ஊடகத்துறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.வனவிலங்குகள் ஒருபோதும் அட்டகாசம் செய்வதில்லை அவற்றின் வாழிடத்தில் சிக்கலை ஏற்படுத்தி நாம்தான் அட்டகாசம் செய்து வருகிறோம்.அவைகள் அட்டகாசம் செய்ய ஆரம்பித்தால் உலக உயிர்கள் அனைத்தும் அழிவதற்கான வாய்ப்பாய் அமைந்திடும்....(உண்மையிலேயே அவை அட்டகாசம் செய்ய ஆரம்பித்தால் நாம் சும்மா இருப்போமா? நாம்தான் இந்த உலகையே அழிக்குமளவு ஆயுதங்கள் வைத்திருக்கிறோமே.அனைத்தையும் அழிப்போம் விலங்குகள் பறவைகளை அழிப்போம் அதன் பின் காடுகளும் தாவரங்களும் அழியும் அனைத்தையும் அழித்துவிட்டால் நம்மை அழிக்க யாரும் தேவை இல்லை)
இந்தச் செய்தியில் வந்த யானைகள்கூட அட்டகாசம் செய்பவைகளாகத் தெரியவில்லை அவைகள் செய்தியில் குறிப்பிட்டபட்டிருப்பதிலிருந்து நீண்டகாலமாக வருடாவருடம் அங்கு வருகிறது எனத் தெரிகிறது. இதைவைத்துப் பார்த்தால் இது ஒன்றும் அவற்றிற்கு புதிய பாதையும் இல்லை.மேலும் யானைகள் எப்போதும் நிரந்தரமாக ஒரே இடத்தில் வாழ்பவையும் இல்லை உணவு நீர் தேடி நகர்ந்து கொண்டே இருப்பவை.அவைகள் ஒரே இடத்தில் இருந்தால் காட்டின் தன்மையும் மாறிவிடும் அவைகளுக்கு உணவும் நீரும்கூட கிடைக்காது....
கர்நாடக பகுதியிலிருந்து தமிழகத்திற்குவருகிறதென்றால் அவை கன்னட யானைகளா?...
அவற்றிற்கு எந்தவிதமான எல்லைக்கோடுகளும் இல்லை அவைகளிடம் வரைபடமும் இல்லை நமக்குத்தான் அந்தப் பாகுபாடெல்லாம்....
விவசாயி பாதிப்பதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது இந்தச் சிக்கலுக்கு நிரந்தர தீர்வுதான் வேண்டும் விரட்டப்படுவதெல்லாம் தற்காலிகத் தீர்வுதான்.இதற்கு அக்கறையுள்ளவர்களும் அதிகாரத்திலுள்ளவர்களும் இணைந்துதான் நிரந்தரமான தீர்வை எட்டவேண்டும்...
அச்சில் வருவதைத்தான் பெரும்பாலும் உண்மை என நம்பும் சமூகத்திற்கு, நீங்களும் பொறுப்பான வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்.ஏனெனில் வனவிலங்குகள் என்றாலே மக்களுக்கு, ஈவு இரக்கமற்ற கொடூரமானவை என்கிற பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்மனதில் பதிந்துவிடும்...
அதன்பின்னர் பாம்பைக்கண்டாலே கொல்வது போன்ற நிலைக்கு மக்கள் தயாரானதுபோல் வனவிலங்குகள் மீதும் தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் வளர்ந்துவிடும்...
யானைகள் உண்மையில் மனிதனோடு இணக்கமோடு வாழவேண்டும் என்கிற நிலையோடு இருக்கும் சாதுவானவை,அவைகள் ஒரு சிறுத்தை அல்லது புலியின் தன்மையோடு இருந்தால் இவ்வளவு வலிமையான பெரிய உருவத்தை வைத்து என்னவெல்லாம் செய்யமுடியும் ?கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்,
இந்த பூமியே தாங்காது....
உண்மையாகவே ஊடகத்துறையில் சூழலியல் சார்ந்த அறிவுத்திறன் படைத்தவர்களும் பலர் இருக்கிறார்கள்.பிரசுரிப்பற்கு முன் அவர்களிடம் ஈகோவை விடுத்து ஆலோசித்து பின் அச்சேற்றுங்கள்.நான் இதைச் சொல்வதற்கும் காரணம் இருக்கிறது கடந்த சில நாட்களில் வந்த சில பத்திரிக்கை செய்திகளையும் கீழே இணைத்திருக்கிறேன் பாருங்கள் காரணம் புரியும்...
பல சிக்கல்கள் நிறைந்த உங்கள் பணி மிக மகத்தானது.அதே சமயம் உங்கள் செய்தியின் தன்மை மக்களுக்கு அறிவுத்தெளிவை ஏற்படுத்தும் படியாகவும் இருக்கட்டும் நன்றி....
உதாரணத்திற்கு சில...
இந்தப் பச்சோந்திகள் சாதாரணமாக காணப்படும் ஓணான்கள் போல் எங்கும் வாழக்கூடியவை இதை ஏன் வினோதவிலங்கைப்போல் செய்தியாக்க வேண்டும் ? இவற்றையெல்லாம் செய்திகளாக பிரசுரிக்கும்போது மக்கள் பச்சோந்திகளை மீண்டும் மீண்டும் பிடிக்க தூண்டுகோளாகிவிடுமே ? அதை ஏன் பிடித்துக்க வேண்டும் ? அதை வனத்துறையிடம் ஏன் ஒப்படைக்க வேண்டும் ? பிறகு அவர்கள் அதை ஏன் காட்டில் விடவேண்டும் ? அது வனங்களில் மட்டும்தான் வாழவேண்டும் என்கிற சட்டவரைமுறை எதுவுமில்லையே?அது பூச்சிகளைப் பிடித்து உண்டு மனிதர்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஒரு சாதாரண விலங்கினம் இது எந்தவிதத்திலும் ஆபத்து இல்லாதது.பிறகு ஏன் இப்படி ? புரியவில்லை....
செய்தியில் உள்ள படத்திலிருக்கும் பறவை சங்குவளை நாரை அல்லது மஞ்சள் மூக்குநாரை (Painted stork) இந்தியாவில் சாதாரணமாக நீர்நிலைப்பகுதிகள் எங்கும் காணப்படுவது.ஆனால் செய்தியில் இதற்கு குறிப்பிட்டுள்ள பெயர் பூநாரை(Flamingos).பூநாரைகள் வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இங்கு வந்து சதுப்புநிலங்களில் மட்டும் பெரும்பாலும் காணப்படுபவை.அதுவும் தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரிக்கெல்லாம் வராதவை!!!...
செய்தியின் படி மோகனூர் அருகில் பிடிபட்டது முள்ளம்பன்றியாக(Porcupine) இருக்கலாம் ஆனால் செய்தியில் உள்ள படம் முள்ளெலி(Hedgehog). அல்லது பிடிபட்ட விலங்கு படத்திலுள்ளது போன்று முள்ளெலியாகவும் இருக்கலாம் ஆனால் அதற்கு முள்ளம் பன்றி என வேறுவிலங்கின் பெயரை மாற்றி ஏன் இதற்கு வைக்கவேண்டும்? இதைப் படிப்பவர்களுக்கு தவறான கற்பித்தல்தானே ?!!!....
இவை காட்டெருமைகள் இல்லை.ஊடகங்கள் மூலம் இவை எருமைகள் ஆக்கப்பட்டவை. இவை எருமை இனமே இல்லை மாட்டின் இனம்.இவை கடமா அல்லது காட்டுமாடு எனக்கூட இதனைக் குறிப்பிடலாம்...
இந்தக் கொடுமையையும் பாருங்கள் ஒரு அடிப்படை அறிவுகூட வேண்டாமா ஒரு பத்திரிக்கைத் துறையில் இருப்பவர்களுக்கு யாரோ போட்டோஷாப் செய்த இந்த ராஜநாகத்தின் படத்தை மூன்று தலையுடைய பாம்பாக ஒரு செய்தி.எந்தவிதத்திலும் அறிவை வளர்ப்பதாக இல்லை இருக்கின்ற அறிவை இழக்கச் செய்பவையாக அல்லவா இருக்கிறது!!!....
விவசாயிகளுக்கு நன்கு தெரியும் எது சீமைக்கருவேலமரங்கள்(Prosopis juliflora)என்று.இந்தச் செய்தியில் உள்ள படத்தில் இருப்பது பல நன்மைகளை கொடுக்கும் நாட்டுக்கருவேலமரங்கள்((Babultree-Acacia nilotica).இந்தச் செய்தியைப் படித்து மிச்சமிருக்கிற நன்மை செய்யும் மரங்களையும் வெட்டிவிட்டால்? கொடுமை....
சூழலியல் ஆவலுடன்,
Ramamurthi Ram
No comments:
Post a Comment