Tuesday, 28 March 2017

சருகுமான்

அறிந்து கொள்வோம்...

Mouse deer-சருகுமான்.



சருகுமான் என்பது மானே இல்லை அதாவது மான் இன வகைப்பாட்டில் வராத சிறிய குளம்பிவிலங்கு இது...

சருகு என்பதன் பொருள் இரட்டைக்குளம்பி என்பதே அதிலும் இவை மான்போன்றே தோற்றமளிப்பதால் இதை சருகுமான் என்றும் கூறுகிறார்கள். இலை தழைகளுடன் ஒன்றி காய்ந்த சருகுகளுக்கு இடையில் இதன் வாழ்க்கை உள்ளதால்,அதாவது சருகுகள் போன்றே தோற்றம் இருப்பதால் இதன் பெயர் சருகுமான் எனவிளக்கமளிக்கின்றனர் சிலர் அது பொருந்தினாலும் அது காரணமல்ல...



இதன் ஆங்கிலப் பெயரான Mouse deer என்பதனை அப்படியே மொழிப்பெயர்த்து எலிமான் என சொல்வோரும் உண்டு...

சங்க இலக்கியத்தில் வரும் பொய்மான்,மாயமான் இதுவே என்கின்றனர் அதாவது இதன் வேகமும் சட்டென மறைந்துகொள்ளும் திறனும் அப்படி.பெரும்பாலும் இரவு நேரத்திலேயே இரைதேடிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன் பகலில் இதை நான் பார்த்ததே இல்லை...

திண்டுக்கல்-சிறுமலை மற்றும் கொள்ளிமலைக்காடுகள் உட்பட தமிழக காடுமுழுவதுமே காணப்படுகிறது...




சிலபகுதி ஆதிகுடி மக்கள் இதனை கூரன்பன்றி எனவும் அழைக்கிறார்கள் இதுவே சரியான தமிழ்ப் பெயராக இருக்கும்.தமிழை மூலமாகக் கொண்ட தெலுங்கு மொழியில் இதன்பெயர் "ஜரினிபன்டி" அதாவது பன்றியும் மானும்.மலையாளத்தில் இதன்பெயர் "கூரன்"...

இவை மிகச்சிறிய உருவம் அமைப்பு கொண்டவை. இவற்றுக்கு கொம்புகள் இல்லை, சிறியவால் உண்டு. நிறம் பழுப்பாகவும், உடலின் மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் காணப்படும்.இவற்றில் ஆணிற்கு பன்றிகள் போன்ற கோரைப்பற்கள் உண்டு இவை தந்தம் போல  இணையாக நீண்டு இருக்கும்...

இவை இலங்கை, தென்னிந்தியா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார் மாநில காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன....



வேகமாக அழிந்துவரும் இவற்றை மனிதர்கள்தான் காக்க வேண்டும் ஏனெனில் இவற்றை வரம்புமீறி அழிப்பதும் மனிதர்களே.ஆமாம் கடுமையான வனவிலங்குகள் சட்டம் இருப்பினும் இன்றளவும்கூட பரவலாக வேட்டையாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதே உண்மை...



இந்த சருகுமானில் சிற்சில வேறுபாடுகளுடன் பத்திற்குமேற்பட்ட உள்ளினங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஆக இதற்கு,
சருகுமான்,
கூரன்பன்றி,
பொய்மான்,
மாயமான்,
எலிமான்...
என எத்தனை பெயர்கள்!!!...

(பட உதவி:இணையம்)

Saturday, 25 March 2017

ஒரு சேதிசொல்றேன் கேளுங்க....

இந்த வெய்யில் நேரத்தில்,
உங்களுக்கு ஒரு சேதிசொல்றேன் கேளுங்க....

வெயில்காலம் துவங்கிவிட்டது உடல்தனது வெப்பத்தை சமன்படுத்தி ஒரேசீராக வைத்திருக்க அதிகளவு நீரிழப்பை சந்திக்கும்...

அதிகவெப்பத்தின் காரணமாகத்தான் நமக்கு தாகம் அதிகமாக உண்டாகும்,உடனே நமக்கு தெரிந்தது எல்லாம் பாட்டிலில் அடைக்கப்பட்ட சில்லெனவிருக்கும் குளிர்பானங்களதானே.ஆனாலும் தைப்புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட விழிப்புணர்வால் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை சரிந்திருப்பதாக வரும் தகவல்கள் உண்மையிலேயே நல்லசெய்திதான்...

உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நன்மையை தரக்கூடிய செய்தி என்பதில் மகிழ்ச்சியே...



ஆனாலும் ஒன்றைமட்டும் இந்த நேரத்தில் நன்கு கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால் அது எந்த பானமாக இருந்தாலும் அது இயற்கை யாக இருத்தலே உடலுக்கும் அது சார்ந்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதில் வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது உள்நாட்டு நிறுவனங்கள் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. பொருளாதாரத்திற்கு வேண்டுமானால் நல்லது வெளிநாடு உள்நாடு என்பதில் மாற்றம் இருக்கலாம்...

பாட்டிலில் அடைத்த Carbonized drink's எதைக்குடித்தாலும் உண்மையில் நம் உடல் புத்துணர்ச்சிக்குப் பதில் சோர்வையே அடையும்...
மீண்டும் கவனிக்கவும் அது வெளிநாட்டு பானம் அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்கிற வித்தியாசமெல்லாம் கிடையாது...

குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. அதோடு உடல் நலத்துக்கும் மிகுந்த கெடுதல்தான். இத்தகைய சோடா, டயட் குளிர்பானங்கள் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய், மாரடைப்பு, எலும்பு அடர்த்தியின்மை என்று ஏராளமான பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் என்கிற பெயரில் சிலவற்றை குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்குப் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தாக சமீத்தில் வந்த ஆய்வுகள் சொல்கிறதாம்... இளைஞர்களுக்கு அதிக அளவில் கலோரி அளவை அதிகரிப்பதில் ‘ஜங்க்’ ஃபுட்களைத் தாண்டி எனர்ஜி டிரிங்ஸ் முன்னணியில் இருக்கிறது.”
குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன...

குளிர்பானத்தில் கலக்கப்படும் காஃபினே தொடர்ந்து இந்த பானத்தை அருந்தத் தூண்டுதலாக (அடிக்ஷன்) உள்ளது. ‘டயட்’ குளிர்பானத்தில் ஆஸ்பர்டேம் (Aspartame) என்ற வேதிப்பொருள் சர்க்கரைக்குப் பதிலான இனிப்புச் சுவை தருவதற்காகச் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் மூளையில் கட்டி, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும் பதற்றம், மன அழுத்தம், சோர்வு, தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற நரம்பியல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சில நிறுவனங்கள் ஆஸ்பர்டேமுக்கு பதில் வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

எனவே, குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பானங்களைக் குடிப்பதற்குப் பதில், நம் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே போதும்...

அதாவது...
நீராகாரம்,
நீர் மோர்,
கரும்புச்சாறு,
பதநீர்,
பழச்சாறுகள்...
என உடலுக்கு வலு சேர்க்கும் பானங்களைப் பருகலாம். பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் அருந்துவதே நல்லது. முக்கியமாக பழங்களை கடித்துச்சுவைத்து சாப்பிடும்போதுதான் அதன் முழுப் பலனும் கிடைக்கும்...

குளிர்பானம் அருந்தும்போது உடலில் உள்ள உறுப்புகள் ஏற்படும் பாதிப்புகள் :

உடல் பருமன்
அமெரிக்காவில் 20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தினமும் குளிர்பானம் குடித்த 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் உடல் பருமன் மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவிகிதம் பேர் ஒன்றரை ஆண்டில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டனர்.

சர்க்கரை அதிகம் உள்ள பானத்தைக் குடிப்பதால் உடல் பருமன் ஏற்படும். ஆனால், டயட் சோடா குடித்தாலும் எடை கிலோ கணக்கில் உயரும் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கக்கூடிய உண்மை. குளிர்பானம் குடிக்கும்போது அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இந்த அளவுக்கு அதிசயமாக, சர்க்கரையானது கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்துவைக்கிறது. இப்படி, படிப்படியாக உடல் எடை அதிகரித்து உடல் பருமன் என்ற நிலை ஏற்படுகிறது. கொழுப்பு உடலில் படிவதுடன், கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளுக்குள்ளும் படிந்து பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

இதயம் மற்றும் சர்க்கரை நோய்
குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு.
அதிலும் டயட் சோடா அருந்துபவர்களுக்கு 61 சதவிகிதமாக உள்ளது. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 80 சதவிகிதமாக இருக்கிறது. உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயானது இதய நோய்க்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கிறதாம். இதற்கு முக்கியக் காரணம், குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஃபிரக்டோஸ் கார்ன் சிரப். இனிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் இந்த சிரப்பானது உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைப் பாதித்து, இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறதாக சொல்லப்படுகிறது...

பற்கள் / எலும்புகள்
குழந்தைகளின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கும், பெரியவர்களுக்கு எலும்பு மற்றும் பல் வலுவாக இருக்கவும் கால்சியம் தேவை. ஒரு நாளைக்கு போதுமான அளவு கால்சியமும் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் கிடைக்கும் சிறிதளவு கால்சியத்தையும் குளிர்பானங்களில் உள்ள ரசாயனங்கள் வெளியேற்றிவிடுவதால், குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சர்க்கரை மற்றும் குளிர்பானத்தில் உள்ள அமிலங்கள், பல்லில் உள்ள எனாமலை மிக விரைவாகத் தாக்குகின்றன. இதனால் எளிதில் பற்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பற்சிதைவானது பல்லின் வேர் வரை செல்லும்போது பல்லின் ஆயுள் குறையும். குளிர்பானங்களில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், எலும்பில் உள்ள கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களைச் சிதைத்து வெளியேற்றும். இதனால், எலும்பின் அடர்த்தியைக் குறைத்து ஆஸ்டியோபொரோசிஸ் வருவதற்கு வழிவகுக்கிறதாம்...

சிறுநீரகம்
தினமும் செயற்கைகுளிர்பானம் அருந்துவது சிறுநீரகப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பை இரு மடங்கு அதிகப்படுத்துவதாக ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் ஆய்வு கூறுகிறது. குளிர்பானத்தில் உள்ள, பாஸ்பாரிக் அமிலத்தை வெளியேற்றும் பணியை சிறுநீரகம் மேற்கொள்கிறது. இது சிறுநீரகத்தில் கல் உருவாகவும், இதர சிறுநீரகப் பிரச்னைகள் உருவாகவும் காரணமாக இருக்கிறது.பெட் பாட்டிலும் பாதிப்புதான்!குளிர்பானங்கள் வரும் பெட் பாட்டில்களில், பிஸ்பினால் ஏ என்ற ரசாயனப்பூச்சு இருக்கும். இது இதய நோயில் தொடங்கி, உடல் பருமன், இனப்பெருக்க மண்டலம் என உடலின் பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும். கோலா வகை பானங்களில் நிறத்துக்காக சேர்க்கப்படும் செயற்கை காரமெல், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என்கிறார்கள்...

இதுவெல்லாம் நமக்கெதற்கு உயிர்சத்துகள் நிறைந்திருக்கும் இளநீர் போன்றவை நிறைந்த நம்நாட்டில்....

இறுதியாக ஒன்றை மட்டும் சொல்கிறேன் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்....
"சாப்பிடத் தயாரான நிலையில் உள்ள செயற்கையாக உருவாக்கிய எந்த பானமும்,உணவும் குறிப்பிட்ட சில மணிநேரங்களில் கெட்டுப்போக வேண்டும் இதுதான் நியதி.இதைவிடுத்து பல நாட்கள் பலமாதங்கள் பிற உயிரிகளால் கெடாமல் வைத்திருக்க உதவ எதை சேர்த்தாலும்.அது நமது உயிரையும் சிதைக்க ஆரம்பிக்கும்.அப்படிச் சிதைப்பதே நோய்"....

எச்சரிக்கை அடைவோம் எதிர்கால சந்ததிகளை காப்போம்...

https://m.facebook.com/story.php?story_fbid=1236232889826077&id=100003181323647

Thursday, 23 March 2017

ஒரு வேண்டுகோள்...



ஊடகத்துறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.வனவிலங்குகள் ஒருபோதும் அட்டகாசம் செய்வதில்லை அவற்றின் வாழிடத்தில் சிக்கலை ஏற்படுத்தி நாம்தான் அட்டகாசம் செய்து வருகிறோம்.அவைகள் அட்டகாசம் செய்ய ஆரம்பித்தால் உலக உயிர்கள் அனைத்தும் அழிவதற்கான வாய்ப்பாய் அமைந்திடும்....(உண்மையிலேயே அவை அட்டகாசம் செய்ய ஆரம்பித்தால் நாம் சும்மா இருப்போமா? நாம்தான் இந்த உலகையே அழிக்குமளவு ஆயுதங்கள் வைத்திருக்கிறோமே.அனைத்தையும் அழிப்போம் விலங்குகள்  பறவைகளை அழிப்போம் அதன் பின் காடுகளும் தாவரங்களும் அழியும் அனைத்தையும் அழித்துவிட்டால் நம்மை அழிக்க யாரும் தேவை இல்லை)



இந்தச் செய்தியில் வந்த யானைகள்கூட அட்டகாசம் செய்பவைகளாகத் தெரியவில்லை அவைகள் செய்தியில் குறிப்பிட்டபட்டிருப்பதிலிருந்து நீண்டகாலமாக வருடாவருடம் அங்கு வருகிறது எனத் தெரிகிறது. இதைவைத்துப் பார்த்தால் இது ஒன்றும் அவற்றிற்கு புதிய பாதையும் இல்லை.மேலும் யானைகள் எப்போதும் நிரந்தரமாக ஒரே இடத்தில் வாழ்பவையும் இல்லை உணவு நீர் தேடி நகர்ந்து கொண்டே இருப்பவை.அவைகள் ஒரே இடத்தில் இருந்தால் காட்டின் தன்மையும் மாறிவிடும் அவைகளுக்கு உணவும் நீரும்கூட கிடைக்காது....

கர்நாடக பகுதியிலிருந்து தமிழகத்திற்குவருகிறதென்றால் அவை கன்னட யானைகளா?...
அவற்றிற்கு எந்தவிதமான எல்லைக்கோடுகளும் இல்லை அவைகளிடம் வரைபடமும் இல்லை நமக்குத்தான் அந்தப் பாகுபாடெல்லாம்....

விவசாயி பாதிப்பதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது இந்தச் சிக்கலுக்கு நிரந்தர தீர்வுதான் வேண்டும் விரட்டப்படுவதெல்லாம் தற்காலிகத் தீர்வுதான்.இதற்கு அக்கறையுள்ளவர்களும் அதிகாரத்திலுள்ளவர்களும் இணைந்துதான் நிரந்தரமான தீர்வை எட்டவேண்டும்...

அச்சில் வருவதைத்தான் பெரும்பாலும் உண்மை என நம்பும் சமூகத்திற்கு, நீங்களும்  பொறுப்பான வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்.ஏனெனில் வனவிலங்குகள் என்றாலே மக்களுக்கு, ஈவு இரக்கமற்ற கொடூரமானவை என்கிற பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்மனதில் பதிந்துவிடும்...

அதன்பின்னர் பாம்பைக்கண்டாலே கொல்வது போன்ற நிலைக்கு மக்கள் தயாரானதுபோல் வனவிலங்குகள் மீதும் தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள்  வளர்ந்துவிடும்...

யானைகள் உண்மையில் மனிதனோடு இணக்கமோடு வாழவேண்டும் என்கிற நிலையோடு இருக்கும் சாதுவானவை,அவைகள் ஒரு சிறுத்தை அல்லது புலியின் தன்மையோடு இருந்தால் இவ்வளவு வலிமையான பெரிய உருவத்தை வைத்து என்னவெல்லாம் செய்யமுடியும் ?கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்,
இந்த பூமியே தாங்காது....

உண்மையாகவே ஊடகத்துறையில் சூழலியல் சார்ந்த அறிவுத்திறன் படைத்தவர்களும் பலர் இருக்கிறார்கள்.பிரசுரிப்பற்கு முன் அவர்களிடம் ஈகோவை விடுத்து ஆலோசித்து பின் அச்சேற்றுங்கள்.நான் இதைச் சொல்வதற்கும் காரணம் இருக்கிறது கடந்த சில நாட்களில் வந்த சில பத்திரிக்கை செய்திகளையும் கீழே இணைத்திருக்கிறேன் பாருங்கள் காரணம் புரியும்...

பல சிக்கல்கள் நிறைந்த உங்கள் பணி மிக மகத்தானது.அதே சமயம் உங்கள் செய்தியின் தன்மை மக்களுக்கு அறிவுத்தெளிவை ஏற்படுத்தும் படியாகவும் இருக்கட்டும் நன்றி....

உதாரணத்திற்கு சில...



இந்தப் பச்சோந்திகள் சாதாரணமாக காணப்படும் ஓணான்கள் போல் எங்கும் வாழக்கூடியவை இதை ஏன் வினோதவிலங்கைப்போல் செய்தியாக்க வேண்டும் ? இவற்றையெல்லாம் செய்திகளாக பிரசுரிக்கும்போது மக்கள் பச்சோந்திகளை மீண்டும் மீண்டும் பிடிக்க தூண்டுகோளாகிவிடுமே ? அதை ஏன் பிடித்துக்க வேண்டும் ? அதை வனத்துறையிடம் ஏன் ஒப்படைக்க வேண்டும் ? பிறகு அவர்கள் அதை ஏன் காட்டில் விடவேண்டும் ? அது வனங்களில் மட்டும்தான் வாழவேண்டும் என்கிற சட்டவரைமுறை எதுவுமில்லையே?அது பூச்சிகளைப் பிடித்து உண்டு மனிதர்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஒரு சாதாரண விலங்கினம் இது எந்தவிதத்திலும் ஆபத்து இல்லாதது.பிறகு ஏன் இப்படி ? புரியவில்லை....




செய்தியில் உள்ள படத்திலிருக்கும் பறவை சங்குவளை நாரை அல்லது மஞ்சள் மூக்குநாரை (Painted stork) இந்தியாவில் சாதாரணமாக நீர்நிலைப்பகுதிகள் எங்கும் காணப்படுவது.ஆனால் செய்தியில் இதற்கு குறிப்பிட்டுள்ள பெயர் பூநாரை(Flamingos).பூநாரைகள் வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இங்கு வந்து சதுப்புநிலங்களில் மட்டும் பெரும்பாலும் காணப்படுபவை.அதுவும் தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரிக்கெல்லாம் வராதவை!!!...



செய்தியின் படி மோகனூர் அருகில் பிடிபட்டது முள்ளம்பன்றியாக(Porcupine) இருக்கலாம் ஆனால் செய்தியில் உள்ள படம் முள்ளெலி(Hedgehog). அல்லது பிடிபட்ட விலங்கு படத்திலுள்ளது போன்று முள்ளெலியாகவும் இருக்கலாம் ஆனால் அதற்கு முள்ளம் பன்றி என வேறுவிலங்கின் பெயரை மாற்றி ஏன் இதற்கு வைக்கவேண்டும்? இதைப்  படிப்பவர்களுக்கு தவறான கற்பித்தல்தானே ?!!!....



இவை காட்டெருமைகள் இல்லை.ஊடகங்கள் மூலம் இவை எருமைகள் ஆக்கப்பட்டவை. இவை எருமை இனமே இல்லை மாட்டின் இனம்.இவை கடமா அல்லது காட்டுமாடு எனக்கூட இதனைக் குறிப்பிடலாம்...



இந்தக் கொடுமையையும் பாருங்கள் ஒரு அடிப்படை அறிவுகூட வேண்டாமா ஒரு பத்திரிக்கைத் துறையில் இருப்பவர்களுக்கு யாரோ போட்டோஷாப் செய்த இந்த ராஜநாகத்தின் படத்தை மூன்று தலையுடைய பாம்பாக ஒரு செய்தி.எந்தவிதத்திலும் அறிவை வளர்ப்பதாக இல்லை இருக்கின்ற அறிவை இழக்கச் செய்பவையாக அல்லவா இருக்கிறது!!!....



விவசாயிகளுக்கு நன்கு தெரியும் எது சீமைக்கருவேலமரங்கள்(Prosopis juliflora)என்று.இந்தச் செய்தியில் உள்ள படத்தில் இருப்பது பல நன்மைகளை கொடுக்கும் நாட்டுக்கருவேலமரங்கள்((Babultree-Acacia nilotica).இந்தச் செய்தியைப் படித்து மிச்சமிருக்கிற நன்மை செய்யும் மரங்களையும் வெட்டிவிட்டால்? கொடுமை....

சூழலியல் ஆவலுடன்,
Ramamurthi Ram

Wednesday, 22 March 2017

எச்சரிக்கையை-உணர்ந்து வாழ்வோம்!!

ஒருநாள் தாமதமான பதிவு இருந்தாலும் இது என்றுமே பொறுத்தமாக இருக்கும்....

மார்ச் 21" உலக காடுகள்தினம்"



எச்சரிக்கையை-உணர்ந்து வாழ்வோம்!!

இன்றுமட்டுமல்ல தினத்தோறும் காடுகள் தினமாக அனுசரித்து எஞ்சிய காட்டைக் காப்பாற்றினால் மட்டுமே மனிதர்கள் இந்த பூமியில் மிஞ்சுவோம்...

"தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், சோற்றை குறைவான அளவிலும், மாத்திரைகளை அதிகமாகவும் விழுங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்"...

வனமும் வன உயிர்களின் பாதுகாப்பும் மிக அவசியம் என்பதை உணர்வோம்...

"நாம் வாழ அவை வாழ்வது அவசியம்"-இதிலும் சுயநலம்தான்.இயற்கை வளத்தை சூரையாடிவிட்டால் இந்தபூமி மனிதர்கள்வாழத் தகுதியற்றநிலைக்கு வந்துவிடும் அதனால் எதிர்கால நலன்கருதி
காட்டையும் காட்டுயிர்களைப் பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்...
முதலில் உங்களுக்கு என்னென்ன தெரியுமென பட்டியலிடுங்கள் பிறகு குழந்தைகளுக்கு சொல்லுங்கள் ....
உண்மையிலேயே அவர்கள்  ஆர்வமாகி விடுவார்கள்....

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் மிக முக்கியமனவை
இயற்கை எதையும் காரணமின்றி உருவாக்கவில்லை
"காரணம்"-வேண்டுமானால் நமக்குத் தெரியாமலிருக்கலாம்..

  உதாரணமாக
கொசுக்களினால் பல நோய்கள் வருவதாக அஞ்சுகிறோம், என்னையும் எனது விஞ்ஞான அறிவையும் மிஞ்ச ஆள்இல்லையென்ற தலைக்கனம் கூட மனிதனுக்கு உண்டு...
உனது விஞ்ஞானத்தால் அதைக்கட்டுப்படுத்தக் கூட முடியவில்லை...

நீரில்வாழும் பூச்சிகள், தட்டான், தலைப்பிரட்டைகளின் முக்கியவேலை என்ன தெரியுமா? சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்களின் லார்வாக்களை உணவாக உண்பதுதான்.

பூச்சிக்கொல்லிகள் நமக்கு கெடுதல் தரும் பூச்சிகளை மட்டுமல்ல... நன்மை செய்யும் பூச்சிகளையும் அழித்து, சுற்றுச்சூழலுக்கு தீமையையே செய்கிறது.தரையிலும் தண்ணீரிலும் வாழக்கூடிய தன்மையுடைய தவளைகள் குறைந்து போனதே, கொசுக்கள் பெருகுவதற்கு காரணம். தண்ணீர் தேங்கும் இடங்களில் தான் கொசுக்கள் முட்டையிடும் அவற்றை தலைப்பிரட்டைகள் தின்றுவிடும். கொசுக்கள் பிறப்பதற்கு முன்பே அவற்றின் கருவை அழிக்கும் தவளைகள், ஏறக்குறைய அழிவின் விளிம்பில் நிற்கின்றன.
இப்பவாவது இயற்கையின் சமன்படுத்தும் கணக்கை உணர்ந்துகொள் வேண்டும்...

கம்பளி புழுக்களைப்பார்த்தால் பலர் அருவருப்படைவார்கள் அந்தகம்பளிப் புழுக்காள்தான் நம் மனதைக்கவரும் அழகான வண்ணத்துப்பூச்சிகளாகிறது!..
வண்ணத்துப்பூச்சிகள் இல்லையென்றால் பலதாவரங்களில் மகரந்தச்சேர்க்கை இல்லாமல் முற்றாக அழிந்துவிடும் பிறகு? பலநோய்களுக்கு மருந்தே இல்லாமல் ஆகிவிடும்...

பூமி நாளுக்குநாள் வெப்பமாகிக்கொண்டே செல்கிறது இதேநிலை தொடர்ந்தால் கங்கைகூட வற்றிப்போகும் காலம்வரும்....

இதற்கெல்லாம்காரணம் இயற்கையை புரிந்துகொள்ளாமல்
எதிர்காலத்தில் ஏற்படும் விபரீதத்தை பற்றி சிரிதும் எண்ணாமல்
இந்தமண்ணிலுள்ள பல இயற்கைக்காடுகளை அழித்ததுதான் முக்கிய காரணம்...

மீண்டும் நினைவில்கொள்வோம்
"மனிதன் உணவிற்காக இயற்கையை அழித்தது கொஞ்சம்தான் தன்ஆடம்பரத்திற்காக அழித்ததே அழித்துக்கொண்டிருப்பதே மிக மிக அதிகம்"...

மனிதனைத்தவிர எந்த உயிரினமும் இந்தப்பாதகத்தைச் செய்வதில்லை...

இயற்கை ஒருகட்டத்தில் தன்னை சரிசெய்துவிடும் ஆனால் மனிதஇனம் அப்போது பூண்டோடு அழிந்திருக்கும்!...

டினோசர் உட்பட சிறியதும் பெரியதுமான பல உயிரினங்கள் இந்தப்பூமியில் வேரற்றுப்போனதே அதற்குச்சாட்சி...

குழந்தைகளுக்கு எதைச்சொல்லி வளர்க்கிறீர்களோ அவர்கள் அதன்மீது ஆர்வமாகி விடுவார்கள்....
இயற்கயை அதை பேணவேண்டியதன் அவசியத்தை சொல்லிக்கொடுங்கள்...

வாழ்கைக்கு " பணம்"-மிக மிக அவசியம்
ஆனால் ஒரு கட்டத்தில் அதைக்கொடுப்பற்கும்,வாங்குவதற்கும் ஒருவரும் இருக்கமாட்டார்கள்
இந்தப்பூமியில்!...

இந்த பூமியை காப்பாற்றுமளவிற்கு மனிதனுக்கு தகுதியோ திறமையோ இல்லை...
நம்மைக்காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது இயற்கையை இனி சீண்டாமல் இருப்போம்...

இதற்கு மேலும் வெப்பநிலை அதிகரிக்காமல் இருக்கவும்,காற்றைச் சலவை செய்யவும்,மழையைப் பெறவும் இருக்கிற மரங்களையாவது வெட்டாமல் இருப்போம்...

குழந்தைகளின் மனதிலும் இம் மண்ணிலும் எதைவிதைக்கிறோமோ

அதுதான் முளைக்கும்...
மண்ணில் கூட நாம் விதைக்க முயற்சிக்கக்கூட அவசியமில்லை இயல்பாக விட்டால் பறவைகளே அதைப்பார்த்துக் கொள்ளும்....

நம்ஓட்டத்தைக் கொஞ்சம் குறைத்து சுற்றுப்புறத்தை சற்று உற்றுக்கவனித்தால்,இயற்கை நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கும்,நம்மைச்
சுற்றி இருக்கும் பறவைகளையும்,விலங்குகளையும்,தாவரங்களையும் கவனியுங்கள்.அவற்றின் பெயர்களும் இயல்பும் வாழ்க்கைமுறையும் மிக அழகானவை....
அவை நம்மிடம் பலவற்றைச் சொல்லும் கவனியுங்கள்...

இயற்கையை அல்ல நம்மைக் காத்துக்கொள்ளவாவது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்...

சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

Sunday, 19 March 2017

பைலக்குப்பே



"பைலக்குப்பே" - அய்யோ என்னத் தப்பா நெனச்சுக்காதீங்க...
சொன்னா நம்புங்க இது ஒரு ஒரு ஊரின் பெயர் இது வேற எங்கயும் இல்லே நம்ம மைசூருக்கு அருகே உள்ள கூர்க் பகுதியில்உள்ள நகரமான குஷால்நகர் க்கு ஆறு கிமீ தொலைவில்உள்ள ஊர்தான் "பைலக்குப்பே"...

அங்க நுழஞ்சிட்டீங்கன்னா உங்களுக்கு இந்தியாவுக்குள்தான் இருக்கோமாங்கிற சந்தேகம் வந்திடும், என்னன்னா எங்க பார்த்தாலும் சின்னக்கண்களோடும் கொஞ்சம் அமுங்கின மூக்குகளோடும் இருக்கிற ஆட்களைத்தான் பார்க்க முடியும் இது சீனாவாங்கற மாதிரி இருக்கும்!....

ஆமாம் அங்கே இருப்பவர்களெல்லாம் இப்போதைய சீன-திபெத் பகுதியிலிருந்து வந்து இங்கேயே செட்டில் ஆனவங்க அவங்கள அகதிகள்னு சொன்னா நம்மூரில் பெரிய அரசியல் ஆகிவிடும்...



அங்கே இருக்கிற பெரிய தங்க புத்தர் கோவிலின் ஒரு பகுதிதான் இது பேரே "கோல்டன் டெம்பிள்"-னுதான் சொல்றாங்க...

இங்கே புத்த மதத்தைச் சொல்லிக்கொடுக்கிற பல்கலைக்கழகமே இருக்குதுன்னா பார்த்துக்குங்க. நம்ம இந்திய அரசு எவ்வளவோ வசதி அவர்களுக்காக செய்து கொடுத்துள்ளது கூடவே விவசாய நிலங்களும்...

இந்தியா முழுவதும் ஸ்வெட்டர் உட்பட உல்லன் துணிவகைகளை பெரிய அளவில் வியாபாரம் செய்வது இவர்கள்தான் சும்மா பறந்து பறந்து பலர் வியாபரம் செய்வது இவர்களிடம் சாதாரணம் (விமானத்தில்தான்) இந்தியாவிற்குள் ஒரு புது டிரென்ட் நுழைவது என்றால் முதலில் இவர்கள் மூலம்தான் அப்புறம்தான் நம்ம பசங்க ஜட்டிதெரிய பேன்ட் போடுவதும்,தலையை வித விதமாக மாற்றிக் கொள்வதும்...

இங்கு மட்டுமல்ல நமது தமிழக எல்லையான சத்தியமங்கலம் மலைக்கு அருகில் இருக்கும் உடையார்பாளையத்தில் கூட(தலாய்லாமா அடிக்கல் நட்டிய கோவில் என்பது குறுப்பிடத்தக்கது)இவர்களது புத்த விஹாரங்களும் இவர்களது குடியிருப்பும் உள்ளது.அதாவது திபெத் பகுதியில் இவர்களது வாழ்க்கைச்சூழல் எப்படியிருந்ததோ கிட்டத்தட்ட அதே வாழ்க்கைச் சூழலை அமைத்துக் கொடுத்து இருக்கிறது இந்த இந்திய அரசு....

ஆனால் இவர்கள் மிக நாணயமானவர்கள் என பலராலும் சொல்லப் படுகிறது...

இவர்கள் வாழ்க்கைத்தரம் எங்கோயோ போய்விட்டது விதவிதமான உயர் ரக கார்களைக் கூட இவர்களிடம் இங்கு பார்க்க முடியும்...

(இவர்களை அகதிகள் என்று தமிழர்கள் யாரும் நம்ப மாட்டார்கள். மண்டபத்திலுள்ள அகதிகள் முகாமிலுள்ளவர்களையும் இவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்து டென்சன் ஆனால் நான் பொறுப்பில்லை)

முன்பு இறந்தவர்களுடைய ஈமசடங்குகளில் புதைக்கவோ எரிக்கவோ செய்யாமல் உடல்களை சிறுசிறு துண்டங்களாக்கி பறவைகளுக்கு இரையாக கொடுக்கும் வழக்கம் இருந்தது. இங்கு அந்த சடங்குகள் இங்குள்ளவர்களுக்கு ஐயத்தை உண்டாக்கியதாலும் அரசு ஒப்புக் கொள்ளாத்தாலும் புதைக்கும் வழக்கத்தை கொண்டு வந்துவிட்டார்கள்.இமயத்தில் வசித்து வந்த்தால் குளிக்கும் பழக்ககமும் இல்லாமலிருந்தது.இப்போது மாற்றம் அடைந்துவிட்டார்கள்.என்றாலும் தென்னிந்திய மொழிகள் அவர்களுக்கு சரியாக உச்சரிக்க முடிவதில்லை என அவர்களுடன் பழகிய எமது நண்பர் கதிர்வேல்ராமசாமி சொல்கிறார்...

வாய்ப்பிருந்தால் சென்று வாருங்கள் பார்க்க வேண்டிய இடம்....

Saturday, 11 March 2017

குற்றம் செய்தது யார் ?...



மனதை விட்டு நீங்காமல் மனதை அரித்துக்கொண்டே இருக்கும் சம்பவங்கள் நமது வாழ்க்கையில் நடப்பது உண்டு.ஆனால் எங்கோ வெகுதொலைவில் பல நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இன்னும் மனதை ஏதோ செய்துகொண்டிருக்கிறது...

நம்ம பிரதமரோட சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள முக்கியமான மாவட்டம்தான் சூரத் இது ரொம்ப ஸ்பெஷல்  ஏனெனில் உலகிலுள்ள பெரிய நகரங்களின் பட்டியலில் சூரத் முப்பத்தி ஆறாவது இடத்தில் உள்ளது....

இந்த மாவட்டதில் உள்ள உமர்படா என்கிற தாலூக்காவில் வாடிஃபாலியா(Vadifaliya)கிராமத்தில் கடந்த வருடம் ஒரு புதன்கிழமை நாளில் (02/11/2016)அங்குள்ள மக்கள் ஒரு முக்கியமான காரியத்தை செய்திருக்கிறார்கள் அது என்னவென்று பார்ப்பதற்கு முன்னர் இந்த கிராமத்தைப்பற்றிப் பார்ப்போம்....

இந்த கிராமம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது அதாவது குஜராத் மாநில பழங்குடியின முன்னேற்றத்துறை அமைச்சர் கன்பத்வசாவாவின் சொந்தக் கிராமம் இது...

இந்த கிராமத்திலன் அருகே சில நாட்களாக உலாவிக் கொண்டு இருந்தது ஒரு சிறுத்தை....

அந்த சமயத்தில் அந்த கிராமத்திலுள்ள ஒரு எட்டு வயசு பெண்குழந்தையான நிகிதாவஷாவும் அவளுடைய தோழிகள் இரண்டுபேரும் இயற்கை உபாதையை கழிப்பதற்காக ஒதுங்கியிருக்கிறார்கள் அப்போது அங்குவந்த இந்தச் சிறுத்தை நிகிதாவஷாவை கவ்வித் தூக்கிச் சென்றுவிட்டது...

நிகிதாவின் கதி அதோகதி.இதைப்பார்த்த நிகிதாவின் சினேகிதிகள் கூச்சலிட்டு கிராம மக்களைக் கூட்டியிருக்கிறார்கள்...

கூடியமக்கள் செய்வதறியாது சிறுத்தையைத் துரத்திவிட்டதுடன் வனத்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.வனத்துறையும் பல இடங்களில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டினை வைத்திருக்கிறார்கள்....

அந்தக் கூண்டுகளில் ஒன்றில் சிறுத்தையும் மாட்டிவிட்டது அதைக்கண்ட கிராம மக்கள் வனத்துறயினர் வருவதற்குமுன்னரே  அந்த மக்கள் ஆவேசமாகவோ அல்லது மிகக் குரூரமாகவோ மண்ணெண்ணையை கூண்டிற்குள் ஊற்றி அந்தச் சிறுத்தையை கூண்டோடு தீயைவைத்துக் கொளுத்திவிட்டார்கள். முடிந்தது அந்தச் சிறுத்தையின் உயிர்....


இதன் பின்னர் இந்தசம்பவம் குறித்து வனத்துறையினர் குற்றத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்...



இந்த சம்பவத்தில் தவறை இழைத்தது யார்
அந்தச் சிறுமியா?...
இல்லை அந்தப் சிறுத்தையா?...
இல்லை ஊர் மக்களா?....
இல்லை வனத்துறையா?....



மாற்றங்களை எப்படி
ஏற்படுத்துவது ?...




சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

Friday, 10 March 2017

காட்டுப் பன்றி வனத்தின் உழவன்...

காட்டுப் பன்றி(Wild boar)

எறுழி,ஏனம் என்கிற பெயர்கள் பழந்தமிழில் காட்டுப்பன்றிக்கு வழங்கிய பெயர்கள்...
பருவத்தில் பன்றிகூட அழகு என்பார்கள் பருவத்தில் மட்டுமல்ல என்றுமே அவை அழகுதான் நாம் கவனிக்கும் விதத்தில்தான் இருக்கிறது.

"ஆனாலும்கூட யாராலும் கவனிக்கப்படாமலேயே இந்தப்பன்றிகள் உள்ளன.வன உயிரின ஆர்வலர்கள் கூட இவற்றை பெரிய அளவில் கண்டுகொள்ளாதது ஏன் எனப் புரியவில்லை"
-அதற்கு ஸ்டார் அந்தஸ்து கிடைக்காததற்கு அதன்உருவமைப்பு காரணமா அல்லது அவற்றின் செயலா ?...



காட்டுப்பன்றியானது வளர்ப்புப்பன்றிகளின் முன்னோடியாகும் ஆனாலும் உருவ அமைப்பில் இரண்டிற்கும் வேறுபாடுகளுண்டு,காட்டுப்பன்றியின் தலை பெரியதாகவும் உடலும் கால்களும் சிறிதாகவும் இருக்கும்.
வளர்ந்த ஆண்பன்றியின் மேல்தாடையின் கோரைப்பல்லானது பனிரெண்டு செ.மீ வரை காணப்பட்டாலும் அதன் வாழ்வின் இறுதிக்காலம் வரை வளர்ந்துகொண்டே இருக்கும்.மொத்த பன்றிகூட்டத்தையும் மூத்த பெண்பன்றியே வழிநடத்தும்...

இவை ஓர் அனைத்துண்ணி பொதுவாக நிலத்தைக்கிளறி கிழங்குவகைகளைத் தேடி உண்ணும் அதனால் கானகத்தின் உழவன் என்றும் இதைச்சொல்வார்கள்...
சுமார் பத்து செ.மீ வரை ஆழமாகவும்,நிலத்திலுள்ள ஐம்பது கிலோ எடைவரையியிலான கற்களை மேலே புரட்டிப்போடும் அளவிற்கு வலிமையுடையது,இப்படி நிலத்தை உழுவதால் மழைநீர் நிலத்தினுள் செல்லவும் பறவைகளின் எச்சம் மூலம் கீழே கிடக்கும் விதைகள் முளைக்கவும் செய்து காடுவளர்ப்பில் பன்றிகள் பேருதவி செய்கின்றன...



மற்ற விலங்குகள் அடித்துத் தின்ற மாமிச மிச்சங்களையும் தின்று காட்டை சுத்தப்படுத்துவதில் கழுகளுக்கு இணையாக காட்டும் பன்றிகளும் பணிசெய்கிறது...

ஆண்டிற்கு இருபது குட்டிகள் வரை போடும் பன்றிகள் காட்டிலுள்ள மாமிச உண்ணிகளான புலி,சிறுத்தை மற்றும் செந்நாய்களுக்கு உணவாகிறது.புலியே மிகுந்த எச்சரிக்கையுடன் தான் வேட்டையாடும் ஏனெனில் அவ்வளவுவலிமையும் திருப்பித்தாக்கும் வேகமான குணமும் உடையது...

அடிக்கடி மனித காட்டுப்பன்றி மோதல்கள்கூட நடந்துகொண்டுதான் இருக்கிறது.அவை நம்வாழிடத்திற்கு வரவில்லை நாம்தான் கொஞ்சம் கொஞ்சமாக அவைகளின் இடத்தில் வீடு,தொழிற்சாலை விவசாயத்திற்காக நிலத்தை விரிவாக்கி பயன்படுத்தியதால் அவற்றின் வாழிட எல்லை சுருங்கிவிட்டது...

அதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கும் குடியிருப்பு பகுதிக்குள்ளும் காட்டுப்பன்றிக்கள் வந்துவிடுவாதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன.அவற்றிற்கு விவசாயநிலத்தையும் வனப்பகுதியையும் பிரித்து அறியத் தெரியாது. ஊரிற்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன என்கிற பலி வேறு உண்மையில் அவற்றின் இடத்தை தவணைமுறையில் ஆக்கரமித்து நாம்தான் அட்டகாசம் செய்துவிட்டோம்...

அதன் தொடர்ச்சியாக வன எல்லைப் பகுதிகளில் விவசாய நிலத்தைப் பாதுகாக்கவும் உணவுவேட்டைக்காகவும் அதிக அளவில் வனப்பன்றிகள் கொல்லப்படுகின்றன...



பன்றிகள் கொல்லப்படுவதில் பலமுறைகளைக் கையாள்கிறார்கள் கள்ளத்துப்பாக்கி கொண்டும் சுருக்கு கம்பிகளில் சுருக்குவைத்தும் கொல்லுகிறார்கள், சில இடங்களில் வித்தியாசமாக ஆட்டுக்குடல்களை சிறிய துண்டுகளாக வெட்டி அதற்குள் வெடிமருந்தை வைத்து முடிச்சுபோட்டு பன்றிவரும் இடங்களில் போட்டுவிடுவார்கள் நமது பன்றியார் ஆர்வம் மிகுதியால் வாயில் கடித்தவுடன் வெடித்து வாய் பிளந்து செத்துவிடுவார் என்ன கொடுமைசார் இது?...

இப்படியே போனால் பன்றிகள் குறையும்,பன்றிகளால் காடுவளர்ப்பின் பங்கு குறைவதோடு அவற்றை உண்டுவாழும் ஊணுண்ணிகளும் ஏற்கனவே குறுகியகாட்டைவிட்டு குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் அது அவற்றிற்கும் நல்லதல்ல நமக்கும் நல்லதல்ல...

இனியாவது பன்றி என்றால் ஏளனமாகப் பார்க்கும் மனநிலையிலிருந்து விடுபடுவோம்...

என்ன செய்யலாம் சொல்லுங்கள்?
படிப்பவர்கள் கண்டிப்பாக பதிவிடுங்கள்...

சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram

படங்கள்,
Divya Barathi Ramamurthi.

மக்னா என்கிற, "மோல யானை"

"மோல யானை"



காடுவாழ் மக்கள் இந்த யானையை இந்தப் பெயரில்தான் குறிப்பிடுவார்கள்.
கிராமப் புறங்களில் கூட கொம்புகளற்ற ஆட்டை மோலையாடு எனவும்,கொம்புகளற்ற  மாட்டை மோலை என்பதைக் கவனிக்கலாம்.அப்படிப்பட்ட மோலையானையை நாமெல்லாம் சொல்வது "மக்னா"
அது என்ன மக்னா மற்றும் மோல யானை?

மேல்தாடை பற்களின் நீட்சியே தந்தம்( ஹிந்தியில் தந்த் என்றால் பல்) தந்தம் பலவித்த்தில் யானைக்கு பயனாய் இருக்கிறது. இந்த தந்தமில்லாது குறைபாட்டுடன் பிறக்கும் ஆண்யானையே
மக்னாவாகிறது...
தந்தமில்லாத நிலையில் இருக்கும் இவற்றை எந்தக்கூட்டத்திலும் சேர்த்துக் கொள்ளாத்தால் இவை மிக மூர்க்கத்தனத்தோடு இருந்து மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் ஏற்பட அவற்றின் மனஅழுத்தமே காரணமாகிறது...



ஆண்யானை என்றாலே அதன் கம்பீரமான தந்தம்தான் முதலில் நமக்கு நினைவில் வரும் ஆனால் அந்த தந்தமற்றுப் பிறப்பதினாலேயே இவைகளின் நிலை மிகப் பரிதாபமாகிவிடுகிறது...

பலமுள்ள ஆண்யானைகளே பெண்யானைகளோடு இணைசேரமுடியும் பலத்தைக்காட்ட போட்டியாளர்களுடன் சண்டையிட்டுத்தான் ஆகவேண்டும் போட்டியில் வெல்ல தந்தம் மிக முக்கிய ஆயுதம். நிராயுதபாணியான மோலயானைகள் எல்லாக்கூட்டங்களிலும் விலக்கியே வைக்கப்படுகின்றன. எப்படிப்பட்ட மக்னாவானாலும் அவை தனித்தே வாழும் வருந்தத்தக்க சூழல்...



இங்கே இப்படியிருக்க,
தந்தவேட்டையில் உச்சத்தில் இருக்கும் ஆப்பிரிக்காவில் இருபால் யானைகளுக்கும் தந்தமுள்ளதால் வேட்டையாடிகளுக்கு மிகவும் நல்லவாய்ப்பு.தன்இனத்தை இந்தபூமியில் தக்கவைத்துக் கொள்வதற்காக, அங்குள்ள யானைகளுக்கு தந்தமற்றபண்பு மேலோங்கி வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன இது நமக்கெல்லாம் மிக வியப்பான செய்திதான்...

ஆனால் ஆசிய உள்ளினமான இலங்கை யானைகளில் பெரும்பாலான ஆண்யானைகளுக்கு தந்தம்இல்லை இது பலகாலமாக தொடருவதாகத்தான் இருக்கிறது...
இப்பண்பானது மற்றகுழு யானைகளுடனான கலப்பில்லாமல் இருந்ததினால் வளர்ந்திருக்கலாம்...

இந்தப் படங்களிலுள்ள மோலை பந்திப்பூர் காட்டில் எங்களை எந்தவிதமான அச்சுறுத்தலும் செய்யாது ஓரக்கண்களால் பார்த்துக்கொண்டே நீர்க்குளியலையும் மண்குளியலையும் நடத்திமுடித்து கொஞ்சநேரம் கரையோரமுள்ள புற்களை மேய்ந்துவிட்டு மிகமிக அமைதியாகவே சென்றது...



யானைகளைப்பொறுத்தவரை மனிதர்களுடன் இணக்கமாகவே இருக்க விரும்புகின்றன ஆனால் நாம் செய்யும் சூழல் சீர்கேடுகளாலேயே அவை மிகுந்த பாதிப்புக்குள்ளாகி சில இடங்களில் யானை மனித மோதல்கள் உருவாகின்றன...

காடுகள் வழியே செல்லும்போதாவது யானைகளுக்கு மிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்,பாலிதீன்  பேப்பர்கள் மற்றும் கண்ணாடிபாட்டில்களையும் மற்ற குப்பைகளையும் தவிர்போம். நெருப்பைஉண்டாக்கும் செயல்களைத்தடுப்போம்,தவிர்ப்போம்.  கண்ணாடிப் பாட்டில்கள் யானைகளுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கி உயிரிழப்புவரை கொண்டு செல்ல முடியும். அப்படி இவற்றைத் தவிர்க்கவே முடியாவிட்டால் கழிவுகளாக அங்கேயே போடாமல் நம்முடனேயே எடுத்துக்கொண்டாவது வருவோம்...
"பல்லுயிர்ச் சூழல் காப்போம்"

சூழலியல் ஆர்வத்துடன்...
Ramamurthi Ram
படங்கள்:
Divya Barathi Ramamurthi

Thursday, 9 March 2017

இருவாச்சி காவியம்...




இது இருவாச்சி காவியம்...

பாசக்காரப் பறவை!..

பறவைகளில் என்னைக் கவர்ந்த
இருவாய்ப் பறவை
என்கிற இருவாச்சி...
Great Indian hornbill (Buceros bicornis)

இவற்றில் மொத்தம்52 உள்ளினங்கள் உலகளவில் சுமார் ஒன்னரை கோடிஆண்டுகளாக வாழ்கின்றன...

இவற்றில் மலைஇருவாச்சி யைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
இது மலைமொங்கன்,
மலைமுழக்கி,
மரத்தலையன்,
இருதலையன்,
இருதலைப்பட்சி...
எனப்பல பெயர்களில் அழைக்கப்படும், மஞ்சள், வெள்ளை, கருப்பு வண்ணங்களில் நீண்ட அலகுகள் மற்றும் இறகுகளுடன் பார்க்க ஓரளவு பெரிய உருவம் கொண்டவை இந்தப் பறவைகள். இதன் இறகுகளுக்கு சர்வதேச கடத்தல் சந்தையில் பெரும் மதிப்பு உண்டு. இந்தியாவில் இவை பெரும்பாலும் வேட்டையாடப்பட்டுவிட்டன. அதனால், அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தப் பறவைகள், அழியும் ஆபத்திலுள்ள உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.



இவற்றில் 44 உள்ளினங்கள் மிகுந்த
அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் இருக்கிறது...

இதில் இந்தியாவில் ஒன்பது இனங்களே இருக்கிறது
தென்னிந்தியாவில் 4 வகை இருவாச்சி இனங்கள் உள்ளன...

கேரளாவில்லும் அருணாச்சலப்பிரதேசத்திலும்  இருவாச்சியை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் நான்கு வகை இருவாச்சிப் பறவைகள் உள்ளன.

அவை, பெரும்பாத இருவாச்சி, மலபார் இருவாச்சி, சாம்பல் நிற இருவாச்சி, மலபார்பாத இருவாச்சி. இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுபவை. இதில் அந்தமான் தீவுகளில் காணப்படும் நார்கொண்டான் இருவாச்சி, மிகவும் அரிதான இருவாச்சி பறவையாக கண்டறியப்படுகிறது.

இருவாச்சிப் பறவையின் இனப்பெருக்க காலம் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையாகும்.



இவை அஞ்சக்கூடிய அளவில் அழியும் நிலையில் இருக்கின்றன,இவைகள் முற்றிலும் அழிந்துவிட்டால் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள மழைக்காடுகளில் மட்டும் சுமார் பத்துவகை மரங்கள் அழிந்துவிடும் என இயற்கை ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள். ஏனெனில் இவற்றின் எச்சம் மூலம்மட்டுமே இவ்வகை மரங்கள் முளைக்கும்திறனைப் பெறுகின்றன...



இவற்றில் நான் இதுவரை மூன்று இனங்களை மட்டும் பார்த்துள்ளேன் அவற்றில் என்னை மிகவும் ஈர்த்ததும் முதல்முறையாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் நான் பார்த்ததும் இதைத்தான் அதுதான் நம்ம மலைஇருவாச்சி (great indian hornbill)

எனக்குமட்டும் அல்ல இதை யார் பார்த்தாலும் அப்போதிருந்து இந்தப் பறவையை அனைவருக்கும் பிடித்துவிடும் காலகாலமாக இதுதான் நடந்துவந்துள்ளது...

அழகு,வியப்பு,ஆச்சரியம் கலந்த கலவைதான் இருவாச்சி...

எத்தனைநாட்கள் எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆவலைத் தூண்டுபவைதான்
இந்த இருவாய்ப் பறவை...

இதன் அழகான அலகும், சிறகும்தான் இதற்கு எதிரியாகி அவற்றிற்காக,
கடந்த பல்லாண்டுகாலமாக மனிதன் கொன்று வெகுவாக ஒழித்துவிட்டான்....

இவற்றை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்..
இதை அனைவருக்கும் உணரவைப்போம்...

இதன் வாழ்க்கை மிகுந்த ஆவலைத் தூண்டக்கூடியது
இதன் வாழ்வில் ஒருமுறை இணைசேர்ந்தால் அந்தஜோடி வாழ்நாள்முழுவதும் பிரியாது!...

இணைசேர்ந்தபின் முட்டையிடுவதற்கு தகுந்த இடத்தைத்தேடும்,மிக உயரமான மரத்திலுள்ள பொந்தையே தேர்வு செய்யும் ...

பொந்தினுள் சென்ற பெண்பறவை ஒன்றிலிருந்து மூன்றுமுட்டைகள் வரை இடும்
பொரிக்கும் குஞ்சுகளுக்கு மெத்தென்றிருக்கும் படுக்கையைத்தாயார் செய்ய பெண்தனது இற்கைகளை உதிர்த்து படுக்கைஅமைக்குமாம்...

ஆண் ஆற்றுப்படுகையிலுள்ள மண்ணை எடுத்துவந்து தமதுஎச்சிலோடு சேர்த்து உணவளிக்க மட்டும் சிறிய துவாரத்தை விட்டு சுவர்வைத்து மூடிவிடும்!..

சுவாரனது விசத்தன்மையுடன் இருக்குமாம்,பாம்புகள்கூட நெருங்க முடியாதுஏனெனில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்புத்தன்மையை இயற்கை அதற்கு கொடுத்திருக்கிறது.
(இத்தகவல் உதவி சோலையார் தொல்குடி நண்பர் ராஜ்குமார்)

ஆண்கூட்டிலிருக்கும் இணைக்கும்,குஞ்சுகளுக்கும் சத்துநிறைந்த பழங்கள்,கொட்டைகள்,சிறிய வகை ஊர்வன சமயத்தில் சிறுபறவைகளைக் கூட கொண்டுவந்து தரும்.வெகுநாட்கள் இதைப் பழஉண்ணி என எண்ணியிருந்தனர்..

இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவெனில் உணவுதேடச்செல்லும் ஆண்இருவாச்சியானது வேட்டையினாலோ இதரகாணங்களாலோ உயிரிழந்து,கூட்டிற்கு திரும்பவில்லையெனில் மொத்த குடும்பமும் அழிந்துவிடும்.பெண்
இறக்கையற்ற நிலையியில் எப்படிப் பறக்கும்?...

இவை பறக்கும்போது ஹெலிக்காப்டர் பறப்பதைப்போன்ற சத்தத்தைக்கேட்கலாம்,
இதன்அலகின் மேல் பகுதியில் அமைந்துள்ள மற்றொறு அடுக்கானது(casque) இதற்கு மேலும் ஒருவாய்ப்பகுதி உள்ளதுபோன்று தோன்றும் அதனாலேயே இதற்கு இரண்டுவாயுடையபறவை அதாவது இருவாய்ப்பறவை என பெயர்பெற்றது....

இதன் உணவில் தவறிவிழுந்த ஒரு வகைகொட்டையில் பாதியை தின்றுபார்த்தேன் சற்றுபோதை தரும்தன்மையுடன் இருந்தது பிறகுதான் அந்த ஆதிகுடி நண்பர் அந்தக்கொட்டை நச்சுத்தன்மையுடையது எனக்கூறினார்,
அந்த நச்சுத்தன்மையே கூட்டின் பாதுகாப்பிற்கு வழிசெய்யுமோ என எண்ணினேன்...



அந்தகொட்டையை தொல்குடிகள் போதை இன்பத்திற்காக பயன்படுத்துவதாக கூடுதல் தகவலையும் தந்தார்!...
(யாரும் கிளம்பிடாதீங்க எவ்வளவு பயன்படுத்தவேண்டும் என்கிற நுண்ணறிவு அவர்களுக்குத்தான் தெரியும்)

இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் எல்லாவிதமான அறிவையும் தந்திருக்கிறது...நாம்தான் பலவற்றை உணர்வதில்லை!..

இந்தவகைப் பறவைகள் ஒருகாட்டில் இருந்தால் அந்தக்காடானது இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என உணரலாம்...

இந்த அக்டோபர் முதல் வாரத்தில் கடைபிடிக்கப்படும் வன உயிரின பாதுகாப்பு வாரம் மட்டுமல்லாது அன்றாடம் அனைத்து நாட்களையுமே வன உயிரின பாதுகாப்பு நாளாக கருதி வனவளம் உயிர்வளம் காப்போம்...

நாம் இல்லையெனில் விலங்குகள், பறவைகள் நலமாக வாழ்ந்திடும். அவை இல்லையெனில் நாம் ஒருநாளும் ஒரு நிமிடங்கூட வாழ முடியாதென்பதே உண்மை...

(இந்தப் படங்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையில் எடுத்தவை)

சூழலியல் ஆர்வத்துடன்,
Ramamurthi Ram
படங்கள்,
Divya Barathi Ramamurthi.

https://m.facebook.com/story.php?story_fbid=1060376700745031&id=100003181323647

பலியான புலி...

எது இனி நடக்கவே கூடாது என நினைத்தோமோ அது நடந்தேவிட்டது...



சிறுத்தைக்கொலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் சத்தம் ஓயவே இல்லை அதற்குள் ஒருபுலி கொல்லப்பட்டுவிட்டது...



அதுவும் சிறுத்தைச் சம்பவத்தைப் போலவே வனத்துறையினர் முன்பாகவே நடந்திருக்கிறது என்பதை அறியும்போது வனவிலங்களை நினைத்து வருத்தப்படுவதா ?
பரிதாபப் படுவதா ?
அதிகாரிகள்மீது கோபப் படுவதா ?
மக்களின் அறியாமையை எண்ணி எண்ணி சிரிப்பதா?
என்ன செய்வது ?...



அந்த வேதனைச் சம்பவம் கடந்த வியாழன்ன்று(24.11.16) வடகிழக்கு மாநிலமான அஸாமின் ஜோஹட் மாவட்டத்தலை நகரிற்கு அருகிலேயே அதாவது ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள பக்மாரா பகுதியிலுள்ள சந்த்பார் கிராமத்தில் நடந்திருக்கிறது....

முழுவளர்ச்சியடைந்த ராயல்பெங்கால் பெண்புலி காஸிரங்கா வனப்பகுதியிலிருந்து வழிதவறியோ அல்லது இரைதேடியோ பிரம்மபுத்திராவின் தேன்கரையிலுள்ள இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறது புலிநடமாட்டம் பற்றி வனத்துறைக்கு தகவல்கூட சென்றதாகத் தெரிகிறது.வட இந்தியாவில் இருக்கும் வழக்கம்போல் வனத்துறையும் வேலை செய்திருக்கிறது....

பிறகென்ன வனத்துறையை வைத்துக்கொண்டே புலியைக்கொன்று பல்,நகம்,வாலையும் இன்னும் சில பாகங்களையும் வெட்டித் தூக்கிச் சென்று விட்டனர்...

மக்கள் மிரட்டினார்களாம் வனத்துறையினர் பேசாமல் இருந்து விட்டார்களாம்.....
என்னதான் நடக்கிறது அங்கே?
இருண்ட இடங்களா அவை ?

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இன்னும் சில ஆண்டுகளில் புலி,சிறுத்தை மற்றும் யானைகளைப் பார்க்க வட இந்தியாவிலிருந்து கூட்டம் கூட்டமாக இங்கே வரப்போகிறார்கள்....

அரசு....
உயிரின ஆர்வலர்கள்...
சட்டம்...
இவையெல்லாம்அங்கும் இருக்கிறதா?....

"தி டைம்ஸ் தமிழ்" இணைய இதழில் எமது  பதிவின் இணைப்பு:
 https://thetimestamil.com/2016/11/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/

Tuesday, 7 March 2017

சோலைமந்திகளின் இன்றைய நிலை...

"மனிதன் மாற்றிவிட்டான்....
மரத்திலிருந்து இறக்கிவிட்டான்"

ஒருகாலத்தில் மேற்குதொடர்ச்சி மலை முழுவதுமே பரவி வாழ்ந்த ஒரு குரங்கினம் இன்று சில இடங்களில் மட்டுமே தமது வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது...

சங்ககாலத்தில் நரைமுக ஊகம் என்றழைக்கப்பட்ட இன்றுபரவலாக  அதன் வாலின் அமைப்பை குறிக்கும் வகையில் சிங்கவால் குரங்கு என அதன் ஆங்கிலபெயரான Lion tailed  macaque லிருந்து நேரடியாக மொழிபெயர்த்து சிங்கவால் குரங்கென அழைக்கப்படுகிறது...

இவை மழைக்காடுகளான அடர்ந்த சோலைக்காடுகளில் வாழ்வதால் தமிழில் இவற்றிற்கு அழகாக சோலைமந்தி என்கிற பெயர் உண்டு....

இந்த சோலைமந்திகள் உயர்ந்த மரச்சிவிகைகளில்(canoby)மட்டுமே வாழும் தன்மையைக் கொண்டவை.அரிதாகவே கீழே இறங்கிவருபவை ஆனால் இன்று இவற்றின் வாழ்க்கைநிலை குறிப்பாக வால்பாறைபகுதிகளில் மிக மோசமாகி விட்டது....

ஆங்கிலேயர்கள் வருகைக்குமுன்புவரை இன்றைய  கோவா மகாராஸ்டிரா வரை மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் வாழ்ந்த இவை காபி, தேயிலை,தேக்கு போன்றவை பயிரிட ஆரம்பித்தபின் மழைக்காடுகளான சோலைக்காடுகளை அழித்தன் விளைவாக  இவை வாழத்தகுந்த இடங்கள் வெகுவாகச் சுருங்கிவிட்டது பிரச்சனை சோலைமந்திகளுக்கு மட்டுமில்லை சோலைக்காடுகள் அழிக்கப்பட்தால் இன்று பல ஆறுகள் காணமலேயே போய்விட்டதுதான் வேதனை...

இன்றைய நிலையில் மிக அழிவுநிலையிலான அரிதான எண்ணிக்கையில்,தமிழ் நாடு,கேரள,கர்நாடகப் பகுகளில் சில இடங்களில் மட்டுமே  காணப்படுகிறது...



மரத்திற்குமரம் தாவுவதில் சிறப்பான திறமையுடைய இவை சாலைகள் விரிவாக்கத்தினால் மரங்கள் அழிக்கப் பட்டதால் சாலையின் மறுபுறம் செல்ல மரத்தைவிட்டு இறங்கிவரவேண்டிய சூழல் உண்டாகிவிட்டது அதனால் பலவகைகளில் மனிதர்களால் அவற்றின் குண இயல்புகள் மாற்றப்பட்டுவிட்டது...

கடந்த வாரம் வால்பாறை சென்றபோது அவைகளின் பரிதாபான மாற்றம் குறித்து மிக வேதனையே உண்டானது அந்த இடங்களில் வாகனங்கள் மெதுவாகமட்டுமே செல்ல வேண்டும். அப்படி மெதுவாகச் செல்லும் வாகனங்கள்மீது பாய்ந்து ஏறிவிடுகிறது ஏதாவது கொடுப்பார்களா எனப் பார்க்கிறது அந்த வழியே செல்லும் பலர் அவற்றிற்கு பிஸ்கட்,பஜ்ஜி,வடை போன்ற தினபண்டங்களை கொடுப்பதை வழக்கமாகவே வைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது....

மிக மிக கூச்ச சுபாவமுடைய இவை அதுவும் மனிதர்களைக்கண்டால் விலகியே இருக்கும் இவற்றின் குணம் மனிதர்களால் மனிதனிடம் கையேந்தி பிச்சையெடுக்கவும் சில நேரங்களில் மனிதனிடம் வழிப்பறி செய்யுமளவிற்கும் மாற்றப்பட்டுவிட்டது...

நாங்கள் இருந்த கொஞ்ச நேரத்திலும் பலர்வீசியெரிந்ததை அவர்களிடமே எடுத்துக்கொடுத்து மனிதர் கொடுக்கும் உணவுகளால் அவற்றிற்கு உடல்நல பாதிப்பு உண்டாவதுபற்றியும் உணவைஎதிர்பார்த்து அவை சாலைகளிலேயே இருப்பதால் சாலை விபத்துகள் ஏற்பட்டு அவற்றிற்கு கைகால்கள் வாலை இழந்துவிடும் சில நேரங்களில் உயிரிழப்புகூட ஏற்பட்டு விடும் என்பதுபற்றியும் சொன்னோம் பலர் உணர்ந்துபுரிந்து தவறிற்கு வருந்தினர்...

அதேநேரத்தில் வனத்துறையும் தன்னார்வலர்களும் இவ்வாறு நடக்காமலிருக்க இடைவிடாது பணியாற்றுவது மிகுந்த பாராட்டிற்கு உரியது. இருப்பினும் விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் ஓரிருவர்மட்டுமே அனைவரையும் தடுத்து அனுப்புவது மிகச் சிரமமே...

இப்போது பல நேரங்களில் வால்பாறை நகருக்குள்ளும் வீடுகள்நோக்கி உணவிற்காக வருவதை பார்த்ததுதான் மிக வேதனை அங்குள்ள குப்பைத்தொட்டிகளிலும் உணவைத் தேடுவதைப் பார்க்க முடிந்தது....

இவ்வாறெல்லாம் நடக்க அவை விரும்பி உண்ணும் குரங்குபலா போன்ற மரங்கள் வெகுவாக வெட்டியழிக்கப் பட்டதுகூட காரணமாகச் சொல்லப் படுகிறது...

எது எப்படியிருப்பினும் இவற்றின் நிலைகண்டு வேதனைதான் மிஞ்சியது..

சூழலியல் தேடலுடன்,
Ramamurthi Ram
படங்கள்,
Divya Barathi Ramamurthi

எமது முகநூல் பதிவின் இணைப்பு:
https://m.facebook.com/story.php?story_fbid=1119794744803226&id=100003181323647

Monday, 6 March 2017

இவள் மச்சலி...



இவள் பெயர்பெற்ற வங்கப்புலி.இவள்தான்
மச்சலி (machali) இந்தியாவின் ரான்தன்பூர் தேசிய பூங்காவில்வாழ்ந்த "வாழ்நாள் சாதனையாளர் விருது" பெற்றவள்...



1997 ஆம் ஆண்டுவாக்கில் பிறந்த இந்த மச்சலி அதன்பின் வந்த நாட்களில் ரத்னம்பூர் ஏரிக்கரையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டாள்...

அதன்பின்னர் இன்றுவரை அவள்தான் அங்கு ராணியாக இருந்தாள். மச்சலியின் ரசிகர்கள்  அவளைச் செல்லமாக "ஏரியின் பெண்மணி" என்கின்றனர்... 

அங்கு வங்கப்புலிகளின் எண்ணிக்கையை உயர்த்தியதில் இவள்பங்கு மகத்தானது....

தன் குட்டிகளைக்காக ஏரியில் உள்ள முதலைகளுடன் பல முறை சண்டையிட்டு இதுவரை மூன்று முதலைகளைக் கொன்றிருக்கிறாள் மச்சலி.பற்களை இழந்த நிலையிலும் மச்சலி குட்டிகளை ஈன்று அவன்றை நன்கு வளர்த்தியிருக்கிறாள்...

பொதுவாக காட்டில் வாரும் புலிகள் சுமாராக அதிகபட்சமாக பதினைந்து ஆண்டுகாலமே வாழக்கூடிய நிலையில் இவள் சுமார் இருபது ஆண்டு காலம் வாழ்ந்தது கூடச் சாதனைதான்.உலகிலேயே அதிக அளவில் படம்பிடிக்கப்பட்ட புலியழகியும் இவள்தான்...

இந்த அற்புதப் பெண்மணி நம்மிடையே இன்றைக்கு இல்லை...



ஆமாம் இன்று(18oct2016) காலை 10மணியளவில் உயிரை விட்டு நம்மிடமிருந்து சென்றுவிட்டாள்....

மற்றுமொரு சிறப்பாக இந்தியாவில் வாழும் சிறந்த  குடிமகனுக்குகூட கிடைக்காத ஒருதேசத் தலைவருக்கு ஒப்பான மரியாதை, இவளின் சாவின் இறுதிச் சடங்கில் கிடைத்திருக்கிறதென்றால் இவள் புகழையும் பெயரையும் இனி இந்த உலகம் உணரும்....



அவளது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்...

சூழலியல் ஆர்வத்துடன்,
Ramamurthi Ram




யார் பறவை மனிதர்?

"மனிதர்கள் மட்டும்தான் இயற்கையிடமிருந்து நேரடியாக  உணவு தேடிடும் இயல்பை இழந்து நிற்கிறோம்" -------------------------------------...