
(talipot palm-Corypha umbraculifera)



அதிசயம்....
ஆகா என்னவொரு அதிசயம்...
எது அதிசயம் ?...
என்கிற கேள்வியைப்போட்டேன் அங்கு கூவிய சிலரிடம்....
நூற்றியிருபது வருசம் கழித்து பூத்திருக்கும் இந்தப்பனம்பூ அதிசயம்தானே....
மிக தெய்வாம்சம் பொருந்தியது இந்தப் பனை மரம்....
அதோடு அங்கே சூடம் கொழுத்தி,
அகல்விளக்கு ஏற்றி,
ஊதுபத்தி காட்டி,
ஹோமகுண்டமே உருவாக்கி,
அந்த அடிப்பனைமரத்தையே கொழுத்தி,கருக்கிவிட்டார்கள்...
பரிதாபம்,அத்தப் பனையின் இறுதிக்காலத்தில் இப்படியொரு அவலநிலை....
இதைப்பார்த்த எமக்கோ.,
கால்கள் கருக்கிய "கரிகாலன்" போல தோன்றியது
நூற்றியிறுபது வருடமான அந்த மூதாய் மரத்தின் நிலையைப் பார்த்து....




எல்லாப் பனைமரமும் பூக்காது இப்படி தெய்வசக்தி மிகுந்த பனைமரம் மட்டுமே பூக்கும்.அதை வணங்கினால் மனிதர்கள் வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும்,என கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாய் பனைமர பக்தர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அங்கு.
நாங்கள் அங்கிருந்தது சிறிது நேரம் மட்டுமே அந்த நேரத்தில் கோவையிலிருந்து ஒரு குடும்பமும்,கோபியிலிருந்து இருவரும் சுற்றிச்சுற்றி வந்து வணங்கிவிட்டு சிறிது கருகிய திலையிலிருந்த பனையின் சாம்பலை நெற்றியில் பக்தியுடன் வைத்துக்கொண்டிருந்தார்கள்...
இவற்றைப் பார்த்தபோது,இவர்களின் அறியாமையை நினைத்து சிரிப்பதா ?
இல்லை அழுவதா ?
இவர்களோடு வாழ்வற்காக அவமானத்தில் கூனிக்குறுகுவதா,என எமக்குத்தெரியவில்லை,அந்தப் பகுதி நீண்ட நாட்களாக திடீர் சாமிகளுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட இடம்தான்....
ஆமாம் என்ன அதிசயம் ?
அவர்களிடமே கேட்டேன்,
பதிலில்லை...
முந்தைய காலத்தில்,எங்கும் நிறைந்திருந்தவற்றை முற்றிலும் மனிதர்களால் அழித்தொழித்தபின் எஞ்சியவை எங்காவதொன்று தென்பட்டால் அதுதானே அதிசயம்- இது நான்... 



அவர்களைப் பொறுத்தவரை இங்கு, எங்கும் காணப்படும் பனைகளிலேயே (Borassus-Palmyra palm) இந்தச் சிறப்புமிகுந்த தெய்வீகசக்தி கொண்டவை மட்டுமே பூக்கும்.,
மற்றவையெல்லாம் பூக்காது.
அய்யோ... :(
இருபத்தியொறு வகைகளுக்கு மேற்பட்ட பனைவகைகளில் இந்தவகை வாழ்வில் ஒருமுறைமட்டுமே பூக்கும்.அதோடு அது சிறிது காலத்தில் இறந்துவிடும்.நாம் காணும் சாதாரனபனை (Borassus-Palmyra palm) ஒவ்வொரு பருவத்திலும் பூக்கும் அதன் பெண்மரத்திலிருந்துதான் நமக்கு சுவையான நுங்கு கிடைக்கிறது...
ஆனால் இந்த தாளிப்பனை அதன் வாழ்வில் ஒரே முறைமட்டுமே மிகப்பெரிய பூங்கொத்தை பூக்கிறது.அதில் லட்சக்கணக்கான மலர்களுண்டு.ஒரே மரத்திலேயே ஆண்,மற்றும் பெண் தன்மைகளைக் கொண்டிருக்கும்.காய்கள் காய்த்தபின் பனை வறண்டுவிடுகிறது.சுமாராக என்பதடிக்கு மேலான உயரமும்,நல்ல பருமனும்,பதினாறடி விட்ட அளவுள்ள ஒலைகளையும் கொண்டிருக்கிறது.மற்ற பனைக்கும் இதற்குமுள்ள அளவு வேறுபாடுகளைக்காண வீடியோ இணைத்திருக்கிறேன்....
"தாளிப்பனை"
-இதன் பெயரில் பலரிற்கும் பல குழப்பம். இதை,
தாழிப்பனை என்றும் எழுதுகிறார்கள்."தாளிப்பனை" என பழைய பாடல்களிலும் குழந்தைப்பாடல்களிலும் வருகிறது அது.,
“வேர்! வேர்! என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
பனை வெட்டி
என்ன பனை?
தாளிப்பனை
என்ன தாளி?
விருந்தாளி
என்ன விருந்து?
மணவிருந்து
என்ன மணம்?
தேன் மணம்
என்ன தேன்?
பூந்தேன்
என்ன பூ?
மாம்பூ
என்ன மா?
சும்மா”... இப்படிப்போகிறது.
“பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று
எண்ணிய நாமம் பனையின் பெயரே”
 - (திவாகர நிகண்டு: 700)
"தாலிப்பனை"
-முற்காலத்தில் இதன் ஒலைகளில் கணவனின் குலச்சின்னங்களை எழுதி சுருட்டி திருமணத்தின்போது பெண்களின் கழுத்தில் தாலியாக கட்டியிருக்கிறார்கள்.பனையோலைகளில் மட்டுமே அப்போது தாலி இருந்திருக்கிறது.அதனாலேயே இது தாலிப்பனை...

(ஈரோடு-கோபியிலிருந்து நம்பியூர் செல்லும் ரோட்டில் குருமந்தூரை அடுத்த,கீழ்பவானி பாசனக்கால்வாய்க்கு முன்பாக இந்த இளம் தாளிப்பனை உள்ளது.இது சிறியதாக இருக்கும்போதிருந்து பார்த்து வருகிறேன்)

"விசிறிப்பனை"
-மன்னர்கள் காலத்தில் இப்போதைய மின்விசிறிகள் இல்லையே! அப்போது இந்த தாலிப்பனையின் நீண்ட மென்மையான ஒலைகளைக்கொண்டு "பங்கா" எனப்படும் பெரிய விசிறிகளைச் செய்து, பயன்படுத்தியிருக்கிறார்கள்.அதனால் இதற்கு விசிறிப்பனை என்கிற பெயரும் உண்டு....
"குடைப்பனை"
-கேரளப் பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து கொண்டிருப்பதால், இதன் கனமற்ற நீண்ட ஒலைகளின் மூலம் குடையை போன்ற தொப்பிகள் செய்து விவசாயப்பணிகளின் போது  பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.அதனால் இதற்கு குடப்பன-குடைப்பனை என்கிற பெயரும் உண்டு...
"கூந்தப்பனை"
- அங்குள்ள ஒரு பெரியவரிடம் கேட்டேன் இதைக் கூந்தப்பனை என்கிறார்.பல பதிவுபளிலும் இந்தப் பெயரை(கூந்தல்பனை-கூந்தப்பனை)என்பதனையே தாலிப்பனையை குறிப்பிட்டிருப்பதை காணலாம்...
ஆனால்,கூந்தல்பனை(Caryota urens)பற்றி நான் பார்த்ததும் கேள்விப்பட்டதும்.குமரிப் பகுதியில் உலத்திமரம் என்றும் இலங்கயில் கித்தூள் எனப்படுவதுமான,திருமணம் போன்ற விழாக்களில் வாழையோடு கட்டப்பட்டிருக்கும் நீண்ட சௌரிபோன்ற  குழைகளைப் பார்த்திருக்கிறேன்.அதன் மயிர்பகுதிகளில் பட்டாணி போன்ற காய்களைக் காணலாம்.அதை சௌரிப்பனை என்றும் சொல்கிறார்கள்.ஆனால் தாலிப்பனைக்கு கூந்தப்பனை என்கிற பெயர்க்காரணத்தை தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.பூக்கும் காலத்தில் வெண்கூந்தல்போல் காணப்படுவதால்கூட இப்பெயர் இருக்குமோ!..
"காலிப்பனை"
-இதற்கு காலிப்பனை என்கிற பெரும் உள்ளது.இதற்கும் பெயர்க்காரணம் தெரியவில்லை.பூத்தவுடன் காலியாகிவிடுவதாலா!... :D
இதுமட்டுமில்லை,
தாளி, தாளம், சீதாளி, சீதாளம், தேர்ப்பனை, ஈரப்பனை, ஆதம் என்ற பெயர்களும் உண்டு.
சங்க காலத்தில் மாட்டு வண்டிகளுக்கு மேற்கூரையாகவும்,துறைமுகப் பகுதிகளில் இதன் ஓலைக்குடைகளின்கீழ் பலவிதமான கடைகளை நடத்தி வந்திருக்கிறார்கள்... :)
இங்கு விழுந்து,விழுந்து வணங்கிக்கொண்டிருக்க,இலங்கயில் இது பூக்கும் பகுதிக்கு கேடு என்கிற நம்பிக்கையும் இருந்து வந்திருக்கிறது. ஆக இரண்டு நம்பிக்கையும் களையப்படவேண்டியவையே...
தாலிப்பனையின் நீண்ட மெல்லிய வலுவான நான்கடி நீளமுள்ள ஓலைகளை பக்குவப்படுத்தியே பெரியபெரிய ஓலைச்சுவடிகளில் பெரும் காப்பியங்களையும்,காவியங்களையும் எழுதி வந்திருக்கிறார்கள். நன்கு பராமரித்தால் முன்னூறு நானூறு ஆண்டுகள் கூட பழுதில்லாமல் இந்தச் சுவடிகள் இருக்குமாம்...
பூத்தபின் பூக்குலையை வெட்டி அதில் பனங்கள்ளை துளிர்க்கவைத்திருக்கிறார்கள் நூறாண்டுகால சத்து அடர்ந்திருக்கும் என்கிற மருத்துவ நம்பிக்கையோடு.அனைத்து பாகங்களுமே மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்....
தென்னிந்தியாவையும்,இலங்கையையும் தாயகமாக கொண்ட தாளிப்பனை.கம்போடியா,மியான்மர்,தாய்லாந்து,அந்தமான் தீவுகள் எங்கும் அதிக அளவில், காணப்பட்டிருக்கிறது....

இந்தப்படங்களில் சிலவும்,வீடியோ காட்சிகளும் எமக்கு சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்,கோபி செங்கப்பள்ளி ரோட்டில் குன்னத்தூர் அருகில் நேற்று எடுக்கப்பட்டது.அப்போது அங்கிருந்த ஒரு சிறுமி தாத்தா நுங்குமரம்தான் இப்படிப் பூத்திருக்குதா எனக் கேட்டது எனக்குள் கவலையை உண்டாக்கியது.பனை மரத்தைக்கூட நுங்குமரம் எனச் சொல்லும் ஒரு வினோத தலைமுறையை உருவாக்கி வருகிறோம்.குறைந்தபட்சம் நம்மால் இதையாவது மாற்றினால்கூட இயற்கைச் சூழலிற்கு நாம் செய்யும் பெரும்பணியாக அது இருக்கும்...
இருப்பதைத் தொலைத்துவிட்டுத்தானே இல்லாதபோது அதை அரிதாக கண்டால்,
அதிசயம்...
தெய்வீகம்...
என வாய் பிளப்போம்.இதை மட்டுமல்ல இனி வரும் காலங்களில் அனைத்து இயற்கை வளங்களையும் காக்கக்கூட வேண்டாம் ஏனெனில் அதுவே தம்மை சரியாக்கி காத்துக்கொள்ளும். இடையூறாகவாவது செய்யாமல் இருப்போம்.இப்படி நீண்டகாலம் பலவிதமான பலன்களை கொடுக்கும் பாரம்பரிய மரங்களை ஒழித்துவிட்டு, குறைந்தகாலமே தாக்குப்பிடிக்கும் அயல்மரங்களை கொண்டுவந்து பிடுங்கி பிடுங்கி நடாமல், இந்த "மண்ணின் மரங்களைக் காப்போம்"...

சிதம்பரம் அருகில்

சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை மருத்துவக்கல்லூரிவழியாக பிச்சாவரம் செல்லும்போது உடையான்மேடு கிராமத்தில் தாலிப்பனை அதுவும் சிறியதும் பெரியதுமாக கீழ்பகுதி மிக நெருக்கமாக ஒட்டிய நிலையில் பார்த்ததும் நேராக பனைக்கருகில் சென்றுவிட்டோம். பெரிய பனை பூத்து பூக்கள் முழுவதுமே காயாகி எடை தாங்காமல் நீண்ட குலைகுலையாக சரிந்த நிலையில் கண்டோம் காய்கள் முற்றி உதிரத் தொடங்கியிருந்தது.பூத்தே ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும்....



அங்கிருந்த ஒரு வயதான பாட்டி," இந்தக் கூந்தப்பனையில் இத்தனை ஆயிரம் காய்கள் இருந்தாலும் ஒரே காய்தான் ஒரு பர்லாங் தூரம் வெடித்துச் சிதறிச் முளைக்கும்" - என்றது எனக்கு சற்று நெருடலாகவே இருந்தது. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே எமக்கும் தோன்றியது...

தாளிப்பனை பூக்க அறுபது எழுபது வருடங்கள் ஆகும் என்கிற நிலையில்,ஒரு பூத்தமரமும் அதற்கருகேயே ஒரு பத்து பதினைந்து வயது மரமும் எப்படி உருவானது என்பதும் புதிர்தான்...



இதன் கொட்டைகளை வெற்றிலை சீவலிற்கு பயன்படும் பாக்கு சீவலிற்கு மாற்றாக(கலப்படமாக!)பயன்படுத்துகிறார்கள் என்கிற கூடுதல் தகவல்களை மட்டும் தெரிந்துகொண்டேன்.அதற்குமேல் இதுபற்றி பெரிதாக அங்கிருப்பவர்களுக்கு தெரியவில்லை. நல்ல வளமான மண்ணும் நீரும் அங்கே இருப்பதால், குன்னத்தூரில் இருக்கும் தாளிப் பனையைவிட மரம் சற்று நல்ல பருமானாக ஒரே சீராகவும்.ஓலைகள் நன்கு பெரிதாகவும் இருப்பதைக் காண முடிந்தது.அதற்கு சற்று தொலைவில் இதே போல காய்த்த நிலையில் ஒரு பனையைக் கண்டேன் என்பதடிக்கு மேலான உயரத்தில் இருப்பதால் தொலைவில் இருந்தால் கூட நன்கு காண முடிகிறது.....

"கற்றுக்கொள்வோம்-அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுப்போம்"
-என,
Ramamurthi Ram

மேலும் அதிக,
விபரங்கள் மற்றும்,
படங்கள்,
கருத்துப்பரிமாற்றங்களைக் காண...

Saturday, 17 June 2017

அதிரவைக்கும் அணில்...

Indian giant squirrel,
or Malabar giant squirrel,
(Ratufa indica)



இந்திய மலைஅணில்,
நீலகிரி மலைஅணில்,
மலபார் பெரிய அணில்...
எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இவை மகாராஸ்டிர மாநிலத்தின் மாநிலவிலங்காக சிறப்பிக்கப் பட்டிருக்கிறது.மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக காணப்படும் இவற்றை எனக்கு மிகவும் பிடிக்கும்.மரத்தின்மீது எப்போதும் தளிர்களையோ காய்களையோ கொரித்துக்கொண்டே இருக்கும் இவற்றின் நிறமே தனி அழகு...

அணில் என்றாலே நமக்குச்சாம்பல் நிறமே நினைவுக்கு வரும் ஆனால் இவை மஞ்சள்கலந்தவெண்மையான அடிப்பகுதியும் பழுப்பும் கறுப்பும் அடர் பழுப்பும் கலந்த பளபளப்பான உடலின் மேல்பகுதியுடன் மனதைக் கவரும் விதமாக இருக்கும். இவற்றுன் வால்தான் எனக்கு குழப்பமாகவே உள்ளது ஆனைமலைப் பகுதிகளில் வால்முழுவதும் அடர்பழுப்பாக இருக்கும் இவற்றிற்கு நீலகிரி பகுதிகளில் வாலின் பாதிக்கும் குறைவான கடைசிப் பகுதி தந்தநிறத்தில் காணப்படும்...

(இது குன்னூர்-நீலகிரியில் கண்டது வாலின் நுனி தந்தநிறம்)

பூனைக்கும் சற்றுக்குறைவான உருவ அமைப்புடைய நன்கு வளர்ந்தவைகள் இரண்டடி நீளமும் இரண்டுகிலோ எடை வரையும் இருக்கும்...

(இது டாப்ஸ்லிப்-ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் கண்டது வால் முழுவதும் கரும்பழுப்பு நிறம்)

இவை கத்தும்போது காடே அதிரும்.

அணில்களில் பெரியவகைகள் நான்கு இருந்தாலும் இவை இங்குமட்டுமே காணக்கூடிய ஓரிடவாழ்விகளாகும்.

சூழலியல் தேடலுடன்...
Ramamurthi Ram

Facebook:
https://www.facebook.com/ramamurthi.ram.52

Tuesday, 30 May 2017

இது காட்டுப்பூனை....

அன்று பூனைகள் இருந்தன...


பூனைகள் பற்றி நமக்குத் தெரியும்,
காட்டில் வாழக்கூடிய பூனைகள் பற்றி எவ்வளவு தெரியுமா ?

வனக்காடுகளிலும் ஊரையொட்டிய புதர்க்காடுகள் மற்றும் பாலைநிலங்களிலும் தன்னிச்சையாக வாழக்கூடிய பூனையினங்களில் பல வகைகள் இருந்தாலும் நாம் இன்று பார்க்கக் கூடிய பூனை, இந்தியாமுழுவதும்ஒருகாலத்தில் எங்கும் நிறைந்திருந்த பல பகுதிகளில் வெருவு என சொல்லக்கூடிய இந்தியக் காட்டுப்பூனை(jungle cat)....,
இன்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மட்டுமே வெகு அரிதாகக் காண முடிகிறது...



இன்றை வேகமாக உலகில் பல உயிரினங்கள் முற்றிலும் அழிக்கபடுவதை (அழிக்கப்பட்டதை) உணராமலேயே கடந்துகொண்டிருக்கிறோம்.பல பெரிய உயிரினங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவுகூட இதுபோன்ற சிற்றுயிர்களுக்கு கொடுக்கப்படாதது கொஞ்சம் வேதனைதான்.அதுவும் பல வன உயிரின ஆர்வலர்களின் கவனத்தில் வரதாததுகூட கவனிக்கப்படவேண்டிய ஒன்று...

ஒவ்வொரு உயிரினமும் அதனதன் பங்கிற்கு சூழலியல் செயல்பாட்டை நடத்திக்கொண்டிருக்கிறது.அதில் இதுபோன்ற  சிறு வேட்டையாடிகளின் பங்கு மிக மிக அவசியமானது...

எப்படியென்றால்,உணவுச்சங்கிலி சிதைக்கப்பட்டால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் என்பதற்கு உதாரணமாக மயில்களின் இயற்கை எதிரிகளான பூனைவகைகளும் நரியினமும் மிக மிக அருகிவிட்டதால்  இங்கு மயில்களின் எண்ணிக்கை அதிகமாக பெருகிவிட்டது.இப்போது எமது பகுதி விவசாயிகளுக்கு மயில்களே பெரும் பிரச்சனை...

இந்தப் பூனைகள் கோழிகளை பிடிக்கிறது என்பதற்காகவும்,தவறான மருத்துவ மூடத்தனத்தாலும் பூனைகள் வெகுவாக கொல்லப்பட்டன.அவைசெய்துவந்த  இயற்கைச்சமநிலையாக்கும் வேலையை இனிச் செய்வது யார்?...

கடந்தவருடம் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் பந்திப்பூர் காட்டிற்குள் 🐯புலியைத் தேடி சென்றபோது எதிர்பாராத விதமாக பூனையை கண்டோம்...
அது காட்டுப்பூனை...

காட்டில் இருக்கிறதினால் அது காட்டுப்பூனையா?

இல்லை காட்டுப்பூனைக்கும் வீட்டுப்பூனைக்கும் வேறுபாடுகள் உண்டு...

வீட்டுப்பூனை தயிர்சாதம்,வடையெல்லாம் சாப்பிடும் மனிதனோடு சேர்ந்ததினால் மனிதன் சாப்பிட்டறதை எல்லாம் சாப்பிட்டு  சில வசதியான பூனைகள்😸 மனுசனைப்போலவே தொப்பையோடு காணலாம்.
சர்க்கரை வியாதிகூட💉 இருக்கும்!...

ஆனா நம்மகாட்டுப்பூனை "சுத்த அசைவம்"
-அது கொரியுண்ணிகளான
🐇முயல்
🐀எலி மற்றும் அணில்,
🐦பறவைகள்,
🐍பாம்பு,
🐸தவளை...
இப்படி கிடைத்ததை எல்லாம் சடச்சுட சாப்பிடும். அதன் எடை மற்றும் உருவத்தைவிட சற்று பெரிதானவற்றையும் அடித்து உண்ணும் வேட்டைத் திறன் உடையவை. எளிதில் விரைந்து மரம் ஏறக்கூடிய திறன்💪 வாய்ந்தவை....

மேலே சொன்னதுபோல காட்டுப்பூனையிலும் பல இனங்கள் உண்டு நாங்கள் கண்டது 🐈இந்திக் காட்டுப்பூனை(jungle cat),
அதுவும் நாங்கள் பார்த்த அந்த நேரம் மயிர்சிலிர்க்க வைத்த தருணம்- எங்களுக்கல்ல பூனைக்கு....

பூனையின் எதிரே ஒரு கீரி வந்தது இரண்டும் சண்டையிடத் தயார் ஆவதுபோல் சூழ்நிலை.பூனை தன்உடம்பை சிலிர்த்து மயிர்கள்ளை விரைப்பாகியது பிறகு என்ன நினைத்ததோ அல்லது ஏதாவது உடன்பாடு ஆகிவிட்டதோ! இரண்டும்வேறு வேறு திசைகளில் சென்றுவிட்டன...

காட்டுப்பூனைகள்🐱 மூன்றிலிருந்து பனிரெண்டு கிலோ வரையான எடையுடன் இருக்கும்.மிதக்கும் தன்மையுள்ள விலா எலும்புகளில் முன்னங்கால்கள் இணைந்திருப்பதால் தலை நுழையக்கூடிய எந்த சந்திலும் நம்ம பூனையார் நுழைந்து விடுவார்...

தமது வாழ்நாளில் நூற்றிஐம்பது குட்டிகள்வரை போடும்.இரண்டுமாத காலம் வரை குட்டிகள் தாயின் வயிற்றிலிருக்கும்...

ஒவ்வொரு உயிரினத்தையும் இந்த பூமியில் நிலைநிறுத்த  இயற்கை மிகப்பெரும் கருணைகாட்டி சில சிறப்புத் தன்மைகளை ஒவ்வொன்றிற்கும் வழங்கியிருப்பது ஆச்சரியம்தானே அவ்வகையில் இதன்கால்களில் நடக்கும்போது எவ்வித அதிர்வையும் உண்டாக்காத தன்மையுடைய மெத்தென்ற மென்மையான அடிப்பரப்புள்ள வலிமையான கால்கள்!.😜

இன்றைய காலகட்டத்தில் மிகுந்த கவலையடையக் கூடிய நிலையில்😿 இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
காரணம் வனப்பரப்பு குறைந்துகொண்டே வருவதோடு மட்டும் இல்லாமல் நகர்பெருக்கம் மற்றும்  பேராசையின் காரணமாக மனிதன் வாழும்பகுதிக்கு அருகிலுள்ள புதர்காடுகளை அழித்ததினால் அவற்றை வாழிடமாக கொண்டிருந்த இதுபோன்ற சிறிய வகை ஊணுண்ணிகள் வாழிடமில்லாமல் எஞ்சியவை காப்புக் காடுகளை நோக்கி நகர்ந்துவிட்டன.
அங்கும் வாழ்க்கைப் போட்டியினால் மிகுந்த சவால்களுடனேயே இருக்கிறது...😢.இப்படியே போனால் இவற்றைக் காணும் கடைசித் தலைமுறை நாமாகத்தான் இருப்போம்!...
இதற்குக் காரணம் நாம்தான்.
😈
சூழலியல் ஆர்வத்துடன்,
Ramamurthi Ram
https://www.facebook.com/ramamurthi.ram.52

Sunday, 21 May 2017

உலகப் பல்லுயிர் பரவல் தினம்

மே 22 உலகப் பல்லுயிர் பரவல் தினம்
(World Biodiversity Day)

இன்றைய நாட்களில் மனிதர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியிருப்பது இயற்கை சார்ந்த வனச்சுற்றுலா என்பதில் சந்தேகமில்லை.வனச்சுற்றுலா நடக்கும் முதுமலை,பந்திப்பூர் போன்ற இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் நிற்பதே அதற்கு சாட்சி...

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையப்படுத்துவார்கள்.இந்த வருட உலக பல்லுயிர் தினத்தின் கருவாக சுற்றுலா வளர்ப்பும்-பல்லுயிர்சூழல் பெருக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். அதாவது சுற்றுலாவை வளர்ப்பதன் மூலம் வருவாய் பெருகுகிறது.அதன் மூலம் வன உயிர்களை காக்கலாம் என்பதே....



இருந்தாலும் சிலவற்றை எப்போதும் சொல்வதைப்போல, மீண்டும் அசைபோடுவோம்.
இந்த மாதிரியான தினங்கள் எதற்காக அனுசரிக்கப் படுகிறது என நாம் முதலில் புரிந்து கொண்டால் மட்டுமே அதைப்பின்பற்றி நடக்க ஆரம்பிப்போம்...

முதலில் இந்த தினம் கொண்டாட்ட தினங்களில் ஒன்றல்ல அதாவது, நரகாசூரனை அழித்த தினம் தீபாவளி தினம் தீமை ஒழிந்தநாளாக கருதப்படுவதால் அது கொண்டாட்டத்திற்குரிய நாளாக பார்க்கப்படுகிறது...

இப்படி வருடம் முழுவதுமே பல நாட்களை கொண்டாட்ட நாட்களாக பழக்கப்படுத்திவிட்ட சமூகத்தில் வாழ்வதால் நமக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்டநாளை யாராவது சில அக்கறையுள்ளவர்கள் சில தினங்களை சில காரணங்களுக்காக வலியுறுத்தல் நாளாக அனுசரிக்கச்சொல்வதால் அது கொண்டாட்டப் புத்தியிலேயே பார்க்க வைக்கிறது...



உண்மையில் இவ்வாறான நாட்கள் நம்மை எச்சரிப்பதற்காக...
நினைவூட்டுவதற்காக,
சாலையில் வைத்திருக்கும் எச்சரிக்கைப் பலகைகளைப் போன்றவையே இந்த நாட்கள்...

சரி உலகப் பல்லுயிர்ப் பரவல் நாள் எதற்கு ?

இதுவும் நம்மை எச்சரிக்கவே என்னை கடந்த எதுவுமில்லை என்கிற மனிதனின் இறுமாப்பிற்கு எச்சரிக்கை விடும் நாட்களில் இதுவும் ஒன்று.
மரம் தானே என மரத்தை வெட்டியும்,இன்னும்பிற பேராசைச் செயல்களாலும் பலகோடி ஆண்டுகளாக உருவான புவிச்சூழலையே சிதைத்துவரும் மனிதானால், மீண்டும் பழைய நிலைக்கு பூமியை மாற்றுவதென்பது ஒரேநாளில் செய்யமுடியாத காரியம். இதை புரிந்து கொண்டால் மனிதர்களால்தான் இந்த உலகில் எதையும் செய்ய முடியும் என்கிற புத்தி காணாது போய்விடும்...

இந்த மாதிரியான ஆதிக்கபுத்தியை கழட்டிவைக்கச்சொல்லும் நாட்களில் இதுவும் ஒன்று மற்ற உயிரினங்களை விட மிக மிக தாமதமாகவே இந்தப்பூமியில் பிறந்த பூமிக்குடும்பத்தின் கடைக்குட்டிதான் மனிதன்...

இந்தவகையில் பார்த்தால் முதல் உரிமை மற்ற உயிர்களுக்கே...
இதை உணர்ந்தால் அத்துமீறி அழிக்கும் புத்தி மனிதனுக்கு எப்படி வரும்?..

இந்த பூமியில் வாழ்கிற அத்தனை உயிர்களுமே மிக மிக அவசியமானவை அதில் முக்கியமானவை எது ?...
எது நமக்கு நன்மை செய்கிறதோ...
அதாவது, "நமக்கு உணவாகவோ அல்லது பணமாகவோ மாற்றக்கூடியவையான உயிரினங்கள் நன்மை செய்யும் உயிரினங்களாக பார்க்கப்படுகிறது"....
மற்றவை தீமை செய்பவையா ?

உண்மை என்னவென்றால் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கு மனிதன்தான்...
"தீமை செய்யும் உயிரினம் "

மரங்களை அழித்தோம்...
அதன் விளைவு

பல பறவைகள் அழிந்தது ,
காலநிலை மாற்றம்,
புவிச்சூடு,
காற்று சீர்கெட்டு அபாய நிலையை நோக்கி பூமி...

இனி நீர் வணிகம் போல காற்றுவணிகச் சூழலையும்  உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்...

இங்கு மற்ற உயிர்கள் எதற்கு இருக்கின்றன என்கிற காரணம் வேண்டுமானால் நமக்குத்தெரியாமல் இருக்கலாம் ஆனால் இயற்கை எதையும் காரணமின்றி உருவாக்கவில்லை என்பதை உணர்ந்து பல்லுயிர்ச்சூழல் தழைக்க பங்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவற்றை சிதைக்கின்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்போம்...

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை தவிர்ப்போம்...
பொதுப்போக்குவரத்தைப் பயன் படுத்துவோம்,
சைக்கிளை தூசிதட்டி ஓட்டிப் பழகுவோம்,
மின் பயன்பாட்டைக் குறைத்து
ஆடம்பரத்தைக் குறைப்போம் எளிமையை கடைபிடிப்போம்...
அழகிற்காகவும்,மூடநம்பிக்கையாலும்,
உயிரினங்களின் இறகுகள்,
சிறகுகள்,
தோல்,
கொம்பு,
பல்,
மயிர்கள்,
நகங்களின் பயன்பாட்டைத் தவிர்ப்போம்...



அதனதன் வாழிடச்சூழலை மேலும் அழிக்காமல் இருப்போம் இல்லையெனில் மனிதன் வாழும் சூழலே அற்றுவிடும் பிற உயிர்களற்ற சூழலில் மனிதன் அனாதையாகி விட மாட்டான் அழிந்தே விடுவான்...

இருப்பதைக்கொண்டு இன்பமாக அனைத்து உயிர்களையும் மதித்து வாழ்வோம்...

சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

Facebook:
https://m.facebook.com/story.php?story_fbid=1291011304348235&id=100003181323647

யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...